Home பெண்கள் அழகு குறிப்பு வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி கருவளையங்கள் பிரச்சினைக்கு தீர்வு

வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி கருவளையங்கள் பிரச்சினைக்கு தீர்வு

19

கருவளையங்கள் உருவாகுவதற்கு சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை, சோர்வு போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி கருவளையங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

* கருவளையங்களில் இருந்து மீட்டெடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதில் பாதாம் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. இரவில் படுக்க செல்லும் முன்பு சில துளிகள் பாதாம் எண்ணெய்யை கருவளையம் இருக்கும் பகுதியில் தடவி மென்மையாக விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். சில நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையங்களை போக்கி விடலாம்.

* சருமத்தை பளிச்சென்று மிளிர வைப்பதிலும், கருவளையங்களை விரட்டுவதிலும் தக்காளி பழத்திற்கு பங்கு உண்டு. ஒரு டீஸ்பூன் தக்காளி சாறுடன், அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை கலந்து கொள்ள வேண்டும். அதனை கருவளையம் இருக்கும் இடங்களில் மென்மையாக தடவி விட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு தடவை செய்து வந்தால் இரண்டு, மூன்று வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

* உருளைக்கிழங்கு, கருவளையங்களை போக்குவதோடு கண்களை சுற்றி ஏற்படும் வீக்கங்களை குறைக்கும் திறன் கொண்டது. உருளைக்கிழங்கை சாறு எடுத்து பஞ்சில் முக்கி கருவளையம் இருக்கும் பகுதிகளில் ஒற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் சில வாரங்களில் கருவளையங்களை நீக்கிவிடலாம்.

* பன்னீர் சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். கருவளையங் களையும் போக்கும். கண்களில் ஏற்படும் சோர்வையும் விரட்டியடிக்கும். பன்னீரை பஞ்சில் முக்கி மென்மையாக கண்களை சுற்றி வருடி வர வேண்டும். பின்னர் கண்களை மூடி கண் இமைகள் மீது நனைத்த பஞ்சினை 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். அப்படி செய்தால் கண் சோர்வில் இருந்து மீண்டு விடலாம். தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.