Home ஆரோக்கியம் மாரடைப்பும் பெண்களும்

மாரடைப்பும் பெண்களும்

34

‘களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ…’ என்றார் உள்ளே நுழைந்தவர்;.

தொடர்ந்து ‘இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு’ என்றும் சலித்துக் கொண்டார்.

வந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும் நோயாளியின் தலை கண்ணில் படவேயில்லை.
மெதுவாக அடியெடுத்து பின்தொடர்ந்து வந்த பெண்மணியின் முகமெங்கும் ஆயாசம் பரவிக் கிடந்தது.
சற்று இளைப்பதும் தெரிந்தது.
நோயுற்றதால் களைப்படைந்திருந்தாள்.

நோயில் துன்பப்படும் மனைவியை அக்கறையோடு கைபிடித்துக் கூட்டி வராது, அவளால் சமைத்துப் போட முடியாத அடுத்த நேரச் சாப்பாடு பற்றி மட்டுமே கவலைப்படும் இத்தகைய மனிதர்களைப் பற்றிச் சொல்வது என்ன?

அவளுக்கு நெஞ்சை அடைக்கவில்லை. நடு நெஞ்சில் வலிக்கவும் இல்லை. வலி இடது தோளுக்கோ கையுக்கோ வலி பரவவில்லை. வியர்த்து ஒழுகவில்லை.

நான் விபரமாகக் கேட்டபோதுதான்
காலையிலிருந்து முதுகுப்புறமாக சற்று வலிக்கிறதாகச் சொன்னாள்.

பரிசோதித்தபோது,
இருதயம் சற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
பிரஷர் சற்றுக் குறைந்திருந்தது.
ஈ.சி.ஜி யில் சிறிய மாற்றமே இருந்தது.
ஆனால் கார்டியக் ரோபனின் இரத்தப் பரிசோதனை
மாரடைப்புத்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

மாரடைப்பைக் கையாளக் கூடிய வசதியுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்பி வைத்ததால் அவருக்கு எதிர்காலத்தில் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை.

ஒரு வேளை அவள் மரணித்திருந்தால்?

பின்னர்தான் அவளின் அருமை புலப்பட்டிருக்கும்.

‘அவள் இருக்கு மட்டும் எனக்கு என்ன குறை’
என நினைந்து ஒழுகுவது மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மாரடைப்பினால் பாதிப்பு பெண்களுக்கு அதிகம்

கடுமையான மாரடைப்பினால் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்கள் அங்கேயே இறப்பதற்கான சாத்தியம்
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்
என இரு வருடங்களுக்கு முன்னர்
Circulation Dec 08, 2008
சஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை கூறியது.

காரணங்கள் எவை?
பெண்கள் அதிகமாக மரணமடைவது ஏன் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரதான காரணம் நோய் வந்தாலும் பெண்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வருவதில்லை.
ஆண்களைவிட அதிக காலதாமதமாகிறது எனக் கண்டறியப்பட்டது.
இது ஏன்?

பெண்களில் மாரடைப்பின் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை

பெண்கள் தங்கள் நோய் அறிகுறிகளுக்கான காரணம் மாரடைப்புத்தான் என உடனடியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் பெண்கள் பலருக்கும் வரும் மாரடைப்பு நோயின் வலி கடுமையாகவும் மருத்துவப் புத்தகங்களில் வருவது போல (typical) வியர்வையுடன் கூடிய கடுமையான நடுநெஞ்சு வலியாக இருப்பதில்லை.

தலை அம்மல்
முதுகு உளைவாகவோ,
களைப்பாகவோ,
நெஞ்செரிப்புப் போலவோ
வெளிப்படுவதுண்டு.

இதனால் பெரும்பாலும் வாய்வுத் தொல்லை என்றோ, சமிபாடின்மை என்றோ அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
அமெரிக்காவின் தேசிய உடல்நலத்திற்கான திணைக்களம் (NIH) செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம்,

95% சதவிகிதமான பெண்களில் வழமைக்கு மாறான கடுமையான களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், தூக்கக் குழம்பம் ஆகியனவே முக்கிய அறிகுறிகளாக இருந்தனவாம்.
30% சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கே நெஞ்சு வலி இருந்ததாம்.
45% சதவிகிதமானவர்களுக்கு நெஞ்சு வலியே இருக்கவில்லையாம்.

இதனால்தான் நோயாளிகள் கவனிப்பை ஈர்ப்பதில்லை.

மேலதிக தகவல்களுக்கு:-கிளிக் பண்ணுங்கள்

தாமதித்த மருத்துவ உதவி
பெண்கள் அதிகமாக மரணமடைவதுதற்கு இரண்டாவது முக்கிய காரணம் மருத்துவர்கள் எனலாம். பெரும்பாலான மருத்துவர்களும் நெஞ்சுவலி இருந்தால்தான் மாரடைப்பு பற்றிச் சிந்திக்கிறார்கள். இதனால் பெண்கள் பிரத்தியேகமற்ற சாதாரண அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக துரித செயற்பாட்டில் இறங்கத் தவறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கூறிய ஆய்வின் பிரகாரம்,
உடனடியாக அஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,
ஒன்றரை மணிநேரத்திற்குள் சத்திர சிகிச்சைக்கு எடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,

சேதமடைந்த இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டததை மீளவைக்கும் சிகிச்சைகள் (Reperfusion therapy) 25சதவிகிதமும்
பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே கொடுக்கப்பட்டதாம்.

ஆண் முதன்மைச் சமுதாயம்
போதாக்குறைக்கு ஆண்களை முதன்மைப்படுத்தும் எமது சமுதாய வழக்கில் ஆண்களுக்கு வருத்தம் வந்தால் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடுவதுபோல, பெண்களது நோய்களுக்கு அக்கறைபடுவது குறைவு எனலாம்.

மாரடைப்பு நோயுடன் மருத்துவ மனைக்கு வரும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் மரணமடைவதற்கு இவையே காரணம் எனலாம்.

பெண்களே நீங்கள் செய்யக் கூடியது என்ன?
பிழை எங்கிருந்தாலும், மற்றவர்கள் மீது குறையைப் போடுவதற்கு முதல் உங்களில் நீங்கள் அக்கறை எடுங்கள்.

நீரிழிவு, அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பது போன்றவையே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.
உங்களுக்கு அவை இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் கண்டறியுங்கள்.
அவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் போன்ற முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பியுங்கள்.

பெண்களுக்கு மாரடைப்பு நெஞ்சுவலியுடன் மட்டும் வருவதில்லை என்ற தெளிவுடன் இருந்து, அதற்கான ஏனைய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருங்கள்.
உங்களுக்கு திடீரென ஏற்பட்ட ஏதாவது நோயின் அறிகுறி மாரடைப்பாயிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால்
உடனடியாக இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

விரைந்து செயற்பட்டால் மாரடைப்பிலிருந்து மாத்திரமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.