Home பாலியல் சுத்தம் சுகம்தரும்

சுத்தம் சுகம்தரும்

35

சிலர், வெளியில் பார்ப்பதற்கு அழகான ஆசாமியாக இருப்பார்கள். அவர்கள் வரும்போது அந்த இடமே கமகமக்கும். ஆனால், வீட்டுக்கு உள்ளே அழுக்காகத் திரிவார்கள். இன்றைய போக்குவரத்து நெரிசல்மிக்க, புழுதி பறக்கும் சூழலில் நாம் ஒவ்வொருவரும் கூடுதல் கவனத்துடன் உடல் சுத்தத்தைப் பேண வேண்டும். உடல் சுத்தம் என்பது வெளிப்படையான உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டும் அல்ல; ஜனன உறுப்புகளையும் சேர்த்துதான்.
பெண்ணின் பிறப்பு உறுப்பில் சில திரவங்கள் இயல்பாக சுரந்துகொண்டே இருக்கும். இவற்றில் இருந்து துர்வாடை வருவதுடன் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் குளிக்கும்போது ஜனன உறுப்புகளைச் சுத்தப்படுத்துவதையும் சிறுநீர் கழித்த உடனே பிறப்பு உறுப்பைத் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி ஜனன உறுப்பைச் சுத்தப்படுத்த அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பும் சாதாரண தண்ணீருமே போதுமானது. குறிப்பாக பெண்கள் மலம் கழித்த பின்னர் ஆசன வாயை முன்பக்கம் கையால் மேலிருந்து கீழாகத்தான் கழுவ வேண்டும். மாறாக, கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் கழுவுவதால் சிறுநீர்த் தொற்று ஏற்படலாம்.
ஆண் உறுப்பின் முன் தோலில் மெழுகு போன்ற திரவம் திரளும். இதனை சுத்தப்படுத்தாவிட்டால் துர்வாடை அடிக்கும். அங்கே கிருமித் தொற்று வளரவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வோர் ஆணும் குளிக்கும்போது ஆண் உறுப்பின் முன்தோலையும் தலைப் பகுதியையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
இருமுறை பல் துலக்குவது பலரிடம் இல்லாத ஒன்று. அதனையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் குடிக்கிற தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். பல பேர் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவதே இல்லை. ‘உள்ளே போட்டுக்கொள்வதுதானே வெளியிலா தெரியப்போகிறது’ என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம். தினமும் சுத்தமான, பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகளை அணிவதே நல்லது.
சிகரெட் புகைப்பவர்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதோடு ஈறுகளும் பல்லின் எனாமலும்கூட கெட்டுப்போய்விடும். தம்பதி இருவருமே படுக்கைக்குப் போகும் முன் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மூச்சுக் குழாய் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை நோய், மலச் சிக்கல், சைனஸ் தொற்று, மூக்கில் கட்டி, சொத்தைப் பல் போன்ற காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் (Halitosis) ஏற்படும். இதுதவிர பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக உண்பவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
பொதுவாக வியர்வையில் எந்தவிதக் கெட்ட வாடையும் அடிப்பது இல்லை. ஆனால், வியர்வையுடன் பாக்டீரியா கிருமி சேர்ந்தாலோ அல்லது வேலையின் தன்மை, தட்பவெப்பம், மனக்கவலை, உடல் பருமன், தைராய்டு பிரச்னை, சிலவகை மருந்துகள் போன்ற காரணங்களைச் சார்ந்து வியர்வை நாற்றம் அடிக்கலாம். இரண்டு வேளை குளித்தால் வியர்வை நாற்றம் குறையும். குளித்து முடித்ததும் ஈரத்தை நன்கு உறிஞ்சுவதற்கு பருத்தித் துணியினைப் பயன்படுத்த வேண்டும். வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் நறுமணப் பவுடரைப் பயன்படுத்தலாம். மேலும், இறுக்கமான உடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. காலில் அணிகிற சாக்ஸ்களை துவைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்களுக்குப் பவுடர் பூசிய பின்னர் சாக்ஸ் அணிவது நல்லது. பாதங்களையும் சுத்தமாகப் பராமரித்து வரவேண்டும்.
உடல் உறவுக்குப்பின் பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது!