Home சமையல் குறிப்புகள் தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை

தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை

49

கறிவேப்பிலை மரத்தின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பயனும் மணமும் வாய்ந்தவை ஆகும். இதன் பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருவதாக அமைந்துள்ளன. இதன் இலை வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்தாகிறது.

புரோட்டோசோவா என்னும் கிருமிகளை கொள்வதில் (ஆன்டி புரோட்டோசோவல்) முதலிடம் வகிக்கின்றது. இக்கிருமிகள் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் நுண்கிருமிகள் ஆகும். மேறும் வயிற்றுக்கடுப்பை போக்கக்கூடிய ஒரு மருந்தாக (ஆன்டி ஸ்பேஸ்மோலிடிக்) கறிவேப்பிலை பயன்படுகிறது.

கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் பசியைத் தூண்டுவதோடு சீரான செரிமானத்துக்கும் துணையாகின்றது. நோய்க்கிருமிகள் எதுவாய் இருப்பினும் கறிவேப்பிலை எதிர்த்து நிற்க வல்லது. சீதபேதியைக் குணப்படுத்துவதில் (ஆன்டி டிசென்டரிக்) சிறந்தது. கறிவேப்பிலை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது வேர்க்குரு, கொப்புளங்கள் போன்ற பல தோல் நோய்களையும் போக்கும் திறன் வாய்ந்தது.

மலத்தை இளக்கக் கூடியது (லேக்ஸ்சேட்டிவ்), குளுமை தன்மை வாய்ந்தது (ரெப்ரிஜரண்ட்), வலிமை ஊட்டக் கூடியது (டானிக்), பித்தம், கபம், வீக்கம் ரத்த பித்தம் இவற்றை போக்கக்கூடியது. மூளைக்கு பலத்தை தருவதோடு ஞாபக சக்தியையும் வளர்க்கும் குணமுடையது.

கறிவேப்பிலை விஷக்கடிகளுக்கும், மருந்தாகும் என்பதால் வண்டுக்கடி, தேள்கடி, பாம்புக்கடி மற்றும் விலங்குகள் கடித்ததால் வந்த விஷத்துக்கு இதை மேற் பூச்சாகவும் உள்ளுக்கும் பயன்படுத்தலாம்.

இலையை உள்ளுக்கு சாப்பிட வாந்தியை நிறுத்தும் (ஆன்டி எமட்டிக்) கறிவேப்பிலையின் பட்டையும் வேர்ப்பகுதியும் உடலின் உள்ளுறுப்புகளைத் தூண்டும்படியாக (ஸ்டிமுலண்ட்) மருத்துவர்கள் பயன்படுத்துவர். கறிவேப்பிலையின் குச்சிகள் ஆலங்குச்சி, கருவேலங்குச்சி போல பல் துலக்கப் பயன்படுகின்றது.

சோர்வு, திசுக்களின் அழிவு இவற்றை போக்குவதில் கறிவேப்பிலையின் அனைத்து பாகங்களும் சிறந்து விளங்குகின்றன. குறிப்பாக திசுக்களின் மாற்றம் (அத்திரோ செலிரோஸிஸ்), சர்க்கரை நோய் (டையாபெட்டிஸ்), வாதசுரம் (ருமாட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ்) போன்ற நோய்களால் ஏற்படும் தீங்குகளை எதிர்த்து நிற்கக்கூடியது.

இதிலுள்ள `முராயாசினின்’ என்னும் வேதிப்பொருள் நோய் நீக்கும் மருந்தாகவும் (ஆன்டிபயாடிக்), நோய்க்கிருமி நாசினியாக (ஆன்டி பேக்டீரியல்), பூஞ்சக்காளான் கொல்லியாக (ஆன்டிஃபங்கல்) பயன்படுகிறது. கறிவேப்பிலையின் இலைகளில் மிகுதியாக “கார்பஸோல் ஆல்கலாய்ட்ஸ்” உள்ளது. மேலும் கௌமாரின் குளூகோசைட்ஸ், “ஸ்கோப்போலின்” ஆகிய மருத்துவப் பொருள்களும் அடங்கியுள்ளன.

இலையில் “பீட்டா கரோட்டின்” என்னும் சத்துப் பொருள் செரிந்துள்ளது. இதை வேகவைக்காமலோ, பொரிக்காமலோ சாப்பிடும் போது நமக்கு “பீட்டர் கரோட்டின்” சத்து முழுமையாக கிடைக்கிறது. “பீட்டா கரோட்டின்” தான் விட்டமின் `ஏ’ சத்து கண்கள், பற்கள், எலும்புகள், தோல் ஆகியவற்றுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது.

கறிவேம்பின் பட்டையினின்று எடுக்கப்படும் சத்தானது வீக்கத்தைக் கரைக்கும் (ஆன்டி இன்ஃப்ளமேட்டர்) தன்மை உடையது. கறிவேம்பின் பழங்கள் உணவாக உண்ணக்கூடியவை, சுவையுள்ளவையும் கூட பழங்களும் விட்டமின் `ஏ’ மற்றும் சுண்ணாம்பு (கால்சியம்) சத்துக்களை உள்ளடக்கியது.

பழங்களின் சதைப் பகுதி 64.9% ஈரப்பதம் உடையது. 9.76% சர்க்கரை சத்து உள்ளடக்கியது. 13.35 மி.கி. அளவு விட்டமின் `சி’ சத்தைப் பெற்றுள்ளது. 100 கிராம் பழச்சதையுள்ள 1.97 கிராம் புரதமும், 082 கிராம் பாஸ்பரஸ்ஸூம், 0.811 கிராம் பொட்டாசியமும், 0.166 கிராம் கால்சியமும் 0.216 கிராம் மெக்னீஷியமும் 007 கிராம் இரும்புச் சத்தும் அடங்கியுள்ளன.

1.கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி இத்துடன் போதிய மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்துக் பொடித்து வைத்துக் கொண்டு குழம்பு, ரசம் ஆகியவற்றுக்கு முன்பாக சுடுசோற்றோடு சேர்த்து சிறிது நல்லெண்ணெய்யோ, நெய்யோ கலந்து உண்ண வயிற்று மந்தம், மந்தபேதி, மலக்கட்டு, நீரிழிவு ஆகியன விலகும்.

2. 20 கிராம் கறிவேப்பிலையுடன் 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் மோரில் கலந்து சிலநாட்கள் குடித்துவர உஷ்ணபித்தம், கருப்பைச் சூடு குணமாகும். கருவேம்பிலுள்ள “கார்பஸோல் ஆல்களலாய்குகள்” கருமுட்டை உற்பத்தியைத் தூண்டி பிள்ளைப்பேற்றுக்கும் துணை நிற்கின்றன.

3.ஐந்தாறு கறிவேப்பிலை இலையோடு வயதுக்குத் தக்கபடி 1 முதல் 3 மிளகு வரை சேர்த்து அரைத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து குழந்தைகளை நீராட்டிய பின் உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு மந்தம் நீங்கி பசியுண்டாகும்.

4. கறிவேப்பிலை ஈர்க்கோடு சிறிது முலைப்பால் சேர்த்து நசுக்கிப் பிழிந்து சிறிது இலவங்கமும் திப்பிலியும் சேர்த்துக் கொடுக்க வாந்தி நிற்கும். பசி உண்டாகும்.

5.கறிவேப்பிலையோடு தேங்காய், உப்பு, புளி, பருப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவோடு சேர்த்து உண்ண வயிற்றிலுள்ள வாயு வெளியேறும், பித்தம் போகும் பசி மிகும்.

6.கறிவேப்பிலையோடு நீர் சேர்த்து சங்கு கொண்டு இழைத்து முகப்பருக்கள் மீது பூசிவர பருக்கள் நாளடைவில் மறையும். இதையே சிறிது மோரில் கலந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாவதுடன் சீதபேதியும் குணமாகும்.

7.ஒருபங்கு கறிவேப்பிலையுடன் கால் பங்கு அரிசி திப்பிலி சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வேலைக்கு இரண்டு வெருகடி அளவு (சுமார் 5 கிராம்) என சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும். சர்க்கரை நோய்க்கு இது ஒரு துணை மருந்தாக அமையும்.

8.சிறிதளவு கறிவேப்பிலையுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், கசகசா, லவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்த்து மைய அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளின் மீதும். பிரசவித்தபின் ஏற்பட்ட வரிவடிவ தழும்புகளின் மீதும் பூசிவர நாளடைவில் அவை மறையும்.

9. நல்ல சாறுடன் கூடிய புதிதான கறிவேப்பிலை இலை ஒரு பிடி எடுத்து அரைத்து அத்துடன் சுமார் 20 கிராம் அளவுக்கு ஆலம் விழுதும் 20 கிராம் அளவுக்கு வெந்தயமும் சேர்த்து 500 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்குக் தடவிவர தலைமுடி கருமை பெறும். செழுமையுடன் நீண்டு வளரும்.

10.கறிவேப்பிலையைத் துவையலாகவோ சோற்றிலிடும் பொடியாகவோ அன்றாடம் சாப்பிட்டு வர ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டிக்கும் ஆற்றல் உடையது. மேலும் இதய நோய் வருவதை தடுக்கிறது.

11.நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 10 இலைகளும் மாலையில் 10 இலைகளும் மென்று தின்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை உளவு மட்டுப்படும். சளியும் குறையும், குரல் மென்மையடையும்.

12.கறிவேப்பிலையுடன் துவரம்பருப்பு, இஞ்சி, சீரகம், பெருங்காயம் கலந்து பொடித்து சாப்பிட்டு வர வாய்வு, சீதளம் காரணமாக உண்டான இடுப்பு பிடிப்பு, கை, கால்கள், தொடைப் பகுதியில் ஏற்பட்ட பிடிப்புகள், வலி ஆகியன குணமாகும்.

13.கறிவேப்பிலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து விழுதாக்கி தலைக்குத் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளித்து வர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி வளம் பெறும்.

14.கறிவேப்பிலையோடு மஞ்சளும், சீரகமும் சேர்த்து அரைத்து உள்ளுக்கு மோரில் கலந்து கொடுக்க சித்தப்பிரமை (இன்சேன்டி) சில மாதங்களில் குணமாகும்.

15.மூளைத் திசுக்கள் செயல் குன்றாமல் இருக்க மூளையை பயன்படுத்தி வேலை செய்பவர்கள் அன்றாடம் கறிவேப்பிலையை உணவுடன் சேர்க்க வேண்டும்.