Home பெண்கள் தாய்மை நலம் கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு

கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு

27

வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவிழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு. ஆனால் இந்த சமயத்தில் தான் கர்ப்பிணிப் பெண்கள் ஒருநாளுக்கு குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சினை நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று (Urinary tract infection). இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் முதல் மூன்று மாதங்கள் தான் குழந்தையின் கண், மூக்கு, இதயம் என எல்லா உடல் உறுப்புகள் வளரும் காலம். அதனால் இந்த சமயத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று தடுக்க வழிகள் :

1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
2. எலுமிச்சம் சாற்றில் இருக்கும் அமிலத்திற்குக் கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பதால் எலுமிச்சைச்சாறு குடிப்பது மிக நல்லது.
3. வேலைக்குப் போகிற பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில் சிறுநீர் கழிக்கச் சிரமப்பட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாது. வீட்டிலிருக்கும் போதாவது அதிகபட்சமான தண்ணீர் குடிப்பது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் கால் வீக்கம் இருக்கிறது என்று பார்லி தண்ணீர் குடிப்பார்கள். இதனால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகும் ஆபத்து உள்ளது. விரும்புகிறவர்கள் வாரம் ஒருமுறை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் குழந்தை வளர வளர பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும். ஐந்து மாதத்தில் இருக்கும் பனிக்குட நீரின் அளவு, ஒன்பது மாதத்தில் இருக்காது. வெயில் காலத்தில் இன்னும் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் குழந்தை மூச்சுவிட, வளர, அசைய என இந்த காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு நீர்ச்சத்து தேவைப்படும். இந்த நீர் அளவு குறைந்து போனால் குழந்தையின் உடம்பில் இரத்த ஓட்டம் குறையும். இரத்த ஓட்டம் குறைந்தால் குழந்தையின் உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.

குழந்தையைச் சுற்றி தண்ணீர் குறைவாக இருந்தால் குளூக்கோஸ் டிரிப்ஸ் ஏற்றவேண்டும். குறைந்திருக்கும் நீர்ச்சத்தை ஈடுசெய்ய வேண்டும். இல்லையெனில் குழந்தையால் சரியாக சுற்றிவர முடியாது. கர்ப்பப்பையில் குழந்தை ஒட்டிக் கொள்ளும். கர்ப்பப் பையானது தொப்புள் கொடியை அழுத்தும். நீர் சரியான அளவில் இருந்தால்தான் தொப்புள் கொடி மிதக்கும். அப்போது தான் குழந்தையின் உறுப்புகளுக்கு சரியான அளவில் இரத்த ஓட்டம் கிடைக்கும். அதனால் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தாயும் குழந்தையும் நலமாக இருப்பார்கள்.