Home ஆரோக்கியம் பெண்களின் பிறப்புறுப்பு கருவாய் நோய்கள்

பெண்களின் பிறப்புறுப்பு கருவாய் நோய்கள்

84

பெண்கள் மருத்துவம்:பெண்களை பயமுறுத்தும் ஆட்கொல்லி நோய்களில் சமீபகாலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கே முதலிடம். வயதான பெண்களை அதிகம் பாதித்த இந்த நோய், இப்போது, இளம் பெண்களையும் விட்டு வைப்பதில்லை. கர்ப்பப்பை புற்றுநோயையும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயையும் பல பெண்கள் ஒன்றென நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டும் வேறு வேறு. கர்ப்பப்பை புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்று போன பெண்களையே அதிகம் தாக்குவது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எல்லா வயதுப் பெண்களையும் தாக்கும். இது இந்தியாவில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

எப்படி வருகிறது?

ஹியூமன் பாப்பிலோமா (சுருக்கமாக ஹெச்.பி.வி.) என்கிற வைரஸின் தாக்குதலே நோய்க்கான காரணம். இந்த வைரஸால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வர, 100 சதவிகிதமும், வல்வர் எனப்படுகிற பிறப்புறுப்பின் வெளியிலுள்ள பகுதியில் புற்றுநோய் வர 40 சதவிகிதமும், பிறப்புறுப்பில் புற்றுநோய் தாக்க 60 முதல் 90 சதவிகிதமும், ஆசனவாய் புற்றுநோய் வர 80 சதவிகிதமும், அந்தரங்க உறுப்பில் மரு தோன்ற 100 சதவிகிதமும், தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் வர 12 முதல் 70 சதவிகிதமும் அபாய வாய்ப்புகள் உள்ளன.

எப்படிப் பார்த்தாலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கே முதலிடம். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், இந்த வைரஸ் தாக்கும்போது, அது அழிக்கப்பட்டு விடும். எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு, வைரஸ், செல்களை தாக்கி, அதன் விளைவாக புற்றுநோய் உருவெடுக்கிறது.

யாருக்கு அபாயம் அதிகம்?

திருமணத்துக்கு முன்பே உடலுறவில் ஈடுபடுவோருக்கு. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு. பல பெண்களுடனும் உறவு வைத்திருக்கும் கணவர்களால், மனைவிகளுக்கு.

அறிகுறிகள்?

அசாதாரணமான நாற்றத்துடன் வெள்ளைப்படுதல். அது பச்சை நிறம் கலந்தும், அரிப்புடனும் வெளிப்படுதல். அப்படி இருந்தால் அந்தத் தொற்றுக்கு உடனடியாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால், அது பெரிதாகி, நாளடைவில் செல்களை பாதித்து, புற்றுநோய்க்குக் காரணமாகலாம். உறவின் போது ரத்தப்போக்கு உண்டாவது. இரண்டு மாதவிடாய்க்கு இடையில் திடீரென ரத்தப்போக்கு தென்படுதல். அசாதாரணமான வயிற்று வலி.

என்ன சோதனை?

திருமணமான எல்லா பெண்களும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் பாதிப்பைக் கண்டறிய ‘பாப் ஸ்மியர்’ சோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்து 3 நாள்கள் கழித்து இந்தச் சோதனையை மேற்கொள்ளலாம். தட்டையான சிறிய கருவியின் மூலம், கர்ப்பப்பை வாயில் உள்ள செல்களைச் சுரண்டி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி, மைக்ரோஸ்கோப் கருவி மூலம் பார்த்து, புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்கிற சோதனை இது. வலியில்லா சோதனை. 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கட்டணம்.

கர்ப்பப்பையின் உடல் பகுதிக்கும், அதன் வாய்க்கும் இடையில் உள்ள பகுதியில்தான் புற்றுநோய்க்குக் காரணமான செல்களில் மாற்றங்கள் தெரியும். அதை ‘லிக்யுட் பேஸ்ட் சைட்டாலஜி’ என்கிற அட்வான்ஸ்டு சோதனையின் மூலம் பாப் ஸ்மியரைவிட துல்லியமாகக் கண்டறியலாம். இதுவும் வலியில்லாதது. இதற்கான செலவு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை. இந்த இரு சோதனைகளுமே மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவையின்றி, உடனே வீட்டுக்குத் திரும்பும் அளவுக்கு எளிமையானவை. வருடம் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம்.

மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு இந்த நோய்க்கான அபாயம் அதிகம் என்பதால், அவர்கள் வருடாந்திர உடல் பரிசோதனையின் போது இதையும் தவறாமல் செய்ய வேண்டும். தடுக்க முடியுமா? கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமலே காக்கக்கூடிய தடுப்பூசி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 10 வயது சிறுமிகளுக்கே இந்த ஊசியை போடலாம். அந்தச் சிறுமி பூப்பெய்தியிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

திருமணமாகாத பெண்களுக்கு, அதாவது, உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு இந்த ஊசியைப் போட்டால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தாக்கத்திலிருந்து 100 சதவிகித பாதுகாப்பு கிடைக்கும். ஒருவேளை அந்த வயதில் போடவில்லை என்றாலும் பிரச்னையில்லை. திருமணமாகி, உறவில் ஈடுபட்ட பெண்களுக்கும், 45 வயது வரை இந்த ஊசியைப் போடலாம். ஆனால், அது 100 சதவிகித பாதுகாப்பைத் தரும் எனச் சொல்வதற்கில்லை.