Home ஆரோக்கியம் அல்சர் கவனம் தேவை

அல்சர் கவனம் தேவை

53

அல்சர் எனப்படும் குடற்புண் பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேபராஸ்கோபி, எண்டோஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விளக்கமளிக்கிறார்.
சிலருக்கு நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறுவலி போன்றவை அடிக்கடி வருவதுண்டு. அவ்வாறு நேரிடும் போது மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட்கொள்வார்கள். அல்லது குளிர்பான கடைக்கு சென்று சோடா வாங்கி குடிப்பர். அது மிகவும் ஆபத்தானது. நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறுவலி அடிக்கடி ஏற்படுவதால் வயிற்றில் அல்சர் இருக்க வாய்ப்பிருக்கிறது.

வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். எனவே, இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியான உட்புறத்தில் ஏற்படும் புண் குடற்புண் எனப்படுகிறது. செரிமான பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடற்புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாக சுரப்பதும் உண்டு. இதை அமில குடற்புண்கள் என்றும் அழைக்கிறோம். மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவு, இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவு, கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும். புகைபிடித்தல், புகையிலையை சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழிவகுக்கின்றன. குடற்புண் ஏற்பட்டால் மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காக பின்பற்ற வேண்டும்.

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. பச்சையான வாழைப்பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தை பெற்றிருக்கின்றன. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படும் போது ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப்பாகத்தை சற்று உயர்த்தி கொள்ளவும். முறையாக, மன அழுத்தம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். புகை பிடிக்கக் கூடாது. மது, காபி பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். வயிற்று வலியை அதிகப்படுத்தக்கூடிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. சத்தான உணவுகளை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். காபி, மது, பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். தினமும் சாப்பிடும் டீ-யின் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.