Home காமசூத்ரா ஆண் பெண் உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!!

ஆண் பெண் உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!!

47

கண்மணிக்கு முதல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள். கணவனால் சரிவர இயங்க முடியவில்லை. ஆணுறுப்பு வலிக்கிறது என விரைவில் எடுத்துவிட்டு படுத்து விட்டான். கணவனுக்கு ஏதோ அசதிபோல என அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது முதலிரவில் மட்டுமல்ல… அடுத்த ஒரு வாரமும் இப்படித்தான் நடந்தது. டாக்டரிடம் பரிசோதனைக்காக கணவனை அழைத்துச் சென்றாள்.

ஆணுறுப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவளது கணவனுக்கு பைமோஸிஸ் எனப்படும் பிறப்புக் கோளாறு இருக்கிறது என்றார். ‘அதாவது, ஆணுறுப்பின் முன்தோலானது பின்பக்கம் தள்ள முடியாதபடி இறுக்கமாக இருக்கும். சர்கம்சிசன் எனப்படும் ஆணுறுப்பின் முன் தோலை வெட்டி நீக்கும் சிகிச்சையை செய்தால் சரியாகிவிடும்… கவலைப்படத் தேவையில்லை’ என்றும் டாக்டர் சொல்லிவிட்டார். இருந்தும் கண்மணி அவள் கணவனிடம் ‘நீங்களும் உங்க குடும்பமும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என சண்டை போட்டாள்.

உண்மையில் கண்மணியின் கணவனுக்கு அப்படி ஒரு பிரச்னை இருந்ததே அப்போதுதான் தெரிந்தது. மற்றபடி அவன் மீது எந்தத் தவறும் இல்லை. இது போன்ற பிரச்னைகள் இப்போது சகஜமாக நடக்கின்றன. அதிக விவாகரத்து வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. பாலியல் பிரச்னைகளை வெளியே சொல்ல பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். அதனால்தான் பாலியல் பற்றிய அறியாமை மக்களிடம் இன்னும் நிலவுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகள் வெறும் கட்டண வசூலாகத்தான் நடைபெறுகிறதே தவிர, அதில் ஆணுறுப்பு பரிசோதனை கூட நடைபெறுவதில்லை. இந்த பிறப்புக்கோளாறை ஆரம்பத்தில் கண்டறிந்து இருந்தால் முதலிரவு முழுமை இல்லாத இரவாக மாறியிருக்காது. இப்போது அறியாமல் நடந்த ஒரு பிரச்னை தாம்பத்திய வாழ்க்கைக்கே எதிரியாக மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் தாம்பத்திய உறவில் பிரச்னை வந்தால் குடும்பநல கோர்ட்டுக்குப் போய் பெண்வீட்டார் Null and Void Certificate கேட்பார்கள்.

அதாவது, அவர்களுடைய பெண் இன்னும் கன்னியாக இருக்கிறாள் எனும் சான்றிதழ். அதை பயன்படுத்தி இரண்டாவது திருமணம் செய்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால், பையனின் வீட்டில் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கொடுத்தால் அவர்களது பையன் ஆண்மையற்றவன் என ஆகிவிடும் என மறுப்பார்கள். இப்போது எல்லாம் பெண் வீட்டார் நேராக உயர்நீதி மன்றத்தை அணுகி இபிகோ 420 சட்டப்பிரிவின் படி சீட்டிங் கேஸ் கொடுத்துவிடுகிறார்கள். இப்படி கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் வைத்துவிடலாம்.

எனவே, மணமகன் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. திருமணத்துக்கு முன் ஒரு முறையான மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வதன் மூலம் ‘ஏமாற்றிவிட்டார்கள்’ என்னும் அவப்பெயரில் இருந்தும் தப்பிவிடலாம்.ஜனன உறுப்பில் பிரச்னை என்றால் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. சரிசெய்யக் கூடிய பிரச்னைகள்தான் நிறைய. பைமோஸிஸ் மற்றும் விதைகளில் ஏற்படும் பிரச்னைகளை மருத்துவ சிகிச்சைகளின்
மூலம் சரிசெய்துவிட முடியும்.

சிலருக்கு சிறுநீர் துவாரம் கீழ்நோக்கி இருக்கும் (Hypospadias). சிலருக்கு மேல் நோக்கி இருக்கும் (Epispadias). இவற்றையும் மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம். பெண்களுக்கும் ஜனன உறுப்பு கோளாறு, ஹார்மோன் கோளாறுகளை திருமணத்துக்கு முன்னே ஓரளவு கண்டறிந்து சிகிச்சை செய்து சரி செய்துவிட முடியும். எந்தப் பிரச்னை இருந்தாலும் திருமணத்துக்கு முன்னால் உண்மையை சொல்லிவிடுவதுதான் நல்லது.

சில ஆண்களுக்கு செக்ஸ் கொள்ளும்போது Performance Anxiety என்னும் சொல்ல முடியாத பயம் இருக்கும். Phobic fear of penetration எனும் பிரச்னை காரணமாக ‘உறவின் போது இறந்துவிடுவோமோ’ என்றுகூட சில பெண்கள் பயப்படுவார்கள். Vaginismus பிரச்னை உள்ள பெண்கள் பயத்தில் யோனியை இறுக்கிப் பிடிப்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து சரிசெய்யலாம். மன ரீதியாக பிரச்னைகள் இருப்பின் Sex counseling therapy மூலம் சிகிச்சை அளித்து சரி செய்யலாம்.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைவிட பிரச்னையை எப்படி தாண்டுவது என்றே தம்பதிகள் முயற்சி செய்ய வேண்டும். திருமணத்துக்கு முன் முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எந்தவிதமான உயர்வு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் உடல் ரீதியான குறைகளை சரிசெய்வதற்கான முயற்சியை எடுத்தால் தாம்பத்திய வாழ்க்கை சுகமாக அமையும்.