Home சூடான செய்திகள் 3 சூப்பர் ஓபனிங்… மூன்றே நாட்களில் ரூ 1,16,87240!

3 சூப்பர் ஓபனிங்… மூன்றே நாட்களில் ரூ 1,16,87240!

20

கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஓபனிங் கிடைத்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘3’.

முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் இந்த கொலவெறி புகழ் படத்துக்குக் கிடைத்துள்ள வசூல் ரூ 1,16,87240.

படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாதான் படத்தை சென்னையில் விநியோகம் செய்துள்ளார். சென்னை நகருக்குள் மட்டும் 25 அரங்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் இந்தப் படம் ஓடுகிறது. இன்று திங்கள்கிழமையும் கூட காலை மற்றும் பகல் காட்சிக்கு 90 சதவீத பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.

படம் குறித்து சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், படத்துக்கான வசூல் நல்ல நிலையில் இருப்பது ஐஸ்வர்யாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை தவிர்த்து செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 50 அரங்குகளில் 3 வெளியாகியுள்ளது. அனைத்திலுமே நல்ல வசூல். மூன்று நாட்களும் 95 சதவீத பார்வையாளர்கள் வந்துள்ளனர். பல அரங்குகளில் ஹவுஸ்புல் போர்டுகள்!

மதுரையில் இந்தப் படத்தை அன்பு வெளியிட்டுள்ளார். வசூல் குறித்து அன்பு கூறுகையில், “மதுரையில் இதுவரை தனுஷ் படம் எதுவும் இந்த அளவு அதிக கலெக்ஷன் குவித்ததில்லை. இந்த நிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என நம்புகிறேன்,’ என்றார்.

ஆனால் இந்த போக்கு நீடிக்குமா? முதல் மூன்று நாள் வசூலை வைத்து படத்தின் வெற்றியைக் கணிக்க முடியுமா?

இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்பு, “கொலவெறி பாட்டுக்கு கிடைத்த பாப்புலாரிட்டி, படத்துக்கான அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு போன்றவைதான் இந்த பெரிய ஓபனிங்குக்கு காரணம். இதே காரணங்கள்தான் படம் குறித்த சில எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. சிலர் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் இப்போதே லாபகரமான ஒன்றுதான். இன்னும் ஒரு வாரம் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடினாலே போதும்… 3 சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடலாம்,” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா கூறுகையில், “விநியோகஸ்தர்கள் ஸ்வீட் கொடுத்து இந்தப் பட வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வார முடிவிலேயே அவர்களுக்கு போட்ட முதலுக்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மதுரை அன்பு போன்றவர்கள் வெளிப்படையாகவே படத்தின் வசூல், லாபம் போன்ற விவரங்களைக் கூறி வருகின்றனர். வேறென்ன வேண்டும்?,” என்றார்.

சத்யம் திரையரங்கில் இந்தப் படம் இன்று வரை 100 சதவீத பார்வையாளர்களுடன் ஓடுகிறது. இதுகுறித்து சத்யம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சமீபத்தில் வெளியான படங்களில் அசாதாரணமான துவக்கம் என்றால் அது ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3 படத்துக்குத்தான். வணிக ரீதியில் இது ஒரு நல்ல படம்,” என்றார்.