Home குழந்தை நலம் வெயில் கால நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க….!

வெயில் கால நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க….!

27

தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில் கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால், பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில் விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற கேம்களை வீட்டில் அமர்ந்து விளையாடச் சொல்லலாம்.
வேர்க்குருவை தவிர்க்க ஒரு நாளில் இருமுறை குளிப்பதும், விளையாடிய பின்பு கை கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவுவதும் உடல் தூய்மையை அதிகரித்து நோய் தாக்கத்தை குறைக்கிறது.
வெளியில் செல்லும்போதோ அல்லது விளையாடும்போதோ தலையில் தொப்பியும், குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க, கண் கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியச் செய்வதும் அவசியம்.
வெயில் காலங்களில் குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம் விளையாடும் குஷியில் சிறுநீர் கழிக்கக்கூட மறந்துவிடுவார்கள். அதனால், அவர்களை இந்த விஷயத்திலும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் அதை எடுத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், அந்த உணவு வகைகளை நன்றாக சூடாக்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும் வயிற்றுக்கும் நல்லது. இதனால் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை தடுக்கலாம். அதுவும் வெயில் காலத்தில் வயிற்றுபோக்கு பிரச்சினைகள் வந்துவிட்டால், குழந்தைகளின் உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விரைவில் சோர்ந்து விடுவார்கள்.
வெளியில் செல்லும் போது, வணிக நோக்கத்தை மையமாகக் கொண்ட சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சில கடைகளை தவிர்த்து, எளிய எலுமிச்சை சாறு பானத்தை வீட்டிலேயே தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. தண்ணீரை மாற்றி மாற்றி குடிப்பதால் ஏற்படும் தொண்டை சம்மந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம்.
வெயில் காலத்தில் குழந்தைகள் அணியும் ஆடைக்கும் முக்கியத்துவம் தந்து, அரிப்பு ஏற்படுத்தாத, வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம்.
சாதாரண பவுடர்களுக்கு பதில் வேர்க்குருவைத் தடுக்கும் பவுடர்களை குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது நல்லது