Home பெண்கள் அழகு குறிப்பு வறண்டு போன, கரடுமுரடான கைகளை மென்மையாக்க 7 குறிப்புகள்

வறண்டு போன, கரடுமுரடான கைகளை மென்மையாக்க 7 குறிப்புகள்

25

நமது சருமமானது, ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால், காற்று, சூரிய வெப்பம், அழுக்கு, வேதிப்பொருள்கள் போன்றவற்றின் பாதிப்பால் சருமத்தின் வெளி அடுக்கு சேதமடைந்து, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் குறையக்கூடும்.

உங்கள் கைகள் வறண்டும் கரடுமுரடாகவும் இருந்தால், உங்கள் கைகளை மீண்டும் மென்மையாக்க பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்:

ஆலிவ் எண்ணெய் (Olive oil)

காரணம்: பழங்காலம் முதலே மென்மையான சருமத்தைப் பெற உதவும் பிரதான பொருளாக ஆலிவ் எண்ணெய் திகழ்ந்து வருகிறது, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகளும் ஆரோக்கியமளிக்கும் கொழுப்பு அமிலங்களும் கைகளில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன.தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை: எண்ணெயை வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் கொண்டு, கைகளில் தேய்த்து 5-10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.தினமும் இரண்டு முறை இதனைச் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும், பிறகு தேவைப்படும்போது மட்டும் செய்யலாம்.

ஆலிவ் எண்ணெயில் பழுப்பு சர்க்கரை கலந்து, அதை சருமத்தின் இறந்த செல்களை அகற்றவும் பயன்படுத்தலாம். எண்ணெய் மற்றும் சர்க்கரையைக் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்துகொள்ளவும், அதனை கைகளில் நன்கு தேய்த்து ஐந்து நிமிடம் விடவும். பிறகு கழுவவும். உலர்ந்த பிறகு மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.

கற்றாழை (Aloe Vera)
காரணம்: கற்றாழை இயற்கையிலேயே ஈரப்பதமளிக்கும் பண்பு கொண்டது, இது சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைக்க உதவுகிறது.அதுமட்டுமின்றி, இது வேனிற் கட்டிகளுக்கு ஆறுதலளிக்கக்கூடியது, முகப்பருக்களை குணப்படுத்தக்கூடியது, சருமத்தையும் பொலிவு பெறச் செய்யக்கூடியது.

பயன்படுத்தும் முறை: கற்றாழையிலிருந்து சோற்றைப் பிரித்தெடுத்து, கைகளில் பூசி மசாஜ் செய்யவும்.10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பால் கிரீம் / மலாய் (Milk Cream/Malai)
காரணம்: பால் கிரீமில் அதிக கொழுப்பு உள்ளது, அது இயற்கையான ஈரப்பதம் அளிக்கும் பொருளாகவும் செயல்படுகிறது.சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவுகின்ற லாக்டிக் அமிலமும் பாலில் உள்ளது.

பயன்படுத்தும் முறை: ஒரு ஸ்பூன் பால் கிரீமை கைகளில் போட்டுத் தேய்த்து, பத்து நிமிடங்கள் அப்படியே விடவும்.வெதுவெதுப்பான நீரில் பிறகு கழுவவும். இதனை தினமும் செய்யலாம்.

மாற்றாக, பால் கிரீம் மற்றும் கடலை மாவு இரண்டையும் சம அளவில் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். அந்த பேஸ்ட்டைப் பூசி, 15 நிமிடங்கள் கழித்து பிறகு கழுவவும்.

ஓட்மீல் ஸ்கிரப் (Oatmeal scrub)
காரணம்: ஒட்மீலில் லிப்பிடுகள் உள்ளன, இவை ஈரப்பதத்தை சருமம் இழக்காதபடி தக்கவைக்கும் பண்பு கொண்டவையாகும்.இது சருமத்தை சுத்தம் செய்யவும், இறந்த செல்களை அகற்றவும் கூட சிறப்பாகப் பலனளிக்கும்.

பயன்படுத்தும் முறை: ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றையும் ஒரு டேபிள்ஸ்பூன் தேனையும் இரண்டு டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்மீலையும் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை கைகளில் பூசிக்கொண்டு, சில நிமிடம் விடவும். பிறகு கழுவிட்டு மாய்ஸ்டுரைசர் போடவும்.

தேன் (Honey)
காரணம்: தேன் ஒரு இயற்கை மாய்ஸ்டுசரைசர் ஆகும்.இது முதுமையின் அறிகுறிகளைத் தாமதப்படுத்துகின்ற, ஆன்டிஆக்ஸிடண்டுகளையும், நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது.

பயன்படுத்தும் முறை: தேனை கைகளில் பூசிக்கொள்ளவும்.சுமார் 15 நிமிடம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இரண்டு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து அந்தக் கரைசலையும் பயன்படுத்தலாம். அந்தக் கரைசலை கைகளில் தேய்த்து மசாஜ் செய்யவும். சுமார் 15 நிமிடம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வெண்ணெய்ப்பழம் (Avocado)

காரணம்: இந்த அற்புதமான பழத்தில் எண்ணெய் வகைகளும் ஈரப்பதமூட்டும் பண்புள்ள இயற்கைப் பொருள்களும் அத்துடன் சருமத்திற்கு மிகவும் பலனளிக்கக்கூடிய C, E ஆகிய வைட்டமின்களும் அதிகமுள்ளன.

பயன்படுத்தும் முறை: ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன், பழுத்த வெண்ணெய்ப்பழ சதைகளைப் போட்டு கலந்துகொள்ளவும்.இதனை கைகளில் தேய்த்துக்கொண்டு சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும்.

வாழைப்பழம் (Banana)
காரணம்: வெண்ணெய்ப்பழத்தைப் போலவே, வாழைப்பழத்திலும் ஈரப்பதமளிக்கும் பண்புகள் உள்ளன, இவை கைகளை மென்மையாக்க மிகவும் உதவும்.

பயன்படுத்தும் முறை: இரண்டு டீஸ்பூன் தேன் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் பழுத்த வாழைப்பழம் ஒன்றைப் பிசைந்து போட்டு கலக்கிக்கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை கைகளில் தேய்த்து மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உலர்ந்த பிறகு மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.

பொதுவான சில குறிப்புகள் (General Tips)

சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: இயற்கையாக சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை அகற்றிவிடுகின்ற பதப்படுத்தும் ரசாயனங்கள், நறுமணப் பொருள்கள் மற்றும் பிற வேதிப்பொருள்களும் சோப்புகளில் உள்ளன.சோப்புகளுக்குப் பதில் மாய்ஸ்டுரைசிங் க்ளென்சர்களைப் பயன்படுத்தலாம்.
கையுறைகளை அணிந்துகொள்ளுங்கள்: தொட்ட வேலைகள் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்யும்போது, கைகளைப் பாதுகாக்க இரப்பரால் ஆன கையுறைகளை அணிந்துகொள்ளவும்.
இரவில் தூங்கும்போது: இரவில் தூங்கச் செல்லும் முன்பு, பெட்ரோலியம் ஜெல்லி, கோக்கோ பட்டர் அல்லது ஷீயா பட்டர் அல்லது ஏதேனும் மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தவும்.
ஹேன்ட் கிரீம்: வெளியே சென்றாலும், ஒரு ஹேன்ட் கிரீமை உடன் வைத்திருக்கும் பழக்கம் நல்லது, கைகள் உலர்ந்து போவதுபோல் உணர்ந்தால், உடனே கிரீமைப் பயன்படுத்தலாம்.