Home ஆரோக்கியம் மென்மையாக இருப்பதால், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும்

மென்மையாக இருப்பதால், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும்

34

குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருப்பதால், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது? அதைத் தவிர்ப்பது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு உடம்பில் சிவப்புப் புள்ளிகள் இருந்தாலும், தோலின் நிறம் மஞ்சளாக இருந்தாலும், முதுகிலும் ஆசனவாயிலும் நீல நிறத்தில் திட்டுத்திட்டாக இருந்தாலும் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. 10 நாட்களில் அது தானாகவே சரியாகிவிடும்.

பிறந்த குழந்தைகளுக்குத் தலையில் படை போன்று கருப்பாக இருந்தால், அதில் எண்ணெய் விட்டு, சீப்பால் வாரி எடுக்கக் கூடாது. இதனால் அந்த இடம் புண்ணாகுமே தவிர, ஆறாது. அப்படியே விட்டாலே போதும். ஒரு மாதத்துக்குள் அந்த முடிகள் உதிர்ந்து சரியாகிவிடும்.

குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால் அவர்களுக்கு சொறி, சிரங்கு ஏற்படலாம். உடனே, குழந்தைகளை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு சொறி வந்தாலும், அது ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் பரவிவிடும். சுத்தமாக இருப்பதன் மூலம், இந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ‘முத்துமரு’ எனப்படும் மரு வகையும் ஒரு தொற்றுநோயே. வைரஸால் வரும் இந்த மருவுக்கும் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

குண்டாக இருக்கும் குழந்தைகளுக்குத் தோலில் மடிப்புகள் ஏற்படும். அந்த மடிப்பில் காற்று புக முடியாமல் சிவப்பு நிறத்தில் வெடிப்பு (Atopic dermatitis) ஏற்்படும். கூடவே வேர்க்குரு, படை, அரிப்பு ஏற்பட்டு தூக்கத்தைத் தொலைத்துவிடுவார்கள். இது மரபியல் ரீதியாகவும் வரலாம். இந்த பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு சாக்லேட், பால் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்குச் சருமம் சீக்கிரமே காய்ந்துவிடும் என்பதால், ஈரப்பதம் உள்ள சோப்களையும், பருத்தி உடைகளையும் பயன்படுத்த வேண்டும். மூன்று வயதுக்கு மேல் இது மாறிவிடும்.

குழந்தைகளுக்கு அதிக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஆசனவாய் சிவந்துவிடும். இதனால் வலியுடன்கூடிய எரிச்சல் ஏற்பட்டு, குழந்தை அழலாம். பொதுவாக, குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் இருக்கும் சர்க்கரையை ஜீரணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் மலத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கவேண்டியது அவசியம். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு இருக்கும் மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாகத் தாய்ப்பாலை நிறுத்தினால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும். ஆசனவாயில், தேங்காய் எண்ணெய் தடவினாலே போதும்.

பனிக்காலத்தில் குழந்தைகளின் சருமம் எளிதில் காய்ந்து, உதடுகள் வறண்டுபோகலாம். அதற்கு உடலில் ஈரப்பதம், எண்ணெய்ப்பசை இல்லாததே காரணம். தாகம் இல்லை என்றாலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கான மாய்ஸ்சரைசிங் (moistursing) க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதால், குழந்தையின் சருமத்தில் கிருமிகள் தாக்கி, புண்களை ஏற்படுத்தும். மேலும், கிருமிகள் குழந்தையின் வயிற்றிலும் போய் உடல் உபாதையை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும். சுகாதாரம் குறைந்தவர்கள் குழந்தையைத் தூக்குவதால் இந்த வகைக் கிருமிகள் பரவும்.

குழந்தைகளின் ஆடைகளில் நிறத்துக்காக மட்டமான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால், சருமப் பிரச்னை வரலாம். அதுவும், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்குச் சருமப் பிரச்னை எளிதில் தாக்கும். குழந்தைகளுக்கு எப்போதும் மெலிதான பருத்தி ஆடைகள்தான் ஏற்றது. முடிந்த வரை வெள்ளை நிற ஆடைகளையே பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் தடிமனான பருத்தி ஆடையை அணிவிக்கலாம்.

பூச்சிகள் வராமல் இருக்க, துணியில் வைக்கும் நாப்தலின் உருண்டை களைக் குழந்தைகள் ஆடைகள் பக்கம் வைக்கவே கூடாது. குழந்தைகளுக்கு பெர்ஃபியூம் அடிப்பதோ, அவர்களின் ஆடைகளில் சென்ட் அடிப்பதோ, தவறான செயல். இது குழந்தைகளின் சருமத்தில் அலர்ஜியை உண்டாக்கலாம்.

குழந்தைகளுக்கு நாப்கின் பயன்படுத்தினால், குறிப்பிட்ட நேர இடைவெளியில் அடிக்கடி மாற்றுவது அவசியம். கெமிக்கல் அதிகம் இல்லாத சோப், பவுடர் வகைகளையே குழந்தைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தையை ஒரேபக்கம் தலைவைத்துத் தூங்கவைப்பதால், முடி கொட்ட வாய்ப்பு உள்ளது. மாற்றி மாற்றி தலைவைத்துத் தூங்க வைப்பதன் மூலம், இதைத் தவிர்க்கலாம்.

மைல்டு ஷாம்பூக்களையே குழந்தைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.