Home ஆரோக்கியம் பொது மருத்துவம் மார்பகம் – மூடப்படும் பகுதி என்றாலும் முக்கியத்துவம் தேவை

மார்பகம் – மூடப்படும் பகுதி என்றாலும் முக்கியத்துவம் தேவை

35

capture‘உடையால் மூடப்படும் பகுதிதானே, அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா?’ என்ற கேள்வியை, மார்பகங்கள் விஷயத்தில் எந்த பெண்ணும் கேட்பதில்லை. ஏன்என்றால் உடலுக்கு பொருத்தமான, அழகான மார்பகங்களை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். அவை பொருத்தமாக இருந்தால்தான் ஆடை முதல், தாங்கள் செய்துகொள்ளும் அத்தனை அலங்காரங்களும் எடுபடும் என்று நம்புகிறார்கள். அதனால் ஆபரேஷன் மூலம் தாங்கள் விரும்பும் அளவுக்கு மார்பகங்களை சீரமைத்துக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை உலகஅளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக மார்பகங்களின் அளவை அதிகரித்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கைதான் மளமளவென உயர்ந்துகொண்டிருக்கிறது.

இப்போது பெரும்பாலான பெண்கள் மெலிந்த உடலோடுதான் தோன்ற விரும்புகிறார்கள். மெலிந்த உடலுக்கு பெரிய மார்புகள் பொருத்தமாக இருப்பதில்லை. பெரிதாக இருந்தால் கொழுப்பின் அளவு உயர்ந்து, மார்பகங்கள் தொங்கிவிடும். பெரிய மார்பகங்களால் தோற்றப் பொலிவில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் சிக்கல் ஏற்படும். பெரிய மார்பக பெண்கள் முதுகுவலி மற்றும் தோள் வலியால் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட மார்பகங்களில் இருந்து கொழுப்பை நீக்கிவிட்டு சீரமைத்து பொலிவாக்க பெண்கள் விரும்புகிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் இப்படி மார்புகளை சீரமைக்க விரும்பினாலும், தயக்கம், ஆபரேஷனை பற்றி பயம், அதற்கான அதிகபட்ச செலவு, பின் விளைவுகளை பற்றிய கவலை போன்றவைகளை கருத்தில்கொண்டு ஆபரேஷனை தள்ளிப் போட்டுவிட்டு மாற்றுவழிகளை பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி சிந்திப்பவர்களால் மசாஜ் கிரீம் வகைகளும், சில வகை எண்ணெய்களும், அதிர்வு மூலம் கொழுப்பை குறைப்பதாக கூறும் கருவிகளும் நன்றாக விற்பனையாகின்றன.

மார்பகங்கள் தசையால் ஆனவை அல்ல. லிம்ப்நோடுகள், பால் உற்பத்தி சுரப்பிகள், கொழுப்பு போன்றவைதான் அதில் இருக்கின்றன. மொத்தமாக பார்த்தால் 75 சதவீதம் கொழுப்புதான் இருக்கிறது. கொழுப்புதான் மார்பகங்களுக்கு வடிவம், அளவு, பொலிவு போன்றவைகளை தருகின்றன.

தாய் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே மார்பக அடிப்படை கட்டமைப்பு உருவாகிவிட்டாலும், பெண் வயதுக்கு வந்த பின்புதான் வடிவம் பெற்று, கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறுகிறது. மார்பு காம்பு வளரத் தொடங்குவது முதல் மார்பகங்கள் முழுமை பெறுவது வரை, மார்பக வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம்.

சமச்சீரான சத்துணவும், ஈஸ்ட்ரோஜன் போன்ற பெண்மைக்கான ஹார்மோன்களும் மார்பக வளர்ச்சிக்கும், வடிவத்திற்கும் காரணமாக இருக்கின்றன. சிறுமிகளுக்கு வளரும் பருவத்தில் சமச்சீரான சத்துணவுகள் தரப்படாவிட்டால், அவர்கள் உடல் எடை குறைவதோடு, மார்பக வளர்ச்சியும் பாதிக்கப்படும். உடல் எடை அதிகரித்தால் மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.

வயதுக்கு வந்த பின்பு ஏற்படும் வளர்ச்சிக்கு பிறகு, கர்ப்பமாகும்போதுதான் அடுத்தகட்ட மாற்றங்கள் உருவாகும். கர்ப்பகாலத்தில் மார்பகங்கள் பெரிதாகும். மார்பு காம்புகளும் பெரிதாகும். அடுத்தகட்ட மார்பக மாற்றங்கள் 40 வயதை கடந்த பின்பு தோன்றும். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறையும். அதனால் மார்பகங்களுக்கு அவைகளின் பங்களிப்பும் குறையும். கிளான்டுலர் திசுக்களின் அளவுகள் குறையக் குறைய மார்பகங்கள் சுருங்கத் தொடங்கும்.

மார்பகத்தில் 75 சதவீதம் கொழுப்பு அம்சம் என்பதால், கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மார்பகம் நன்றாக வளர்ந்து விடும் அல்லவா? என்ற கேள்வி பலருக்குள்ளும் எழும். அது தவறு. கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மார்பகம் வளராது. மார்பகத்தை வளரச்செய்யும் ‘மேஜிக் உணவு’ எதுவுமே கிடையாது. ஆனால் உடல் வளர்ச்சிக்கு தேவையான சமச்சீரான சத்துணவுகள் மார்பக வளர்ச்சிக்கும் உதவும்.

ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகளும், ஆரோக்கிய கொழுப்பு உணவுகளும் மார்பக வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன. முட்டை மஞ்சள் கரு, சூரியகாந்தி விதை, சோயா உணவுப் பொருட்கள் ஏற்றது. தவிடு நீக்காத தானியங்கள், வெந்தயம், கறுப்பு எள், கிராம்பு, வெள்ளை கடலை, கோழி இறைச்சி, சிறிய வகை மீன்களையும் சாப்பிடுங்கள். கீரை வகைகள் மார்பக வளர்ச்சி, ஆரோக்கியத்திற்கு சிறந்தது. வளர் இளம் பருவ பெண்களது உணவில் இவைகளை தாய்மார்கள் சேர்க்கவேண்டும். ஐஸ்கிரீம், வறுத்த- பொரித்த உணவுகள், இனிப்புகளை சிறுமிகளுக்கு அதிகம் கொடுக்காதீர்கள்.

மார்பகத்தின் அளவை அதிகரிக்க சிலிக்கான் மெட்டீரியல்களை மார்பகத்திற்குள் இணைக்கிறார்கள். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

சிலிக்கான் இம்ப்ளான்ட்டை விரும்பாதவர்களுக்காக, ‘கொழுப்பு இடமாற்றம்’ செய்வது மூலமாக மார்பகங்கள் பெரிதாக்கப்படுகின்றன. அதே பெண்ணின் தொடை மற்றும் பின்பகுதியில் இருக்கும் அதிக கொழுப்பை எடுத்து, ஊசி மூலம் மார்பகப்பகுதிக்குள் செலுத்தப்படும். ஒரே தடவையில் இது முழுமையடையாவிட்டால், அடுத்தடுத்து செய்யவேண்டியதிருக்கும். இந்த சிகிச்சை செய்தால், மார்பகத்தில் அடையாளம் எதுவும் தெரியாது.

தொங்கிய மார்புகளை தூக்கி நிறுத்த ‘அப்லிப்டிங்’ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு சீரமைப்பு முறையாகும். மார்புகள் தொங்கிப்போய் காட்சியளிக்க என்ன காரணம் என்ற கேள்வி எல்லா பெண்களிடமும் எழுகிறது. பலரும், பிரசவித்த குழந்தைக்கு பால் புகட்டுவதால் மார்புகள் தொங்கிப்போவதாக நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. மார்பக உருவாக்கத்தின் நோக்கமே பால்புகட்டுவதுதான்.

மார்புகள் தொங்குவதற்கு என்ன காரணம் என்றால், பிரசவம் நடந்த தொடக்க காலத்தில் மார்பகங்களின் அளவு பெரிதாகும். நெஞ்சுப்பகுதி சருமமும் இழுத்து கீழ் இறங்கும். அதனால்தான், பின்பு மார்பக கொழுப்பு குறைந்துவிட்டாலும் மார்பகங்கள் தொங்கிய நிலையிலே இருக்கின்றன. மார்பகத்திற்கான விசேஷ உடற்பயிற்சிகள் சிலவற்றை செய்தால், மார்பகம் தொங்கும் நிலையை தவிர்க்கலாம்.