Home ஆரோக்கியம் மாதவிலக்குக்கு மாத்திரை போடுவது சரியா?… தவறா?… எத்தனை மாத்திரை போடலாம்?…

மாதவிலக்குக்கு மாத்திரை போடுவது சரியா?… தவறா?… எத்தனை மாத்திரை போடலாம்?…

38

மிக முக்கியமான திருமணம், கோயில் திருவிழா, சுற்றுலா, குடும்ப விழாக்கள்… என விசேஷ நாட்கள் வரும்போதெல்லாம், ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடும்போது எல்லாம் பெண்கள் வேகமாய் காலண்டரைப் புரட்டுவார்கள். முக்கியமான நாட்களில் மாதவிலக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் பரபரப்பும் அவர்களிடம் தொற்றிக்கொள்ளும். இதுவே,அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

இப்போதுள்ள இளம் பெண்கள் அப்படிப் பரபரப்படைவது இல்லை. ‘நாளைக்கு ஃபங்ஷனா? நோ ப்ராப்ளம்! அதுதான் மாத்திரை இருக்கே…’ என கூலாக இருக்கிறார்கள். மாதவிலக்கு நாட்களை எளிதாகத் தள்ளிப்போடும் மாத்திரைகள் இப்போது அனைத்து மருந்துக்கடைகளிலும் கிடைக்கின்றன.

இவற்றைப் பெண்களும் சர்வ சாதாரணமாக வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இது சரியா? இப்படி இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாமா? இதனால் பக்கவிளைவுகள் ஏதும் உண்டா?

பூப்பெய்திய பிறகு, மெனோபாஸ் வரை… பெண்ணுக்கு 28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். அதாவது, கருத்தரிக்க ஏதுவாக, சினைப்பையில் முட்டை வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். கடந்த மாதம் கரு உருவாகாததால், கரு தங்கி வளர்ச்சியடைய கர்ப்பப்பையில் உருவாகியிருந்த எண்டோமெட்ரியம் என்ற மெத்தைபோன்ற அமைப்பு வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.

ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்போடு வேலை செய்தால்தான், இந்தச் சுழற்சி சீராக நடக்கும். மாதவிலக்கு நாட்களைத் தள்ளிப்போட நினைத்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம், இந்தச் சுழற்சியை நாம் இடையூறு செய்கிறோம். இதனால் உடலின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் இருக்கும் சீர்மை பாதிக்கப்படுகிறது.

இது, ஒரு கட்டத்தில் நம் உடலையும் பாதிக்கிறது. நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் வைரஸ் ஏதாவது புகுந்து தடை செய்வது போலத்தான், இந்த மாத்திரையைச் சாப்பிட்டு மாதாந்திர சுழற்சியை பாதிப்படைய வைக்கிறோம்.

மாதவிலக்கை தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த மாத்திரைகளின் வேலை. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பும் ஏற்படலாம்.

தலைவலி, உடலில் நீர் கோத்தல் போன்ற பிரச்னை, மார்பகங்களில் வலி, ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகியவற்றுடன் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது.
பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14ம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம்.

இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேறை தற்காலிமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது?

மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. மருந்து கடைகளில் வாங்கி சுயமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரும்.
தவிர்க்கவே முடியாது என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், அடிக்கடி இது தொடரும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது.