Home ஆரோக்கியம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

25

பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘இது நமக்கெல்லாம் வராது’ என்று நினைக்கும் பெண்களின் அறியாமையே, இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணம்.

மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம். பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.

பொதுவாக எல்லா வகை புற்றுநோய்களிலுமே, வயது அதிகமாக அதிகமாகத்தான் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். அந்த வகையில் மார்பக புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

அதிவிரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.