Home பெண்கள் தாய்மை நலம் பெண்களுக்கான கர்ப்பம் பற்றிய ஆலோசனைகள்

பெண்களுக்கான கர்ப்பம் பற்றிய ஆலோசனைகள்

45

என் வயது 18. வயதுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. வயதுக்கு வந்த பிறகு மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிலக்கு முறையாக வந்தது. அதன் பிறகு மூன்று முதல் ஆறு மாதங்கள் கழித்து வரும். ஆனால் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை இரத்தப் போக்கு இருக்கும். அதன் பிறகு எனக்கு எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு உடம்பு மோசமாகி விடும். பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போக்கை நிறுத்துவார்கள். அதன் பிறகு ஒன்றிரண்டு மாதங்கள் சரியாக வரும். மீண்டும் ஐந்தாறு மாதங்களுக்கு வராது. இப்போதைக்கு எனக்கு விலக்கு வந்து ஏழு, எட்டு மாதங்கள் ஆகிறது. மாத விடாய் வரும் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதற்காக நான் பார்க்காத வைத் தியமில்லை. இது இப்படியேதான் தொடருமா? சிகிச்சையே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத பெரம்பலூர் வாசகி.

நீங்கள் முதல் வேலையாக பெல்விக் ஸ்கேன் எடுக்க வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை. கர்ப்பப்பையில் கட்டியோ, புண்களோ உள்ளனவா, கர்ப்பப்பை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த ஸ்கேன். மனித உடலிலிருந்து இரத்தமானது எந்த வழியிலும் அளவுக்கதிகமாக வெளியேறக் கூடாது. இது இரத்த சோகையில் கொண்டு போய் விடும். மாதவிடாயின் போதான உதிரப் போக்கும் அப்படித்தான். நீங்கள் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். ஒரே மருத்துவரிடம் பொறுமையாக சிகிச்சையைத் தொடருங்கள். கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள் உடனடியாக சரியாகாது. கொஞ்சம் நாட்கள் ஆகும்.

என் மகளுக்கு வயது எட்டுதான் ஆகிறது. அதற்குள் மார்பகங்கள் டீன் ஏஜ் பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. தர்மசங்கடமாக இருக்கிறது. மற்றவர்கள் பார்வையில் இருந்து அவளைக் காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில் சொல்வதும் எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அவளது மார்பக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏதேனும் சிகிச்சை உண்டா? -டி. ஆனந்தி, சென்னை.

நீங்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. உங்கள் மகளின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது. சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது உங்கள் மகளும் சீக்கிரமே வயதுக்கு வரலாம். அவளது மார்பக வளர்ச்சியைக் குறைக்க நினைக்காதீர்கள். அது இயற்கை. அதை ஒரு பெரிய விஷயமாக்கி அவளிடம் பேசாதீர்கள். அதே சமயம் பிறரது பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாகரீகமான, உடலை மறைக்கும் உடைகளை அணியக் கற்றுக் கொடுங்கள்.

என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்பு வரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார் மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம் பருப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரண மஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.

நான் ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் எனக்குத் திருமணமானது. என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமான புத்தகங்களையும், படங்களையும் காட்டி அதிலுள்ளது போல என்னை சம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள். -எம்.எஃப்., திருச்சி.

தன் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்ற பயத்திலும், தன் ஆண்மையை மனைவிக்கு நிரூபிக்கவும் நினைத்துப் பல ஆண்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு உறவு சாத்தியம் என்று தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. கணவர் நல்ல மன நிலையில் இருக்கிற போது இது பற்றி அவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் இல்லாமலும் அவரால் உங்களுடன் உறவில் நல்லபடியாக ஈடுபட முடியும் என்று நம்பிக்கை கொடுங்கள். தேவைப்பட்டால் அவரை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம். அவர்கள் உங்கள் கணவரின் அனாவசிய குழப்பங்களையும், பயத்தையும் போக்கி, சகஜமாக மாற்றுவார்கள். பொறுமையாகத்தான் இப்பிரச்சினையைக் கையாளவேண்டும்.

எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை தங்கவில்லை. மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் உறவு கொண்டும் கரு தங்குவதில்லை. உறவு முடிந்ததும், விந்தணுக்கள் உடனே வெளியேறி விடுகின்றன. அக்கம் பக்கத்தில் எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம் பித்துவிட்டார்கள். என்ன கோளாறாக இருக்கும்? என்ன சிகிச்சை வேண்டும்? -சி. மங்கையர்க்கரசி, ஆத்தூர்.

பொதுவாகத் திருமணமாகி, ஒன்றி ரண்டு வருடங்கள் வரை குழந்தை இல்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அதன் பிறகும் கரு தங்கா விட்டால்தான் மருத்துவப் பரிசோதனை அவசியம். அதற்குள் கிளம்புகிற அக்கம் பக்கத்தாரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள். விஞ்ஞான ரிதியாகப் பார்த்தால் விந்தணு என்பது வெளியேறுவது இயற்கை. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆணின் விந்தணு. உறவின் போது சிலதுதான் கருக் குழாய் வழியே கருப்பைக்குப் போகும். சிலது போனாலும், போகா விட்டாலும் வெளியேறவே செய்யும். எனவே இதற்கும், நீங்கள் கருத்தரிக்காததற்கும் தொடர்பில்லை. அரைகுறை விஷயங்களைக் கேள்விப்பட்டு அனாவசியமாகக் குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். கருத்தரிக்க தினசரி உறவு என்பதும் அனாவசியம். மாதத்தின் எல்லா நாட்களிலும் பெண்ணின் உடலில் கருமுட்டை உருவாவதில்லை. மாதவிலக்கானதிலிருந்து முதல் பத்து நாட்களைத் தவிர்த்து, அடுத்த பத்து நாட்களில் உறவு கொள்ளலாம். அதற்கடுத்த பத்து நாட்களையும் தவிர்க்கலாம். இடைப்பட்ட நாட்கள்தான் கருத்தரிக்க உகந்தவை. தினசரி உறவு கொண்டால்தான், அதுவும் பல முறைகள் உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கும் போல என்பது பலரது தவறான அபிப்ராயம். நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம். அதன் பிறகும் கரு தங்கா விட்டால் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

என் வயது 26. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம். அதன் பிறகு என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. உறவின் போது பிறப்புறுப்பு ரொம்பவும் தளர்ந்து விட்டதாகக் காரணம் சொல்கிறார். எனக்கு மட்டும்தான் இப்படியா? இதை சரிசெய்ய வாய்ப்பே இல்லையா? – எல்.டி., சென்னை.

பெண்ணின் உடம்பு என்பது கர்ப்பம் தரிப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் முன்பிருந்த அதே நிலையில் காலத்துக்கும் இருக்காது. பெண்பித்தர்கள்தான் இப்படியெல்லாம் காரணம் சொல்லி மனைவியை விட்டு விலகியிருப்பார்கள். தன் பெண் பித்தை மறைக்க இப்படி மனைவி மேல் குறை சொல்கிற கணவர்களில் உங்களவரும் ஒருவராக இருக்கிறார். அந்தக் காலத்தில் எல்லாம் பெரும் பாலும் சுகப்பிரசவம்தான். எல்லாப் பெண்களுக்கும் இந்தத் தளர்வு இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டி மனைவியை விட்டு, விலகியதாக நாம் எந்த ஆணைப் பற்றியும் கேள்விப் பட்டதில்லை. இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். பிரசவித்த பெண்கள் எல்லாரும் சந்திக்கிற பிரச்சினைதான் இது. உங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களுக்கான விவரங்களை விளக்கமாகச் சொல்வார்.

என் மனைவிக்கு பிரபல டாக்டரிடம் சிசேரியன் செய்த பிறகு, காப்பர் டி போடப்பட்டது. அது போட்டு ஒரே மாதத்தில் உள்ளே போய் விட்டது. அது கருப்பையின் ஒரு ஓரத்தில் இருப்பதாகச் சொல்லி மறுமுறை குழந்தை பிறக்கும் போது எடுத்து விடலாம் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வேறு ஏதேனும் பாதிப்பு உண்டா? இதனால் கருத்தரிக்க ஏதேனும் கால தாமதம் ஆகுமா? -எஸ். கண்ணன், குலமங்கலம்.

முதல் வேலையாக உங்கள் மனைவிக்கு ஸ்கேன் செய்யுங்கள். அதன் மூலம்தான் அது எங்கே இருக்கிறது என சரியாகத் தெரிந்து கொள்ளமுடியும். வெறும் கருவிகளைக் கொண்டே எடுத்து விட முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். என்ன ஆனாலும் இப்படி காப்பர் டி உள்ளுக்குள் புதைந்திருக்கக் கூடாது. அது எந்த நிலையில், எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப்பொறுத்துதான் உங்கள் மனைவி கருத்தரித்து, சிசேரியன் செய்கிற போது எடுக்கமுடியுமா என்பதையும் முடிவுசெய்ய முடியும். காப்பர் டி ஏடாகூடமான இடத்தில் இருக்கிற பட்சத்தில்உங்கள் மனைவி கருத்தரிப்பதில் பிரச்சினைகள் வரலாம். அப்படியே கருத்தரித்தாலும், காப்பர்டி இருக்கிற நிலையின் காரண மாக, குழந்தை உருவாகிற வடிவமே மாறிப் போகக் கூடும். குழந்தை வளர்ந்து சுழலும் போது அதைக் குத்தலாம். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளதால், உடனடியாக ஸ்கேன் செய்து அதை அகற்றி விடுவது நல்லது.

எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் அன்பானவர். உறவுக்கு என்னை நெருங்கியதுமே அவருக்கு விந்து வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான். திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தையும் இல்லை. இந்தப் பிரச்சினை சரியாகி, எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கை கிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -விஜயலட்சுமி, நாகர்கோயில்.

நிறைய ஆண்களிடம் காணப்படுகிற பிரச்சினைதான் இது. உடலளவில் அவர்களுக்குக் குறையே இருக்காது. மனத்தளவில் தன் மனைவியைத் தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்கிற கவலையின் விளைவாகவே இப்படி இருப்பார்கள். இவர்களுக்குத் தேவை கவுன்சலிங். தாழ்வு மனப்பான்மையை விரட்ட, முதலில் அவரை ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் (சைக்யாட்ரிஸ்ட் அல்ல) அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு என்ன பிரச்சினை எனத் தெரிந்து, அதற்கேற்ப கவுன்சலிங் கொடுப்பார்கள். பிறகு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான மருத்துவரையும், மருந்து களையும் பரிந்துரைப்பார்கள். இது முதல் கட்டசிகிச்சை. அடுத்து உங்கள் கணவருக்கு விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். அதில் உயிரணுக்கள் எப்படியிருக்கின்றன எனத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் கருத்தரிக்க முடியும்.

என் வயது 22. திருமணமாகி 13 மாதங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. ஒரு பக்க மார்பில் குழந்தை சரியாகப் பால் குடிக்காததால், அந்தப் பக்க மார்பகம் சிறியதாகி விட்டது. தாய்ப்பால் சுரப்பும் எனக்குக் குறைவாக இருக்கிறது. சிறியதாகி விட்ட மார்பகத்தை சரி செய்யவும், தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் ஆலோசனைகள் சொல்வீர்களா? -ஏ. சாந்தி, ஊர் வெளியிட விரும்பவில்லை.

நீங்கள் அசைவம் சாப்பிடுகிறவராக இருந்தால் பால் சுறா அதிகம் சேர்த்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை மதியத்தில் ஆட்டுக் கறியும், மீனும் சாப்பிடவும். சைவம் சாப்பிடுகிறவராக இருந்தால், பிஞ்சுக் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவும். கறிவேப்பிலை பவுடர் கால் டீஸ்ன் தினமும் சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடவும். மூன்று டம்ளர் பால் குடிக்கவும். மார்பகங்களின் அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ இருப்பது என்பது இயற்கை. அதை மருந்து, மாத்திரைகளால் நீங்கள் எது வும் செய்ய முடியாது. தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் இப்படி இருப்பவை, பிறகு ஒரு கட்டத்துக்குப் பிறகு தாய்ப் பாலை நிறுத்திய பிறகு சம அளவுக்கு வரலாம். கவலை வேண்டாம்.

என் வயது 36. காப்பர் டி போட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் வேறு ஒரு பிரச்சினைக்காக மருத்துவரை சந்தித்த போது, காப்பர் டி உள்ளே புதைந்திருக்கிற மாதிரித் தெரிவதாகச் சொன்னார். அதை அறுவை செய்துதான் எடுக்க முடியுமா? வேறு வழி உண்டா? இது ஆபத்தானதா? எத்தனை வருடங்களுக்கொரு முறை காப்பர்டியை மாற்ற வேண்டும்? -சி. ஈஸ்வாp, அந்தியூர்.

காப்பர்டியில் நிறைய வகைகள் உள்ளன. தரத்தைப் பொறுத்து, அவற்றை வருடத் திற்கொரு முறையோ அல்லது இரண்டு, மூன்று வருடங்களுக்கொரு முறையோ மாற்றிக் கொள்ளலாம். காப்பர் டி போட்டுக் கொண்ட சில பெண்களுக்கு இரத்தப் போக்கு திடீரென அதிகமிருக்கும். அப்படியிருந்தால், அதை எடுத்து விட்டு, சில நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடி போடுவார்கள். நீங்கள் பல வருடங்களாக அதைக் கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது இருக்கும் இடம் சரியாகத் தெரியும். மேலோட்டமாக இருந்தால், அறுவை சிகிச்சையின்றி, அதை எடுத்து விடுவார்கள். ரொம்பவும் ஆழமாக இருந்தால் அறுவை தேவைப் படலாம். அதை உங்களைப் பரிசோதித்த மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவரிடம் தாமதிக்காமல் ஆலோசனை பெறுங்கள். இதை எடுத்து விட்டு, மூன்று மாதங்கள் இடைவெளி தரவும். பிறகு உங்கள் உடல்நிலையைப் பொறுத்து மீண்டும் வேறு பொருத்திக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட, உங்கள் கணவரை ஆணுறை உபயோகிக்கச் சொல்வது யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாத எளிய கருத்தடை முறை.