Home பெண்கள் அழகு குறிப்பு ”பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸ்:

”பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸ்:

33

முகத்தில் ‘T’ ஸோன் எனப்படும் நெற்றி – மூக்கு – முகவாய் பகுதிகளில் அதிக அளவில் சீபம் எனும் எண்ணெய் சுரக்கும். அந்த இடங்களில் சருமத் துவாரங்கள் பெரிதாகத் திறக்கும். அதன் வழியாக வெளியேறும் சீபத்தின் மீது காற்று பட்டதும், கறுப்பாக மாறிவிடும். இதன் மீது அழுக்கும் படிவதால் சரும துவாரம் அடைத்து, முள் போன்ற பிளாக் ஹெட்ஸாக தங்கிவிடும். அதேபோல, சரிவர சுத்தப்படுத்தப்படாத சருமத்தின் இறந்த செல்கள், சரும துவாரங்களை அடைத்துக்கொள்வதுதான் வொயிட் ஹெட்ஸ்.

தீர்வு:

இந்த இரண்டு பிரச்னைகளுக்குமே நீராவி கொடுத்து, இளக வைத்து ரிமூவ் செய்வது ஒரு வகை. டூல் வைத்து அழுத்தி எடுப்பது இன்னொரு வகை. இப்படி செய்யும்போது, குறிப்பிட்ட திசையில்தான் அழுத்தி எடுக்க வேண்டும். அனுபவம் குறைந்த பியூட்டிஷியன்களிடம் செல்லும்போது, எல்லா திசைகளிலும் அழுத்தி எடுத்துவிட்டார்கள் என்றால், அது நிரந்தரத் தழும்பாக மாறிவிடக்கூடும்.

கொதிக்கும் நீரில் இரண்டு ஸ்பூன் போரிக் பவுடர், பத்து சொட்டு ஆஸ்ட்ரிஜின் விட்டு, ஒரு காட்டன் துணியில் தொட்டு பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்தால், சருமம் இளகிவிடும். அடுத்ததாக, இரண்டு ஆள்காட்டி விரல்களிலும், டிஷ்யூ பேப்பரை சுற்றிக்கொண்டு, மூக்கின் மேல் உள்ள பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸை அழுத்தி எடுத்தால் அவை வந்துவிடும். இதன் பிறகு, ஆஸ்ட்ரிஜின் லோஷனை மெல்லிய பஞ்சில் தொட்டு மூக்கின் மேல் அடிப்பது போல் தட்டித் தட்டி எடுக்கலாம். அல்லது ஐஸ் கட்டியை ஒரு காட்டன் துணியில் சுற்றி மூக்கின் மீது தேய்க்கலாம். இவ்விரு முறைகளுமேஸ திறந்திருக்கும் சருமத் துவாரங்களை மூடச் செய்வதற்கு உதவும்.

மூக்கின் மேல் வரும் பரு:

சிலருக்கு மூக்கின் மீது மட்டும் முகப்பரு வரும். எண்ணெய்ப் பசை சருமத்தை ஒழுங்காக சுத்தப்படுத்தாத பட்சத்தில், அழுக்கு படிந்து சரும துவாரங்கள் அடைத்துக்கொள்வதுதான் இதற்குக் காரணம். பொடுகுத் தொல்லை காரணமாகவும் இது வரக்கூடும். மூக்கின் மீது வரும் இந்தப் பருவைக் கிள்ளினால், அது துவாரமாக மாறிவிடும்.

தீர்வு:

ஐஸ் தண்ணீர் பத்து மில்லியில், டீ ட்ரீ ஆயில் பத்து சொட்டுக்கள் விட்டு, பஞ்சில் தொட்டு, பருவின் மேல் ஒற்றி எடுக்கலாம். அல்லது தரையில் சில துளிகள் பன்னீர் விட்டு, நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வெண்சங்கை அதில் இழைத்து, அதிலேயே ஜாதிக்காயையும் இழைத்து, பேஸ்ட் போல வரும் கலவையை பருவின் மீது வைத்தால் இரண்டு நாட்களில் பரு காய்ந்து உதிர்ந்துவிடும்.

மூக்கின் இரு ஓரங்களில் படியும் கருமை:

முகம் கழுவும்போது மூக்கின் இரு ஓரங்களை சரியாகக் கவனிக்க மாட்டோம். மற்ற இடங்களைக் காட்டிலும், இங்கே சரும துவாரங்கள் பெரிதாக திறந்திருக்கும். இவற்றைச் சரியாக சுத்தம் செய்யாதபட்சத்தில், சருமத்தின் இறந்த செல்கள் துவாரங்களை அடைத்துக்கொள்ளும். இதை அப்படியே விட்டால், இரு ஓரங்களிலும் கரும்திட்டு வரும்.

தீர்வு:

பத்து மில்லி வெந்நீரில், இரண்டு டீஸ்பூன் போரிக் பவுடர், பத்து சொட்டு லெமன் கிராஸ் ஆயில், கேம்ஃபர் ஆயில் பத்து சொட்டு விட்டு, நன்றாகக் கலந்து, அதில் பஞ்சை நனைத்து மூக்கின் ஓரங்களை அழுந்தத் துடைத்தெடுத்தால், துவாரங்களில் அடைத்துள்ள அழுக்கு வெளியேறிடும். அதைத் தொடர்ந்து, சின்ன ஐஸ் கட்டியை மஸ்லின் துணி அல்லது டிஷ்யூ பேப்பரில் சுற்றி மூக்கின் ஓரங்களில் தேய்க்க வேண்டும். இதனால் துவாரங்கள் மூடிவிடும். இதை தினமும் செய்து வந்தால், நாள்பட்ட கருந்திட்டு மறைந்துவிடும்.

மூக்கின் மீது கருவளையம்:

சிலருக்கு மூக்கின் நடுபாகத்தில் கருமையான வளைவு இருக்கும். இது பரம்பரைக் காரணமா இருக்கலாம். ஆனாலும்கூட, இதன் ஆரம்ப கட்ட அறிகுறியான கரும்புள்ளிகள் வரும்போதே கவனித்து, மீசோ தெரபி மூலம் சரிசெய்துவிடலாம். கவனிக்காமல் விட்டால், சரிசெய்யவே முடியாது.”