Home ஆரோக்கியம் பல் சொத்தை; கூச்சமா? ஆரம்பத்திலேயே கவனிங்கஸ!

பல் சொத்தை; கூச்சமா? ஆரம்பத்திலேயே கவனிங்கஸ!

26

தினமும் இரண்டு முறை பல் துலக்குறது முக்கியம்
‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. பற்களின் முக்கியத்துவத்தை இதன் மூலம்
உணரலாம். பேசும் சொற்கள் தெளிவாக இருக்கவும், வலிமையாக இருக்கவும் பற்கள் அவசியம். இது, உடல் நலன் சார்ந்தது என்பதால், பல் பராமரிப்பு முக்கியம். பல் கூச்சம், பல் சொத்தையை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும்; இல்லாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் வரும்’ என்கிறார், பல் சிகிச்சை நிபுணர் ஹரிஷ்நாத்.
இது தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்:

1 பல் சொத்தை என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

சரியாக பல் துலக்காதது முக்கிய காரணம். இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிடுதல்;
இரவு சாப்பிட்ட பின் பல் துலக்காமை; பால் கொடுத்த பின், வாயை சுத்தம்
செய்யாமல், குழந்தைகளை துாங்க வைத்தல் போன்றவற்றால், கிருமிகள் (ஸ்ரெப்டோ காகஸ் மியூட்டன்ஸ்) வாயின் பல் குழிக்குள் சென்று தாக்குவதால், பல் சொத்தை ஏற்படுகிறது. சாதாரணமாக என்றால், கரும்புள்ளி தெரியும்; பல்லில் சிறு ஓட்டை விழும். ஆரம்ப நிலையிலேயே, பல் டாக்டரின் ஆலோசனை பெற்றால், மற்ற பாதிப்புக்களை தடுக்கலாம்.

2 வேறு என்ன பாதிப்புகள் வரும்? சிகிச்சை முறை என்ன?

ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், பல் சொத்தை பாதிப்பு ஆழமாகி, வேரையும் பாதிக்கும்.பல் வலி ஏற்படும்; நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும். மேலோட்டமாக, எனாமல் பாதிப்பு இருந்தால், பாதிப்பு பகுதியை சுத்தம் செய்துவிட்டு, நிரந்தரமாக பல் ஓட்டையை அடைக்கலாம்.
ஆழமாக ஓட்டை இருந்தால், தற்காலிக அடைப்பு என்ற முறையில், ‘Zoe’ எனப்படும், சிமென்ட்டால் அடைப்பதால், மேலும்
பரவாமல் தடுக்க முடியும்.

3 பற்களில் கரை படிவது ஏன்? வேர் சிகிச்சை என்றால் என்ன?

பலருக்கு பல் வலி அதிகமாகி, பல்லை அகற்றும் நிலை வரலாம். பல்லை அகற்றாமல், பல்வேர் சிகிச்சை ( ரூட் கனால்) முறையை செய்து குணப்படுத்தலாம். பல் ஈறுகளில் கரை படிதல், சுண்ணாம்பு போன்று கிருமிகள் தங்குவதால், ஈறுகள் வீக்கம் அடைந்து பல் வலி ஏற்படும். சில, நேரங்களில் ரத்தக்கசிவால் சீழ் வரலாம். இதற்கு சரியான சிகிச்சை எடுக்காவிட்டால், பல்லை தாங்கி நிற்கும் எலும்பைத் தாக்கி, கரைத்து விடும்.இதனால், பல் ஆட்டம் கொண்டு விழ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, ‘ஸ்கேலிங்’ என்ற நடைமுறையில் காரை, சுண்ணாம்பு போன்ற படியும் கிருமியும் அகற்றப்படுகிறது.ஈறு நோய் பாதிப்பு அதிகமாகி, பல் ஈறு கீழே இறங்கிவிட்டால், ‘பெரியடான்டல் பிளாப்’ எனும், அறுவை சிகிச்சை மூலம்,(எப்.எல்.ஏ.பி.,) சரி செய்ய முடியும். எலும்பு கரைந்து விட்டால், செயற்கை எலும்பு துகள்கள் கொண்டு, சரிப்படுத்த முடியும்.

4 பல் அகற்றினாலோ, விபத்தில் விழுந்து விட்டாலோ பல் கட்டுவது அவசியமா?

பல் விழுந்து விட்டாலோ, அகற்றினாலோ கண்டிப்பாக பல் கட்ட வேண்டும்; இல்லாவிட்டால், அருகே உள்ள பற்கள், காலியாக உள்ள இடத்திற்கு, பக்கவாட்டில் நகரும்; மேலே உள்ள பல் கீழே இறங்கும். பல்லின் ஸ்திரத்தன்மை குறைந்து, திடமான பொருட்களை கடித்து சாப்பிட முடியாது. தாடை பக்கவாட்டு எலும்பில், வலி ஏற்படும்.

5 பல் கட்டும் முறையில் நவீனத்துவம் வந்து விட்டதா?

பல்லை கழற்றி மாட்டிக் கொள்வது பழைய நடைமுறை. அருகில் உள்ள இரு பற்களின் துணையுடன், ‘பிக்ஸ்டு பிரிட்ஜ்’ முறையில்
பல் கட்டுவது, இன்னொரு நடைமுறை. பல்லின் கலரிலேயே, ‘செராமிக்’ பற்களை கட்டிக் கொள்ளலாம். பல் இல்லாத பகுதியில், எலும்பில் துளை போட்டு, ‘டைட்டானியம் இன்பிளான்ட்’ முறையில், பல் கட்ட முடியும். இது, தற்போதுள்ள அதி நவீன முறை.

6 அடிபட்டு, பல் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது? அதே பல்லை மீண்டும் பொருத்த முடியுமா?

நிச்சயமாக முடியும். பல் விழுந்த அரை மணி நேரத்திற்குள், எச்சிலில் வைத்தோ, பாலில் போட்டோ, அருகில் உள்ள பல் டாக்டரிடம் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால், அதே பல்லைப் பொருத்தலாம். இதுபற்றிய விவரம் பலருக்கும் தெரிவதில்லை. பற்கள் முன், பின் வளைத்து, சரியான வரிசையில் இல்லாமல் இருப்பது உண்டு. இவர்கள், ‘கிளிப்’ போடுவதன் மூலம், பல் சீரமைப்பு செய்து அழகாக்க முடியும்.

7 பல் கூச்சம் போக்க என்ன செய்ய வேண்டும்?

பற்களின் நரம்புகளில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடும்போது, அது நரம்பில்பட்டு ‘ஷாக்’ அடித்தது போன்று வலி ஏற்படும்.
டாக்டரை ஆலோசித்து, அதற்கான பற்பசைகளை பயன்படுத்தினால், பல் கூச்சம் போய்விடும். பொதுவாக, அதிக சூடான, குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

8 பிறவியிலேயே குழந்தைகளுக்கு பல் சார்ந்த பிரச்னை வருமா?

பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு, மேல் அண்ணத்தில் ஓட்டை இருப்பது உண்டு. பால் கொடுக்கும்போது வயிற்றுக்கு போகாமல், ஓட்டை வழியாக நுரையீரலுக்குச் சென்று
சிக்கலாகும்; உயிருக்கு ஆபத்தாக அமையும்.
இவர்களுக்காக, ‘பீடிங் பிளேட்’ உள்ளது. இதை பயன்படுத்துவதால், மேல் ஓட்டை மூடப்பட்டு, பால் குழந்தையின் வயிற்றுக்குச் செல்லும். ஒன்றரை ஆண்டு காலம் முடிந்ததும், குழந்தை நிபுணரை ஆலோசித்து, அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.

9 வாய் புற்றுநோய்க்கும், பல் நோய்க்கும் சம்பந்தம் உண்டா?

பல் உடைந்து, கூர்மையான பற்கள் சதைகளில் குத்தி ஏற்படும் காயத்தை, நீண்ட காலம் பொருட்படுத்தாமல் விட்டால், புற்றுநோயாக வாய்ப்புள்ளது. புகையிலை, குட்கா பழக்கத்தால் வாய் புற்றுநோய் வந்து, பல் மற்றும் தாடைகளை அறுவை சிச்சை செய்து, அகற்றும் சூழல் ஏற்படலாம். உயிருக்கு ஆபத்து என்பதால் புகை, குட்கா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
10 பல் பாதிப்பில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டும்?
தினமும் இரண்டு வேலைகளில், (காலை, இரவு) பல் துலக்க வேண்டும். இரவு சாப்பிட்டதும், பல் துலக்கிவிட்டு படுக்கும் பழக்கம் பலரிடம் இல்லை; பல் துலக்கிவிட்டு படுப்பது அவசியம். சாப்பிட்டவுடன், வாயை நன்கு
தண்ணீரில் நன்றாக கொப்பளித்து, துப்ப வேண்டும். பல் துலக்கியதும், விரல்களால் ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.உணவில் கீரை, காய்கறி, பழங்களை சரிவிகிதமாக சேர்த்துக் கொண்டால், பல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து பெருமளவு தப்பலாம்.