Home பெண்கள் கருத்தரிப்பு தாயாவதில் பிரச்சினையா? `பி.சி.ஓ.எஸ்’ இருக்கலாம்!

தாயாவதில் பிரச்சினையா? `பி.சி.ஓ.எஸ்’ இருக்கலாம்!

47

`பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ பாதிப்பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சினைகளும் பெருகிவருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி.ஓ.எஸ்` பாதிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சி.ஓ.எஎஸ் நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் 40 சதவீதம் என்றால், 60 சதவீதம் பேர் அறிகுறியை உணராமல் அந்த நோய்த்தன்மையுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல் இதையும் தொடக்கத்திலே கண்டறிந்தால், எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

இந்த நோயாளிகளில் 30 சதவீதத்திற்கு குறைவானவர்களுக்கு மட்டுமே மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது. 9-10 வயது சிறுமிகளாக இருக்கும்போதே பெற்றோர், அவர்களை கவனித்தால், பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலே கண்டறிந்து விடலாம். நோய் பாதிப்பை கண்டுபிடித்து, கட்டுப்படுத்தாமலே விட்டால் அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உருவாகும் சூழலை அதிகரிக்கும். குழந்தையின்மைக்கும் இது முக்கிய காரணமாகும்.

சிறுமிகளாக இருக்கும்போதே மார்பக வளர்ச்சி அதிகமாக இருப்பது பி.சி.ஓ.எஸ் ன் முக்கிய அறிகுறியாகும். மேலும் சிறுவயதிலே பூப்படைவது, அதிக எடை, அளவுக்கு அதிகமாக மெலிந்து போதல், எப்போதும் படுக்க வேண்டும் என்று தோன்றுதல், படுத்தால் தூக்கம் வராத நிலை ஏற்படும். பின் கழுத்து, கை மூட்டுகள், கையை மடக்கும் பகுதிகளில் கறுப்பு நிறம் படருதல், முகத்தில் கறுப்பு படை தோன்றுதல், முகத்தில் எண்ணைத் தன்மை அதிகரித்தல். காலை நேரங்களில் மூக்கில் மட்டும் அதிக எண்ணைத்தன்மை தோன்றுதல், ஒற்றைத் தலைவலி போன்றவையும் பி.சி.ஓ.எஸ் ன் அறிகுறிகளாகும்.

இவை அனைத்தும் இன்சுலின்- லெப்டின் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால் தோன்றுவதாகும். முகத்தின் கீழ் பாகம் மட்டும் குண்டாகுதல், பற்கள் முன்நோக்கி துறுத்துதல், மார்பு பகுதியும்- தோள் பகுதியும் மட்டும் பெரிதாகுதல், கழுத்து குண்டாகுதல் போன்றவை ஸ்டீராய்ட் ஹார்மோனால் ஏற்படும் பாதிப்பாகும்.

ஆறு மாதங்கள் வரை மாதவிலக்கு வராமல் இருத்தல், வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து போதல், அல்லது நிற்காமல் வெளியாகிக் கொண்டிருப்பது, குழந்தையின்மை, 90 நாட்களுக்குள் அபார்ஷன் ஆவது, மீசை வளர்தல், தாடி வளர்தல், உடலில் தேவையற்ற இடங்களில் எல்லாம் முடி வளர்தல், மிக அதிகமாக தலை முடி உதிர்தல் போன்றவைகளும் பி.சி.ஓ.எஸ். அறிகுறிகளாகும்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு சரியான சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தினசரி 1200 கலோரி அளவுள்ள உணவுகளை சரிவிகிதமாக உட்கொள்ள வேண்டும். அதில் 40 சதவிகிதம் கார்போஹைடிரேட் உணவுகள் எடுத்துக்கொள்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மதிய நேரத்தில் கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதனுடன் இனிப்பு சேர்க்காத யோகர்டு எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இரவு நேரத்தில் பழுப்பு அரிசி, வேகவைத்த மீன், ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் மொத்தம் 330 கலோரி உணவுகளை மட்டுமே உட்கொண்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.