Home ஆரோக்கியம் தலைவலி எதனால் ஏற்படுகிறது

தலைவலி எதனால் ஏற்படுகிறது

16

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் தலைவலி என்பது பலக் காரணங்களால் ஏற்படலாம். சில சின்ன சின்ன பிரச்சினைகளால் கூட தலை வலி ஏற்படும். மனதளவில் டென்ஷன் கூட தலைவலியை ஏற்படுத்திவிடும். எனவே எல்லா தலைவலிகளுக்கும் ஒரு வலி நிவாரணியைப் பயன்படுத்தி தீர்வு காண்பது என்பது தவறு.

சில சாதாரண தலைவலிகளுக்கு எளிய கை வைத்தியம், வீட்டு வைத்தியத்தின் மூலமே தீர்வு காணலாம்.

அதிக வேலை பளு அல்லது டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலிக்கு ஒரேத் தீர்வு ஓய்வுதான்.

ஒரு சில மணி நேரம் அமைதியாக கண்களை மூடி அமர்ந்திருங்கள். அல்லது இருளான அறையில் சற்று ஓய்வெடுங்கள்.

அதிகமான தலைவலி துன்புறுத்தும் போது தியானம், யோகா போன்றவை கைகொடுக்கும்.

அடிக்கடி தலைவலி, தினமும் ஒரே நேரத்தில் தினமும் தலைவலி என்றால் உடனடியாக உங்கள் கண்களை பரிசோதியுங்கள். கண் பார்வை குறைபாடும் தலைவலி மூலமாகவே வெளிப்படும்.

வெளியில் சென்று வருவதால் ஏற்படும் தலைவலியை, வெதுவெதுப்பான நீரில் குளிப்பதன் மூலம் தீர்க்கலாம்.

அதிக உடல் உழைப்புக் காரணமாக தலைவலி வந்தால் தலையை மசாஜ் செய்ய வேண்டாம். கை, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றிற்கு லேசான மசாஜ் கொடுத்தால் தலைவலி பறந்துவிடும்.

சிலருக்கு காலையில் எழுந்திரிக்கும் போதே தலைவலி வந்து விடும். இதற்கு அவர்கள் படுக்கும் நிலை அதாவது, தலைக்கு அதிகப்படியான உயரம் வைப்பது, ஒரேப் பக்கம் படுப்பது போன்றவை காரணமாக அமையலாம். இதனை மாற்றினால் தலைவலியும் மாறும்.

சரியான நேரத்திற்கு உணவை உண்ணுங்கள். உணவுக்கும், தலைவலிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக உள்ளது. பசி காரணமாகக் கூட தலைவலி ஏற்படலாம்.

மேலும், அதிக நாட்களாக தலைவலி இருந்து அதனை வலி நிவாரணி சாப்பிட்டு சரி செய்து கொள்வது மிகவும் தவறு. உடனடியாக அதற்கான நிவாரணத்தை மருத்துவரை அணுகி பெற வேண்டும்.