Home பெண்கள் அழகு குறிப்பு சுருக்கமில்லாத முகத்திற்கு காய்கறி, பழச்சாறு பூசுங்க !

சுருக்கமில்லாத முகத்திற்கு காய்கறி, பழச்சாறு பூசுங்க !

37

இளமையோடும், அழகுடனும் இருக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பு பெண்களின் எண்ணம். கண்களுக்கு கீழே கருவளையமோ, முகத்தில் லேசாக சுருக்கமோ ஏற்பட்டாலோ உடனே அழகு நிலையங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து முகத்தை அழகு படுத்திக்கொள்பவர்கள் இருக்கின்றனர். ரசாயனங்கள் நிறைந்த அந்த பொருட்களை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவது வாடிக்கை. ஆனால் பணம் அதிகம் செலவு செய்யாமல் அன்றாடம் சமையலுக்கு வாங்கும் பொருட்களை வைத்தே அழகு படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். இதனால் செலவும் மிச்சமாகும் காலி ஃப்ளவர், முள்ளங்கி வெயிலில் அலைவதால் முகம் கருப்பாகிவிடும். அழுக்குகள் படிந்து முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். இவற்றைப் போக்க காலிஃப்ளவரும், முள்ளங்கியும் போதும். 2 ஸ்பூன் பாலுடன் ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு திகழும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். காரட், ஆரஞ்சு பழம்

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன், காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்கவும். அந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளப்பளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மென்மை தரும் வெள்ளரி

வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக மை போல அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும். முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

சுருக்கம் நீக்கும் கோஸ்

முட்டைக் கோஸ் இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு ஈஸ்ட், ஒரு ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகத்தில் தடவி பேக் போடவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

இதன் பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை துடைத்து விட்டு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். ஒருமணி நேரம் இந்த கலவை முகத்தில் இருக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். வாரம் ஒருமுறை இதுபோல செய்து வர முகம் சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். பருக்கள் இருந்தாலும் மறையும்.

சத்தான சாத்துக்குடி

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பால், பப்பாளி

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.