Home பெண்கள் தாய்மை நலம் சுகப்பிரசவத்திற்கு மனதளவில் தயாராகுங்கள்!

சுகப்பிரசவத்திற்கு மனதளவில் தயாராகுங்கள்!

9

சுகப்பிரசவம் என்ற வார்த்தையே மறந்து போகும் அளவிற்கு தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பெண்களிடத்தில் சுக பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம் சிசேரியன் பிரசவங்களை தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்க, பணமும் ஒரு காரணம் என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது. கர்ப்பிணிகள் மனதளவில் தயாரானாலே சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

உடல் உழைப்பு இல்லை

ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால் இன்றைக்கு சென்னையில் மட்டும் 50 சதவிகிதத்திற்கு மேல் சிசேரியன் பிரசவமே நடைபெறுவதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம் ஒன்று. இவ்வாறு சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு வாழ்க்கை முறை மாற்றம், அதிக எடை, குறைந்த உடல் உழைப்பு போன்றவையே என்கின்றனர் மருத்துவர்கள்.

நோய் தாக்குதல்

மாறி வரும் வாழ்க்கை முறை சிசேரியன் பிரசவத்திற்கு ஒரு காரணம் “வாழ்க்கை வசதிகள் பெருக, பெருக இயல்பான பிரசவங்கள் குறைந்து, சிசேரியன் அதிகரித்து வருகிறது. இப்போது உடல் உழைப்பு குறைந்துவிட்டது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவை சில நேரங்களில் தாய்-சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். இதுவே சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணங்கள்,” என்கின்றனர் மருத்துவர்கள்.

மனதளவில் மாற்றம்

உடல்நிலை ஒருபக்கம் இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் அதிகரிக்க, பணம் ஒரு முக்கிய காரணம் என்பது நடுநிலை மருத்துவர்களின் கருத்து. இப்போது மருத்துவமும் வர்த்தகமாகப் பார்க்கப்படுவதால், தாங்கள் செய்துள்ள முதலீட்டுக்கு ஏற்ப பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம், தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. கரு உருவாகி, தங்களிடம்,”செக்-அப்’புக்கு வரும்போதே அந்தப் பெண்ணின் மனநிலையை, சிசேரியன் பிரசவத்துக்கு ஏற்ப, தனியார் நிறுவனங்கள் தயார் செய்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள் கர்ப்பிணியின் உடல் அமைப்பு, சாதாரண பிரசவத்துக்கு ஏற்றதாக இருந்தால், சிசேரியனுக்கு அவர்களைக் கட்டாயப்படுத்துவது இல்லை. மேலும் முந்தைய காலத்தில் ஏழு, எட்டு முறை கர்ப்பம் தரிப்பார்கள். இதில் ஒன்றிரண்டு குழந்தைகள் இறந்தே பிறக்கும். ஒன்றிரண்டு மிஞ்சும். ஆனால், இப்போது ஒன்று, தப்பினால் இரண்டு என்றாகிவிட்ட நிலையில் யாரும், “ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை. அதனாலேயே சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிடுகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

நல்ல நாள் பார்த்து

அதேபோல் சாதாரண பிரசவத்தை விட சிசேரியன் பாதுகாப்பானது என, பலர் நம்புகின்றனர். மேலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது, அதேபோல் ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் குழந்தை பிறப்பதையும் பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை. எனவே நல்ல நாள் பார்த்து குழந்தையை சிசேரியர் செய்வது அதிகரித்து வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

பயமும் காரணம்

‘ஏழை மற்றும் அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பெண்களில் பெரும்பாலோர், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக்கொள்வதால், அவர்களுக்கு சாதாரண பிரசவம் தான் நடக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினர் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரிலோ, பயம் காரணமாகவோ, சிசேரியனை எளிதில் தேர்வு செய்கின்றனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்துக்கு 50 டெலிவரிகளில் 40 சுகப்பிரசவம் தான் என்கின்றனர் செவிலியர்கள்.

அதேசமயம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் கூட சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 20 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள் 2011ம் ஆண்டு 50 சதவீதமாக அதிகரித்துவிட்டது,” என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடியாதவை, தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதே இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே தாய் – சேய்க்கு நல்லது என்பதே மருத்துவர்களின் ஒருமித்த கருத்து. எனவே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் என்று டாக்டர்கள் உறுதி கொள்ள வேண்டும். நார்மல் டெலிவரியை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சுகப்பிரசவம் எளிதாக

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த நாள் முதலே உடலையும், மனதையும் தயாராக்க வேண்டும். இதற்கு சாத்வீகமான உணவுகள் உட்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, உள்ளிட்ட நோய்கள் எதுவும் பாதிக்காமல் உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். மனதை அமைதிப் படுத்தும் தியானம், யோகா போன்றவைகளை செய்வதன் மூலம் கர்ப்பிணிகளின் உடலும் மனமும் சுகப்பிரசவத்திற்கு தயாராகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.