Home குழந்தை நலம் குழந்தை இல்லையா? கவலை வேண்டாம்

குழந்தை இல்லையா? கவலை வேண்டாம்

27

குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சையில் அறிவியலும், ஆராய்ச்சியும் பெரும் பங்காற்றி வருகின்றன.

குறைகளைக் கண்டறிய…

ஸ்கேனில் 3ஈ, 4ஈ டாப்லர் (ரத்த ஒட்டம் பார்ப்பது) ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பப் பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை “ஹிஸ்டீரோ சால்பின்கோக்ராம்’ (H‌y‌s‌t‌e‌r‌o Sa‌l‌p‌h‌i‌n‌g‌o‌g‌ra‌m) எனும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர் கோர்த்தல் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கலாம்.

ஆண்களுக்கு உள்ள குறையைக் கண்டறிய…

ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறையில் மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம். நுட்பமான முறையில் விந்தின் குறைகளைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கின்றன.

லாப்ராஸ்கோப்பி உதவும்:

மருந்துகள் மூலமும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப் பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார்க் கட்டிகள், நீர்க் கட்டிகள், ரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவற்றை ஸ்கேனில் லாப்ராஸ்கோப்பி, ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து முழுமையாகக் குணப்படுத்தலாம்.

முதல்முறையாக…

சென்னை பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில்தான் 3ஈ லாப்ரோஸ்கோப்பி முதல் முறையாக உபயோகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மிக நுட்பமாக அறுவைச் சிகிச்சை செய்வதால் ரத்தக் கசிவு குறைவாக உள்ளது.

90 சதவீதம் பேருக்கு…

இவ்வாறு நவீன அறுவைச் சிகிச்சை முறைகளைக் கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவீதம் பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும். மீதமுள்ள 10 சதவீத பெண்களுக்கு கருப்பையில் விந்தணுவைச் செலுத்துதல் (IUI) அல்லது சோதனைக் குழாய் குழந்தை (ஐவிஎஃப்) அல்லது விந்தணுவை முட்டையில் செலுத்துதல் (இக்ஸி) முறை தேவைப்படுகிறது. IUI (கருப்பையில் விந்தணுவைச் செலுத்துதல்) ஆறு முறை தோல்வி அடைந்தால் ICSI முறைக்கு (சோதனைக் குழாய் குழந்தை முறை) மாறுவது நல்ல பலனை அளிக்கும்.

வெற்றிக்குக் காரணம் என்ன?

1990-ஆம் ஆண்டு ஐவிஎஃப் முறையில் 8-10 சதவீத பெண்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான முறைகளினால் 60-85 சதவீதம் வரை கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். நவீன கருவிகளையும் முறைகளையும் உபயோகிப்பதே இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம்.

வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்தணு, கர்ப்பப்பை ஆகிய மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.

42 வயது வரை உள்ள பெண்களுக்குக்கூட…

எல்லோருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய முட்டைதான் வேண்டும் என்று நினைப்பது சகஜம். இன்றைய மருந்துகளும் உபயோகிக்கும் முறையில் உள்ள முன்னேற்றங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. “ஐவிஎஃப் லைட் ப்ரோட்டாக்கால்’ என்ற முறையைக் கடைப்பிடித்து பிறகு 42 வயது வரை உள்ள பெண்களுக்கு தன்னுடைய முட்டையை உபயோகித்து கரு உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

விந்தணு தரத்தை அதிகரிக்க மருந்துகளும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சையும் உள்ளன. இதைத் தவிர, மிகவும் அதிநவீன (ஐ.எம்.எஸ்.ஐ) முறையினால் விந்தணுவை கணினி (கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் இமேஜ்) மூலம் 7000 மடங்கு பெரிதாகப் பார்த்து மிகவும் சிறப்பான விந்தணுவைத் தேர்வு செய்யலாம்.

கருவைப் பாதுகாக்கும் சிறப்புக் கருவி:

சிறப்பான கருவை உருவாக்கி அதில் மிகவும் சிறப்பான கருவைத் தேர்ந்தெடுப்பது எப்படி? “எம்ப்ரியோஸ்கோப்’ என்பது மிகவும் அதிநவீன கருவி. இந்த இன்குபேட்டரில் கருவை பாதுகாப்பாக வைக்கிறோம். இதில் கேமரா உள்ளதால் கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிஷமும் பதிவு செய்ய முடியும்.

இதனால் கருவின் வளர்ச்சியில் குறை இருந்தால் அதைக் கண்டுபிடித்து கருப்பையில் செலுத்தும் முன் சிறந்த கருவைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பை 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரையாகக் கூற வேண்டுமானால் திருமணம் ஆன ஓர் ஆண்டுக்குள் கர்ப்பம் அடையவில்லையென்றால், மருத்துவரை அணுகலாம். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்யத்தில் சிக்கல் இருந்தாலும் மருத்துவரை அணுகலாம். முக்கியமாக 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.