Home பெண்கள் தாய்மை நலம் குழந்தைக்குத் திட்டமிடுதல்: தம்பதியர்களுக்கான அறிவுரை

குழந்தைக்குத் திட்டமிடுதல்: தம்பதியர்களுக்கான அறிவுரை

31

‘கருத்தரித்தல்’ என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும் உடலும் எப்படித் தயாராகிறதோ, அதேபோல மனதளவிலும் தயாராக வேண்டும். நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கியமான சூழலும் ஊட்டமிக்க உணவுகளும், ஒரு பெண்ணுக்கு பிரசவத்தை இனிய அனுபவமாக மாற்றுகின்றன.

திட்டமிடுதலில் தொடங்கி, கருத்தரித்தல், பரிசோதனைகள், பிரசவம் வரையிலான 10 மாத கால ‘பரவச அனுபவத்தை’ பாதுகாப்பானதாக மாற்ற இந்தக் கையேடு உதவும்.

திருமணமானதும், தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்துத் தெளிவாகப் பேசித் திட்டமிட வேண்டும். கணவனும் மனைவியும் கலந்துபேசி மகிழ்ச்சியான மனநிலையில் ஒன்று கலந்து கருத்தரிக்கும் போது தான் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பார்கள். குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரம், கணவன் – மனைவி உடல் நலம் அடிப்படையில் இந்தத் திட்டமிடுதல் இருக்க வேண்டும்.

குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்று தம்பதியர் முடிவுசெய்துவிட்டால், உடனே உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி, சில மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். முதல் மூன்று மாதங்களில்தான் குழந்தையின் உடல் உறுப்புக்கள் தோன்றுகின்றன. இந்தக் காலத்தில் தாய்க்கு எந்த உடல்நலப் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அதற்கு மாத்திரை எடுத்துக்கொள்வதும், எடுக்காமல் இருப்பதும்கூட குழந்தையைப் பாதிக்கும்.

இருவரும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பி.எம்.ஐ. 25-க்குள் இருக்க வேண்டும். முட்டை மற்றும் விந்தணு தரத்துடன் இருக்க உடல் எடை கட்டுக்குள் இருப்பது அவசியம். சராசரி உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பது, சிசேரியன் போன்றவற்றைத் தவிர்க்கலாம். தைராய்டு, சர்க்கரை, ருபெல்லா, சின்னம்மை, ஹெபடைடிஸ் பி, டி.பி., எச்.ஐ.வி. பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: ருபெல்லாவுக்கான தடுப்பு ஊசியை, ஒரு பெண் போட்டிருந்தால், அதிலிருந்து ஒரு மாதத்துக்கு தாய்மை அடையக் கூடாது.