Home இரகசியகேள்வி-பதில் திருமணத்துக்கு முன் காதலருடன் பாலுறவு செய்வது தவறா?

திருமணத்துக்கு முன் காதலருடன் பாலுறவு செய்வது தவறா?

111

எனக்கு வயது 18. நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவருக்கு வயது 22. அவர் என்னிடம் நெருங்கிப் பழகினார். நானும் அவரை நம்பிப் பழகினேன். இப்போது என்னிடம் தாம்பத்திய உறவுகொள்ள ஆசைப்படுகிறார். அதற்கு நான் அனுமதிக்கவில்லை.

அதனால் சில நாட்களாக என்னிடம் அவர் பேசவில்லை. நானும் விலகிவிட்டேன். மறுபடியும் என்னிடம் பேசினால், பேசலாமா வேண்டாமா? என்று தெரியவில்லை. எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்களா? இல்லை காதலிப்பது தப்பா? நான் என்ன செய்வது?

சகுந்தலை – துஷ்யந்தன் காலம் தொட்டு எழுந்துள்ள சர்ச்சை இது. ஆண்களுக்கு, காதல் – காமம் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் அறிவு முதிர்ச்சி அநேகமாக இருப்பதேயில்லை – அதிலும் இருபத்திரண்டு வயதில் – ஊகூம்! ஆனால் அதற்காக அவர்களைக் “ காம வெறியர்கள் “ என்று ஒதுக்கி வைக்க வேண்டாம். அவர்களது மனரசாயனம் அப்படி. அதை அடக்கி வாசிக்க அவர்கள் கற்றுக்கொள்ள நிறைய அவகாசம் தேவை.

காதலிப்பது தப்பா, சரியா என்றெல்லாம் குழம்ப அவசியேமேயில்லை. காரணம், காதல் ஓர் இயற்கையான உந்துதல் – ஒரு வகை உறவுப் பசி. மற்ற பசிகளைப் போல, நல்லது – கெட்டது, ஒத்துக்கும் – ஒத்துக்காது என்றெல்லாம்“ பார்த்து பசியைத் தீர்க்கலாம். ஆனால் பசி ஏற்படாமல் தடுக்க முடியாதே. ஆகவே, காதலிக்கலாம், தப்பில்லை.

ஆனால் இது தேறுமா தேறாதா என்று யோசிக்கவும் வேண்டும். சரி நடந்தது நடந்துவிட்டது – இனி என்ன செய்யலாம் என்றால் நீங்கள் எதுவும் செய்யவேண்டாம். விட்டுப் பிடியுங்கள். வந்தால் நல்லது, வராவிட்டால் கொஞ்சம் வலிக்கும். ஆனால், பொய்யான காதலனைவிட கொஞ்சநாள் வலி பரவாயில்லைதானே? யோசித்துப் பாருங்கள்.

கணவனோ அல்லது மனைவியோ ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் அவ்வாறு இருக்க வாய்ப்புண்டா?

இல்லை. ஓரினச் சேர்க்கை தன்மை என்பது வெறும் மரபணு குறைபாட்டால் நேரும விபத்தல்ல. இதற்குப் பல கருவறை ரசாயனங்களும், வளர்ப்புமுறையும், சமூகச்சூழலும் பெரிய காரணங்கள் என்பதால் ஓரினச் சேர்க்கை பரம்பரை பரம்பரையாக ஏற்படுவதல்ல. அப்படியிருந்தால் ஓரினச் சேர்க்கையாளர்களே உருவாக வாய்ப்பில்லையே!

எனக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் எனக்குத் தாம்பத்ய உறவில் நாட்டம் குறையவில்லை. ஆனால் என் மனைவிக்கு அதில் ஆர்வம் போய்விட்டது. உதட்டு முத்தம் கொடுத்தால்கூட, அவளுக்குப் பிடிப்பதில்லை. தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். அவளுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்.

உங்கள் மனைவியின் “நோ ரியாக்ஷன்“ நிலைக்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கலாம்.

1. உடலில் ஏற்படும் ரசாயனக் கோளறுகளால் விளையும் உபாதைகள், உதாரணத்துக்கு நீரிழிவு நோய் (டயாபெடிஸ்), ரத்தக் கொதிப்பு, தைராய்ட் சுரத்தலில் குறைபாடு, மனச்சோர்வு, மாதவிலக்குப் பிரச்னைகள் போன்றவை.

தாம்பத்யம் என்பது உடல் ரசாயனங்களின் ஒருங்கிணைந்த கச்சேரி. அந்த ரசாயனங்களில் ஏதேனும் அபஸ்வரம் நேர்ந்தால், கச்சேரியே களை இழந்துவிடுகிறது. இது தொடராமல் இருக்கவேண்டுமானால் உங்கள் மருத்துவரை அணுகி, உடல் மற்றும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சையும் செய்துகொண்டால், கூடிய சீக்கிரமே ரசாயனங்கள் ஸ்ருதி சேர்ந்து கச்சேரியும் அமர்க்களப்படும்!

2. உள்ளத்தில் ஏற்படும் ஊமைக்காயங்களால் உளைச்சல்கள் உண்டாகின்றன. உடற்கோளாறுகளை விட இந்த உள்ளக் கோளாறுகள்தான் பெரும்பாலான தாம்பத்ய பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. பொதுவாக பெண்ணின் மனநிலை, தாம்பத்யத்தை அன்பின் வெளிப்பாடாகவே பாவிக்கிறது. அன்பின் வெளிப்பாடாக தன் பங்குக்கு அவள் எதிர்பார்ப்பது, அவளையும் அவள் சுற்றத்தாரையும் தகுந்த மரியாதையுடன் நடத்துவது, அவள் பணிகளில் உதவுவது, அவளது பொருளாதாரத் தேவைகளை முடிந்த மட்டும் பூர்த்தி செய்வது, அவளுடன் பேச நேரம் ஒதுக்கி – பாராட்டு, புலம்பல், புரளி என்று அவள் எதைப் பேசினாலும் காது கொடுத்துக் கேட்பது (கஷ்டம்தான், குறைந்தபட்சம் கேட்பதுபோல நடிப்பது!) படுக்கையைத் தவிரவும் மற்ற சந்தர்ப்பங்களில் அவளைக் கண்டுகொள்வது… இப்படி காமம் சாராத பல தருணங்களில் அவளிடம் பக்குவமாக நடந்துகொண்டால்தான், அவளது இனம்சேரும் ஸ்விட்ச் இணக்கமாக இயங்கும்.

அதை விட்டுவிட்டு, இந்த னான் செக்சுவல் சமாசாரங்களில் அவளுக்கு அதிருப்தி ஏற்படும்படி நடந்துகொண்டால் போச்சு! “இதுக்கு மட்டும்தான் நானா?“ என்று முக்கியமான நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும்.

இந்த உளவியல் உண்மைகளை கிரகித்துக் கொண்டு, உங்கள் மனைவியுடன் நீங்கள் இதுவரை கொண்டுள்ள னான் செக்சுவல் உறவில் ஏற்பட்டிருக்கும் – நீங்கள் இதுவரை இதெல்லாம் ஒரு மேட்டரா என்று அசட்டையாகப் புறக்கணித்த விரிசல்களை முதலில் ஆராய்ந்து பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனைவியின் மனக்குறைகளைப் போக்குங்கள். போக்க முயல்கிறீர்கள் என்பதையும் புரியவையுங்கள். பிறகு பாருங்கள், அவர்களது ஆர்வத்தை!

நான் இதுவரை ஏழுமுறை காதலித்திருக்கிறேன். எனக்கு இப்போது முப்பத்தொரு வயதாகிறது. எனது எட்டாம் வகுப்பிலிருந்து காதல்கள் தொடங்கியிருக்கின்றன. இதனால் என்னைத் தவறான பெண் என்று நினைத்துவிட வேண்டாம். இந்த ஏழு காதலும் இயல்பாய் நிகழ்ந்து, விதியின் வசத்தால் முறிந்தவை. காதலின்போது, என்னை முத்தமிடவும் லேசாகத் தொடவும் அனுமதித்திருக்கிறேன். இப்போது என்னுடைய பயம் என்னவென்றால் எனக்கு எய்ட்ஸ் வந்திருக்குமா என்பதுதான். நான் திருமணம் செய்தால், கணவருடன் சந்தோஷமாக வாழ இயலுமா?

உங்களைத் தவறான பெண்ணாக நான் நினைக்கவில்லை. அப்படி நினைக்கும்படி நீங்கள் எதுவும் செய்துவிடவுமில்லை. பதின்மூன்று வயதில் ஆரம்பித்து, முப்பத்தொரு வயதுவரை உள்ள இந்தப் பதினெட்டு வருஷங்களில், ஏழு பேரைக் காதலித்திருக்கிறீர்கள். அதுவும் ஜஸ்ட் டச்சிங், கிஸ்ஸிங் வரைதான் முன்னேறியிருக்கிறீர்கள்… இதெல்லாம் எல்லோர் வாழ்விலும் நிகழும் யதார்த்தமான விஷயங்கள். இதில் குற்றவுணர்ச்சி கொள்ளவோ, ஆச்சரியப்படவோ எதுவுமே இல்லை.

மற்றபடி, “எய்ட்ஸ் வந்திருக்குமோ“ என்ற உங்கள் பயம் தேவையற்றது. சாதாரண தொடுதலாலோ, முத்தத்தாலோ எய்ட்ஸ் வைரஸ் பரவுவதில்லை. நோயினால் தாக்கப்பட்டவரின் உடல் திரவியங்கள், இன்னொருவரின் உடல் திரவியங்களோடு கலக்கும் போதுதான் எய்ட்ஸ் ரைவஸ் பரவும். இப்படி ஒருவரின் திரவியங்கள் இன்னொருவருக்குள் புக ஐந்து வழிகள்தான் இருக்கின்றன. அவை

1. உடலுறவின் போது
2. மாற்று ரத்தம் (அ) உறுப்பு (அ) உடல்பாகம் செலுத்தும்போது
3. ஏற்கனவே பயன்படுத்திய சிரிஞ்ச் ஊசியை மீண்டும் உபயோகிப்பதால்
4. பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து கருவில் வளரும் குழுந்தைக்கு.

நீங்கள் சொன்ன அந்த ஏழு காதல்களின்போது, மேலே உள்ள எந்தச் சம்பவமும் நிகழவில்லையென்றால், உங்களுக்கு ஹெச்.ஐ.வி. கிருமியின் தாக்குதலிருக்க வாய்ப்பே இல்லை.

உறவில் ஈடுபட்ட சில நிமிடங்களில் எல்லாம் என் மனைவிக்கு கிளைமாக்ஸ் வந்துவிடுகிறது. ஆனால், எனக்குத்தான் நீண்ட நேரம் ஆகிறது. என்னிடம் ஏதாவது குறையிருக்கிறதா? இது நார்மலான விஷயம்தானா?

பொதுவான பெண்களுக்கு உச்சம் தாமதமாகத்தான் ஏற்படும். உங்கள் மனைவிக்கே துரிதமாக ஏற்படுகிறதென்றால் காங்கிராஜீலேஷன்ஸ் நீங்கள் ஒரு கைதேர்ந்த காதலர் என்று அர்த்தம்! இது நார்மலான, சந்தோஷமான சமாசாரம் தான். டோண்ட் ஒர்ரி. கீப் இட் அப்!