Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிக்கு வலிப்பு நோய் இருக்கா? கவனமா இருங்க!

கர்ப்பிணிக்கு வலிப்பு நோய் இருக்கா? கவனமா இருங்க!

25

வலிப்பு நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல் அதிகம் உண்டு என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மூளையும் முதுகுத் தண்டுவடமும் பாதிக்கும் என்பதால் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

வலிப்புள்ள பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாமா? அப்படியே செய்தாலும், அவளால் கருத்தரிக்க முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா… என்கிற கேள்விகள் வலிப்பு வருகிற பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்து பெற்றோர்களையும் ஆட்டிப் படைக்கும். இந்த கேள்விகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றுங்களேன்.

‘‘வலிப்பு நோய் பாதிச்ச பெண்கள் கருத்தரிக்கிறதுல சிக்கல் வரும் வாய்ப்பு அதிகம். அப்படியே கருத்தரிச்சாலும் பிறக்கற குழந்தையோட மூளை வளர்ச்சியும் முதுகுத்தண்டும் பாதிக்கிற அபாயங்களும் உண்டு. மனித வாழ்க்கைக்கு ஆதாரமான டி.என்.ஏ. ஆரோக்கியமா இருக்கவும், பிறக்கற குழந்தை பிரச்னை இல்லாம இருக்கவும், வலிப்பு நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்பிருந்தே கவனமா இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சில பெண்களுக்கு 3-4 வருஷங்களா வலிப்பே வராமலிருக்கலாம். அதுக்காக வழக்கமா எடுத்துக்கிற மருந்துகளை நிறுத்திடக்கூடாது. ஒருவேளை கர்ப்பம் தரிச்சா, குழந்தையைப் பாதிக்குமோங்கிற பயத்துல அந்த மருந்துகளை நிறுத்தவே கூடாது. வலிப்பு நோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் சேர்த்து, ஃபோலிக் அமில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிரசவநேரத்தில் வலிப்பு

பிரசவ நேரத்தில் சில பெண்களுக்கு வலிப்பு வரலாம். கர்ப்ப காலத்துல இவங்களுக்குப் போதுமான தூக்கமும் ஓய்வும் முக்கியம். அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து, உடம்புல உள்ள மருந்து அளவுகளையும், ரத்த அளவையும் சரி பார்க்கணும். வலிப்புள்ள பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ எந்த சிக்கலும் இருக்காது.

தாய்ப்பால் கொடுக்கலாம்

பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாமாங்கிற சந்தேகமும் வேண்டாம். தாராளமா கொடுக்கலாம். ஆனால் கருவில் இருக்கும் போதே, குழந்தைக்குப் போன அதிகபட்ச மருந்துகளோட தாக்கத்தால, குழந்தைக்கு முதுகுத்தண்டு பிரச்னையோ, மந்த புத்தியோ வரலாம். அதைத் தவிர்க்கத்தான், கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்பான எச்சரிக்கை அவசியம்.

அம்மாவுக்கு வலிப்பு இருந்தால், அவர்களுக்கு பிறக்கற குழந்தைக்கும் வலிப்பு வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது சாதாரண பெண்களுக்குப் பிறக்கற குழந்தைகளுக்கு வலிப்பு வரும் வாய்ப்பு வெறும் 1 சதவிகிதம்னா, வலிப்புள்ள பெண்களுக்குப் பிறக்கற குழந்தைகளுக்கு அது இன்னும் 1 சதவிகிதம் அதிகம். அவ்வளவு தான். முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும் இருந்தால், வலிப்பு நோயுள்ள பெண்களும், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.