Home குழந்தை நலம் கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!

கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!

29

கர்ப்பிணிகள் உறங்கும் போது வலதுபுறம் திரும்பி படுப்பதினால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் உறங்கும் போது கவனம் தேவை என்றும் மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்ப்பத்தில் குழந்தை உருவானது முதல் பிரசவம் வரை கருக்குழந்தையானது எண்ணற்ற சிக்கல்களை சந்திக்கின்றது. கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளும் முறையை பொறுத்து சுகப்பிரசவமோ, சிசேரியனோ ஏற்படுகிறது. எவ்வளவோ பாதுகாப்பாக இருந்தாலும் சில சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தை, பிறப்பதற்கு முன்பே இறந்து விடும் சூழல் ஏற்படுகிறது. இதனை ஸ்டில்&பெர்த் என்றழைக்கின்றனர்.

இறப்பிற்கான காரணம்

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரித்தல், அதிக வயதில் தாய்மையடைதல் மற்றும் தொப்புள் கொடியின் நிலை, கருப்பையில் குழந்தைக்கு தேவையான நீர் குறைதல், கடைசி நேரத்தில் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காதது ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணிகள் படுக்கும் விதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

படுக்கும் முறையில் கவனம்

பிரசவத்திற்கு முன் குழந்தை இறப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கர்ப்பிணிகள் வலது புறம் படுப்பதால் குழந்தை இறப்பு விகிதம் இரு மடங்காகிறது என்று தெரியவந்துள்ளது. அதேசமயம் இடது புறம் படுத்துறங்குவதால் 1000க்கு 4 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கர்ப்பிணிகள் உறங்கும் போது நிமிர்ந்து படுக்ககூடாது ஒரு பக்கம் சாய்ந்தவாறே படுக்கவேண்டும். இடது புறம் படுப்பதால் தாயின் இரத்த நாளங்கள் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையேயான இரத்த ஓட்டம் சீராக அமைவதும் தெரிய வந்துள்ளது.

தொப்புள் கொடி பாதிப்பு

இந்தியாவில் பிரசவத்திற்கு முன் இறக்கும் குழந்தைகள் குறித்து இன்றைக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்க்கும், சேய்க்கும் இடையே தொடர்ப்பு ஏற்படுத்தும் தொப்புள் கொடியில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. புரதச் சத்து குறைபாடு, ஆக்சிஜன் குறைபாடு, கருவில் உள்ள பனிக்குட நீர் குறைதல் போன்றவையும் குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடைசி நிமிடம் வரை குழந்தையின் இதயத்துடிப்பு சரியான உள்ளதா என்றும், கருவில் உள்ள குழந்தையின் நிலை, செயல்பாடு குறித்தும் ஸ்கேன் செய்வதும் அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளின் இதயத்துடிப்பு

கருவில் உள்ள குழந்தைகள் இறப்பதை தடுக்க கர்ப்பிணிகள் கடைசி இரண்டு மாதங்களில் அதிக கவனமுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் பிரசவத்தை எளிதாக்க கால்சியம் நிறைந்த பால், சீஸ், தயிர் போன்றவற்றைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். பிரசவத்துக்குப் பிறகும் முறையான பல் பரிசோதனையும், பராமரிப்பும் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தில் அதிகம்

உலகிலேயே இங்கிலாந்து நாட்டில் தான் அதிகமாக குழந்தைகள் இறப்பு விகிதம் காணப்படுகிறது. அங்கு வருடத்திற்கு 4,000 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகின்றன. மேலும் 3ல் 1 பங்கு குழந்தைகள் இறப்பதற்கான மிக சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதனை தடுப்பதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.