Home பெண்கள் தாய்மை நலம் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

39

இன்று எண்ணற்ற கருத்தடை சாதனங்களும் தயாரிப்புகளும் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றில், மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது கருத்தடை மாத்திரைகளாகும். கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக, நாள் தவறாமல் தினமும் ஒரு மாத்திரை போட்டுக்கொள்கிறோம், ஆனால் அதைப் பற்றி நாம் எவ்வளவு தெரிந்துவைத்துள்ளோம்?

அது எப்படி செயல்படுகிறது (How it works)
கருத்தடை மாத்திரைகள் கருமுட்டை வெளியாவதைத் தடுப்பதன் மூலம் வேலை செய்கின்றன. இந்த மாத்திரைகளில் உள்ள ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிரோஜெஸ்டின் ஆகியவற்றின் அளவு அதிகமானதைப் போன்ற சமிக்ஞைகளை உங்கள் சினைப்பைகளுக்கு அனுப்புகின்றன, இதனால் சினைப்பைகள் கருமுட்டைகளை வெளியிடாமல் தடுக்கப்படுகிறது. விந்தணு கருமுட்டைகளை அடைய முடியாமல் போவதால், கருத்தரித்தல் அல்லது கர்ப்பம் ஏற்படாது.
இவை எந்த அளவுக்குப் பலனுள்ளவை? (How effective is it?)

கருத்தடை மாத்திரைகள் 99% செயல்திறன் கொண்டவை என்று நம்பப்படுகிறது, இதனால் கருத்தடை முறைகளில் இது மிகவும் நம்பகமான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும், மாத்திரை வேலை செய்ய வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அதே நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கூடுதல் சத்து மருந்துகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அல்லது பிற மருந்துகளை உடன் எடுத்துக்கொள்ளும்போது இவற்றின் செயல்திறன் குறையலாம், வாந்தியை ஏற்படுத்தலாம்.
இந்த மாத்திரைகள் கர்ப்பத்தைத் தடுக்க முடியும் என்பதால், பால்வினை நோய்களில் இருந்தும் இவை ஒருவரைப் பாதுகாக்க முடியும் எனப் பலர் தவறாக நினைக்கிறார்கள். இவை பால்வினை நோய்களில் இருந்து எவ்விதப் பாதுகாப்பையும் வழங்குவதில்லை, அதற்கு நீங்கள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதே சிறந்த வழி.

இவை வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? (How long does it take to start working?)
பல பெண்கள், மாத்திரையை விழுங்கிய அந்த நிமிடமே அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று நம்புகிறார்கள். சராசரியாக, ஒரு மாத்திரையை எடுத்துக்கொண்ட பிறகு 2-5 நாட்களில் தான் அது வேலை செய்யத் தொடங்கும். எனினும், கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு ஆணுறை போன்ற பிற கருத்தடை முறையைப் பின்பற்றுவது நல்லது.

இவற்றின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects to be expected?)
கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவுகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. சில பெண்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் சிலருக்கு தசைப்பிடிப்பு வலிகள், மனநிலை தாழ்தல், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இரத்தக் கட்டிகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த மாத்திரைகளின் பக்கவிளைவுகளைப் பொறுத்தவரை, நல்ல விஷயம் என்னவெனில், இவை சினைப்பைப் புற்றுநோய் மற்றும் கருப்பை உள்ளுறைப் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் அபாயம் மிகக் குறைவு.

இவை வேலை செய்வதை நிறுத்த எவ்வளவு நேரம் ஆகும்? (How long does it take to stop working?)
கர்ப்பமடைய நினைக்கும்போது, மாத்திரையை நிறுத்திவிட வேண்டும். உடனடியாகவே வழக்கமான மாதவிடாய் சுழற்சி மீண்டும் தொடங்கும், சிலசமயம் ஒரு சில மாதங்களில் சீராகும்.
கருத்தடை மாத்திரைகளை சரியாகப் பயன்படுத்தினால், இவற்றை குறைந்த செலவிலான, அதிக பலனளிக்கக்கூடிய ஒரு எளிதான கருத்தடை முறை எனலாம். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளவும். உங்களுக்கு கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானதுதான் என்றும், உங்கள் கடந்த கால மருத்துவப் பிரச்சனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இவை உங்களுக்கு பலனளிக்கும் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ விவரங்கள் தகவலுக்காக மட்டுமே. உடல்நலம் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுக்கும் முன் அல்லது குறிப்பிட்ட மருத்துவ நிலை பற்றிய வழிகாட்டலுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.