Home உறவு-காதல் கணவரை குறை கூறி மனைவி மனம் நிறையாது..

கணவரை குறை கூறி மனைவி மனம் நிறையாது..

29

ஆயிரம் ஆசைகள், கனவுகளுடன் திருமண பந்தத்தில் இணையலாம். ஆனால், ஆனந்தமாகச் செல்லும் வாழ்க்கைக் கப்பலை, சின்ன விஷயம் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஓட்டைகள் அப்படியே கவிழ்த்துப் போட்டுவிடும். மனதை கொல்லும் ஒற்றை வார்த்தையால் உறவை முறித்துக் கொண்டவர்கள் உண்டு. கொழுத்திப் போடும் நட்பு வட்டாரம், விட்டொழிக்க முடியாத வேண்டாப் பழக்கம், சந்தேக நடத்தை, நாடக வாழ்க்கை என எத்தனையோ விஷயங்கள் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது.

வாழ்க்கைப் பந்தத்தை சிக்கலுக்குள்ளாக்கும் அத்தகைய பிரச்சினைகள் உங்களிடம் இருக்கிறதா? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்….

நண்பர்கள்:

நட்பு, வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பின் நட்பிற்கு எல்லை வகுக்க வேண்டும். நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் குடும்ப நலன் கருதி அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ‘நான் எப்போதும்போல நட்பைத் தொடர்கிறேன்’ என்று கூறிக் கொண்டு நள்ளிரவு வரை அரட்டையடித்துவிட்டுத் திரும்புவது, ‘எனக்கு நட்பே முக்கியம்’ என்று மனைவியிடம் ‘பஞ்ச்’ வசனம் பேசுவது போன்றவை குடும்ப வாழ்க்கையில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

‘நானும் நட்பு பாராட்டுகிறேன்’ என்று மனைவியும் கிளம்பிச் சென்று நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பினால், எந்தக் கணவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே ஆண்களின் நட்பு வட்டமும், குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தப்பட வேண்டியதுதான். அம்மா, அப்பா, குடும்ப உறவு என அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்திருக்கும் மனைவிக்காக, ஆண்களும் நட்பை கொஞ்சம் தூரத்தில் வைத்திருப்பது ஒன்றும் தவறில்லை. திருமணத்திற்குப் பின் நட்பின் வட்டம் சுருங்குவதை நண்பர்கள் யாரும் தவறாக நினைத்துவிட மாட்டார்கள். பக்குவமாகப் புரிந்து கொண்ட நட்பு வட்டம் வளரவே செய்யும். பக்குவமற்ற நட்பை முறிக்காவிட்டால், திருமண உறவுதான் முறியும்.

சமூக வலைத்தளம்:

ஆண்- பெண் பேதமில்லாமல் சமூக வலைத்தளங்களில் மூழ்கி போகிறவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் புகுந்துவிட்டால் சுற்றி இருக்கும் உலகத்தை மறந்து போகிறவர்கள் அனேகம். திருமணத்திற்குப் பிறகும் இப்படி சமூக வலைத்தளத்தில் அடிமையாக இருப்பது பிரச்சினையை வளர்க்கும். சமூக வலைத்தளத்தில் உள்ள நட்பு வட்டாரம், தேவையற்ற மெசேஜ்கள் நிறைய குடும்பங்களில் சந்தோஷத்தை கெடுத்துள்ளது. என்னதான் பயனுள்ளதாக இருந்தாலும், குடும்பத்தைக் கடந்த முக்கியமான கடமைகள் எதுவும் சமூகவலைத்தளத்தில் இல்லை என்பதை உணருங்கள். சமூக வலைத்தளத்திற்கு கொடுக்கும் மரியாதையை, ஒதுக்கும் நேரத்தை எதிர்கால திட்டமிடலுக்கு ஒதுக்குங்கள். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த, உறவுகளை புரிந்து கொள்ள அந்த நேரத்தை பயன்படுத்துங்கள்.

வெறுப்பு :

வெறுப்பு எவ்வளவோ உறவுகளை கருவறுத்துள்ளது. கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் வெறுப்புடன் அணுகக்கூடாது. துணையின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வெறுப்பின் கணையை வீசக்கூடாது. வெறுப்பு எப்போதும் பொறுப்பை மறக்கச் செய்துவிடுகிறது, பொறுமையையும் இழக்கச் செய்துவிடுகிறது. எனவே வெறுப்பின்றி பிரச்சினையை கையாண்டு தீர்வினைத் தேடவேண்டும். பிரச்சினையான நேரத்தில் பேசுவதை ஒத்திப்போட்டுவிட்டு, சிறிது ஓய்வுக்குப் பின் பேசினால் இருவர் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, சுமுக முடிவு கிடைக்கும். வெறுப்பை வெறுக்க கணவனும், மனைவியும் கற்றுக்கொள்ளவேண்டும்.

பொய் சொல்லுதல்:

தேவையற்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பொய் சொல்வது சிலரது வழக்கம். பொய் சொல்வதை சாமர்த்தியமாகவும் நினைத்துக் கொள்வார்கள். பொய்யின் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் உணர்வதில்லை. பொய் பேசுவது தெரிந்து போனால் பின்னர் அவர் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அவர் மீது நம்பிக்கை வருவதில்லை. உண்மையைப் பேசும்போதும் புலி வருகிறது கதையாக எடுபடாமல் போய்விடும். பொய்யினால் வாழ்க்கை பொய்யாகிப்போனால் அப்போது வருத்தப்பட வேண்டியிருக்கும். மெய்போல பொய்பேசும் தவறான பழக்கத்தை கைவிடுவது வாழ்க்கையை வளமாக்கும்.

அலட்சியப்படுத்துவது:

துணையின் பேச்சை காதிலேயே வாங்காமல் அலட்சியப்படுத்துவது எரிச்சலை உண்டுபண்ணும். விரிசலுக்கு வழிவகுக்கும். மனைவி மிக முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று குறுக்கிட்டு ‘ஆமா.. நீ என்ன சொன்னாய்?’ என்று கேட்பது அலட்சியத்தின் வெளிப்பாடுதான். இது மனைவியை எரிச்சல்படுத்தும். இந்த அலட்சியம் எவ்வளவு மரியாதை குறைச்சலான விஷயம் என்பதை உணர வேண்டும். ‘என்ன பேசினாலும் நான் காது கொடுத்தே கேட்கமாட்டேன்’ என்பது போன்ற இந்த அலட்சியப் போக்கு, பேசுபவருக்கு மனதில் ஆறாத காயத்தை உருவாக்கிவிடும். ஆனந்த வாழ்வுக்கு உலை வைத்துவிடும்.

பொய்யான வாக்குறுதி:

வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். முடியாவிட்டால் வாக்குறுதி தராமல் இருப்பதே நல்லது. திருமண பந்தத்தில் வாக்குறுதிகள் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும். அதை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் மனஸ்தாபம் ஏற்படும். வாக்குறுதி தரும்போது இருக்கும் மனநிலை, பின்னர் சூழ்நிலையால் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை வரலாம். எனவே கூடுமானவரை வாக்குறுதிகளை தவிர்க்கலாம். அல்லது எப்பாடுபட்டேனும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒப்பீடு:

துணையை எப்போதுமே ‘அவர் களைப் பார், இவர்களைப் பார்’ என்று யாரோடும் ஒப்பீடு செய்யாதீர்கள். பொருளாதார விஷயத்தில் கணவரை மற்றவருடன் ஒப்பிடுவதும், அழகு, திறமையில் மனைவியை மட்டம்தட்டி மற்றவர்களுடன் ஒப்பிடுவதும் அனேக குடும்பங்களில் பிரச்சினைகளை பெரிதாக்கி இருக்கிறது. ஒப்பீடு மிக ஆபத்தானது. மற்றவரை ஆழ்ந்து கவனித்து தனது துணையுடன் ஒப்பிடுவது, சந்தேகத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கும். இது பிரிவினைக்கே வழிவகுக்கும். ஒருவர் மற்றவரின் திறமையையும், தகுதியையும் வளர்க்க தோள்கொடுப்பதே துணைவரின் கடமை என்பதை இருவரும் உணர வேண்டும்.

வேண்டாத வார்த்தைகள்:

வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துபோகும். அதற்காக ஆறாத வடுவை உருவாக்கும் வேண்டாத வார்த்தைகளை பேச வேண்டாம். பதிலுக்குப் பதில் பழிச் சொற்களை உதிர்க்க வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் திருமண வாழ்க்கையை தொடர்பு படுத்தி, கேவலப்படுத்தி பேச வேண்டாம். நிம்மதியைக் கெடுக்கும் வார்த்தைகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருக்கிறது. கோர்ட்டு படியேற வைத்திருக்கிறது. உயிரையும் பறித்திருக்கிறது. எனவே பேசும் வார்த்தையில் கவனம் வையுங்கள். பேசக் கூடாத வார்த்தைகளை பிரயோகப்படுத்த வேண்டாம்.

சொல்லிக்காட்ட வேண்டாம்

நடந்து முடிந்த விஷயத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டாம். ஒரு முறை நடந்த தவறை மீண்டும் மீண்டும் குத்திக் காட்டி பேச வேண்டாம். கணவரை குறைகூறி மனைவி மனம் நிறையப் போவதில்லை. வாழ்வின் நிலையும் உயரப்போவதில்லை. எதையும் திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு பிரச்சினைக்கு தீர்வே இல்லாமல் இழுத்துக்கொண்டே போக வேண்டாம்.

திருமண வாழ்க்கையை சிதைக்கும் சின்னச் சின்ன விஷயங்களை சரி செய்து கொண்டால் வாழ்க்கை வளமாகும்.