Home அந்தரங்கம் உறவை வலுப்படுத்த அன்பே மூலதானம்!

உறவை வலுப்படுத்த அன்பே மூலதானம்!

18

அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும். அதனால்தான் `உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ என்கிறார் ஓஷோ. அன்பிருந்தால் துன்பமில்லை” என்றார் புனிதர் அகஸ்டின்.

அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.

இல்லறம் நல்லறமாகும்

நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.

தன்னலமற்ற அன்பு

தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.

புரிதலே சிறந்த அன்பு

புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும்.

நம்புங்கள் நன்மை ஏற்படும்

ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும்.

அன்பு ஆழமாக பாராட்டுங்கள்

ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.

அன்போடு தழுவுங்கள்

தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும்.கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.