Home சூடான செய்திகள் இளமையில் கிடைக்காததை நடுத்தர வயதில் பெண்களால் அனுபவிக்க முடியும்

இளமையில் கிடைக்காததை நடுத்தர வயதில் பெண்களால் அனுபவிக்க முடியும்

17

201501041812430810_If-young-women-in-middle-age-you-did-not-get-to-enjoy_SECVPFவயதில் காதல்வசப்பட்டு, 20 வயதில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து ரகசிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள், நந்தினி. இப்போது அவளுக்கு 45 வயது.
‘‘நான் நடுத்தர வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு ஒரு ரவுடித்தனமான அண்ணன் உண்டு. பெற்றோர் அவனுக்கு அடங்கி, ஒடுங்கி நடந்தார்கள். நான் ஒருபோதும் அவனுக்கு பயப்படமாட்டேன்.
கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த முதல் ஆண்டிலே நான் காதல்வசப்பட்டேன். என் காதலனுக்கு, என் அண்ணன் மீது பயம் உண்டு. நான்தான் தைரியம் கொடுத்து, தொடர்ந்து காதலித்தேன்.
ஒருகட்டத்தில் எங்கள் காதலை தெரிந்துகொண்டு, என் அண்ணன் வந்து மிரட்டினான். அப்போது எனக்கு 20 வயது ஆகிவிட்டதால், ‘நீ ரவுடி என்றால், அதே தாய்க்கு பிறந்த நானும் ரவுடிதான். முடிந்தால் தடுத்துப்பார்’ என்று கூறி அவரை திருமணம் செய்தேன். ஆனாலும் என் கணவருக்கு உயிர் பயம் இருந்ததால், அவரது உறவினர் ஒருவர் வசிக்கும் வட இந்திய நகரம் ஒன்றிற்கு சென்றுவிட்டோம்..’’ என்றாள்.
அங்கு அவர்களுக்கு மகன் பிறந்திருக்கிறான்.

‘‘என் கணவர் தினசரி ஏதாவது வேலை பார்ப்பது, குடிப்பது என்று பொழுதுபோக்கினார். அதனால் அக்கம்பக்கத்தினர் எங்களை ஒரு மனுஷ ஜென்மமாகவே மதிக்கவில்லை. எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். திருந்த வாய்ப்பில்லை. அதனால் அவரிடம் இருந்து பிரிந்து, 20 வருடங்களுக்கு முன்பு குழந்தையோடு தோழி ஒருத்தி வசிக்கும் நகரத்துக்கு சென்றேன். அங்கு என் தோழியோடு சேர்ந்து முற்றிலும் பெண்களைக்கொண்ட தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினேன். இப்போது எனக்கு பணம், புகழ் எல்லாம் இருக்கிறது. ஆனால் மகிழ்ச்சி மட்டும் இல்லை..’’ என்று விரக்தியாக சொன்னாள்.
நந்தினி எதை நிம்மதி என்று கருதுகிறாள் என்பதை தெரிந்துகொள்ளவே அவளிடம் நிறைய பேசவேண்டியதிருந்தது.
‘இப்போது உனக்கும், உன் கணவருக்குமான தொடர்பு?’
‘‘எதுவுமில்லை. அவரை விவாகரத்து செய்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன’’
‘உனது பெற்றோருடனான தொடர்பு?’

‘‘எனது அண்ணன் இரண்டு முறை தேடிவந்து என்னை அழைத்தான். நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்’
‘உன் மகன் எப்படி இருக்கிறான்?’ என்ற கேள்வியை அவளிடம் கேட்டதும், கண்கலங்கினாள்.
‘‘அவன்தான் உலகம் என்று அவனையே சார்ந்திருந்தேன். இப்போது அவனுக்கு 25 வயது. வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினேன். படித்தான். அங்கேயே ஒரு பெண்ணை காதலித்தான். ‘இங்கே வா’. வேறு பெண் பார்த்து திருமணம் செய்துவைக்கிறேன்’ என்றேன். ‘காதல் விஷயத்தில் நானும் உன்னை மாதிரிதான். எங்கள் காதலை ஏற்றுக்கொண்டால் நாட்டுக்கு வருகிறேன். இல்லாவிட்டால் இங்கேயே அவளோடு வாழ்ந்துவிடுகிறேன்’ என்றான். என் தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. பெரிய பங்களா, இரண்டு மூன்று கார்கள், எத்தனையோ பணியாளர்கள், எவ்வளவோ பணம்..! அனைத்தும் இருந்தும் எனக்கு நிம்மதியில்லை. என்னிடம் இருக்கும் அனைத்தும் யாருக்காக என்ற கேள்வி எனக்குள் எழும்போது தனிமை என்னை பலவாறு சிந்திக்கவைக்கிறது. வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது. இந்த உலகத்தில் வாழும் கோடான கோடி சராசரி மக்களைபோல் நானும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்..’’ என்றாள்.
‘அனேகமாக ஒவ்வொரு பெண்ணும் தன்னை உணர்ந்து, தன் உடலை உணர்ந்து (மனம் சார்ந்து, உடல் சார்ந்து) மகிழ்ச்சியாக வாழத்தலைப்படுவது கிட்டத்தட்ட 30 வயதுகளில்தான். அதற்கு முந்தையது அனேகமாக அவசர வாழ்க்கையாகத்தான் அமைந்துவிடுகிறது. அதற்குள் தாய்மையும் அடைந்துவிடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. குழந்தையை கையில் எடுத்துவைத்துக்கொண்டு நினைத்துப் பார்க்கும்போது, ‘வாழ்க்கையில் அதுமட்டும்தான் நடந்திருக்கிறது. அதற்கு மேல் எதையும் அனுபவிக்கவில்லை’ என்ற ஏக்கமே பெரும்பாலான பெண்களிடத்தில் ஏற்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு ஏக்கம் நந்தினியிடமும் இருந்துகொண்டிருக்கிறது. இளமையில் காதல், பெற்றோர் எதிர்ப்பு, அவசர திருமணம், உடனே குழந்தை, பிரச்சினைக்குரிய கணவன், விவாகரத்து இப்படியாக அவள் இளமையே போராட்டத்தில் கழிந்திருக்கிறது. மீதமுள்ள நாட்களையாவது மனதுக்கு பிடித்த துணையோடு வாழ்ந்து கழிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். அதை பலவிதங்களில் வெளிப்படுத்தினாள்.

‘உனக்கு பிடித்தவராக எந்த ஆணாவது இருக்கிறாரா?’ என்று கேட்டேன்.
‘என் கடைக்கண் பார்வைக்காக பல ஆண்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் யாரும் என்னை நெருங்கிவிடக்கூடாது என்பதற்காக நான் நெருப்பு மாதிரி நடந்துகொள்கிறேன்..’ என்றாள்.
‘தப்பில்லை! அது சரிதான்! ஆனால் வாழ்க்கையில் சில உண்மைகளை நான் உனக்கு விளக்க விரும்புகிறேன். உறவுகள் பிரிவதும், சேருவதும் வாழ்வின் இயல்பு. பெற்றோர், உடன்பிறந்தோர் போன்ற உறவுகள் நம்மால் உருவாக்க முடியாதவை. இணங்கிவரும் அவர்களோடு பேசு. நெருக்கமாகு. அதன் மூலம் உன்னை தனிமை வாட்டாது. தனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்ற உணர்வு ஏற்படும். முதலில் உன் விருப்பத்திற்கு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாய்.
இனி அவர்கள் விருப்பத்திற்கு, உனக்கு பிடித்ததுபோல் ஒருவரை தேர்ந்தெடுக்க சொல். அவை அனைத்தும் நல்லபடியாக அமைந்த பின்பு, உன் மகனிடம் அதை பக்குவமாக சொல்லிக்கொள்ளலாம். உன் மகனுக்கு அவன் விருப்பத்திற்கு வாழ உரிமை இருக்கிறது. அதே உரிமை அவனைவிட அதிகமாக உனக்கும் இருக்கிறது’ என்றேன்.
தெளிவடைந்தாள்.
பெண்கள் இளம் வயதில் தவறவிட்ட வாழ்க்கையை, நடுத்தர வயதில் நாடி நல்லவழியில் பெறலாம்!