Home சூடான செய்திகள் ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை – நயன்தாரா ‘தெளிவு’

ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை – நயன்தாரா ‘தெளிவு’

28

இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது, என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது, சினிமாவில் புதிய உயரத்துக்குப் போவேன், என்று பேட்டி கொடுத்துள்ளார் நயன்தாரா.

முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் என்றாலே ஒளிந்து கொள்ளும் நயன்தாரா, இப்போது கூப்பிட்டுப் பேட்டி கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

அப்படி அவர் கொடுத்த பேட்டியொன்றில், “சினிமாவுக்கு வந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் நான் இவ்வளவு சம்பாதித்திருக்கவோ, அதில் பல நல்ல காரியங்கள் செய்யவோ முடியாமல் போயிருக்கும்.

இப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாய் உள்ளது. நானும் தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம்.

நான் கற்ற பாடங்கள் என்னை மேம்பட்ட வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன.

முன்பெல்லாம் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட ஆண்களை சார்ந்தே இருந்தனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வீட்டில் உள்ள ஆண்களையே நம்பி வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. சொந்தமாக முடிவெடுக்க முடிகிறது. அந்த மாறுதல்களை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன்.

இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்,” என்றார்.