Home சூடான செய்திகள் அடுத்து, பாண்டவர்களின் நாயகி திரவுபதியாகிறார் நயனதாரா!

அடுத்து, பாண்டவர்களின் நாயகி திரவுபதியாகிறார் நயனதாரா!

29

ராமனின் மனைவி சீதையாக நடித்து கலக்கிய நயனதாரா அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயனதாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே இந்த எதிர்ப்புக்கு காரணம்.

இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்டிஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயனதாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத்தான் செம வரவேற்பு.

இதனால் புளகாங்கிதமடைந்து போன பாலகிருஷ்ணாவை மறுபடியும் நயனதாராவை வைத்து இன்னொரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த முறை நயனதாராவை திரவுபதியாக்கப் போகிறாராம் பாலு. பல வருடங்களுக்கு முன்பு திரவுபதி கதையை படமாக்க முடிவு செய்திருந்தார் இவர். அந்த வேடத்தில் மறைந்த செளந்தர்யாவை நடிக்க முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படத்தை கைவிட்டார் பாலகிருஷ்ணா.

தற்போது நயனதாராவின் அபாரமான நடிப்பால் அசந்து போய் விட்ட பாலகிருஷ்ணா, அவரையே திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக நயனதாராவிடம் பேசியுள்ளாராம். அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது.

படத்திற்கு நர்த்தன சாலா என்று பெயரிட்டுள்ளார் பாலகிருஷ்ணா. நயனதாரா தலையை ஆட்டியவுடன், படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா.

படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு என்ன கேரக்டர் என்று தெரியவில்லை. ஒரு வேளை திரவுபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ணராக நடிப்பாரா அல்லது தர்மன் வேடத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.