Home ஆண்கள் விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும் வெல்லப்பாகு

விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும் வெல்லப்பாகு

102

நம் அன்றாடச் சமையலில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது சர்க்கரை. பல நூற்றாண்டுகளாக இதைப் பயன்படுத்தி வருகிறோம். வெறும் இனிப்புச் சுவைக்காகத்தான் இதைச் சேர்க்கிறோம். என்றாலும், இனிப்பிலும் சத்துகளும் மருத்துவக் குணங்களும் உள்ளன. வெள்ளைச் சர்க்கரையில் அல்ல.

நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், அச்சுவெல்லம், கருப்பட்டி போன்ற நம் பாரம்பர்ய இனிப்புச் சுவையூட்டிகளில்! இவற்றையெல்லாம் ஓர் ஓரமாக வைத்துவிட்டு, பளிச்சென்று மின்னுகிற வெள்ளைச் சர்க்கரையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டோம். விளைவு.

`இதில் இருந்து நமக்கு நன்மைகள் கிடைப்பதில்லை. இது உடல்நலனுக்குத் தீங்கைத்தான் ஏற்படுத்தும்’என்று மருத்துவர்கள் திரும்பத் திரும்ப எச்சரிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை. ஆனால், வெல்லத் தயாரிப்புக்கு மூலக் கலவையான வெல்லப்பாகு பல நன்மைகளை நமக்குத் தருவது.

வெல்லப்பாகு

வெள்ளைச் சர்க்கரை எப்படித் தயாரிக்கப்படுகிறது என முதலில் பார்ப்போம். கரும்பிலிருந்து சாறு எடுக்கப்படும். அந்தச் சாற்றை அகலமான கொப்பரையில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். கொப்பரையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கரும்புப் பால் நன்கு கொதித்து வற்றத் தொடங்கும்.

இந்த நிலையைத்தான், `வெல்லப்பாகு’ (Molasses) என்கிறோம். பின்னர் இது நன்றாகக் கெட்டியாக வேண்டும், வெண்மை நிறம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சல்ஃபர் உள்ளிட்ட சில வேதிப்பொருள்களைச் சேர்ப்பார்கள். கரும்பில் இரும்புச்சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது.

ஆனால், சர்க்கரைத் தயாரிப்பின்போது, இப்படி வேதிப்பொருள்களைச் சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படும். வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு இல்லை.

தொடக்க காலத்தில் விவசாயிகள் கரும்பைச் சாகுபடி செய்து இயற்கையான முறையில் வெல்லத்தைத் தயாரித்தார்கள். அது அழுக்கு படிந்த (அடர் பிரவுன்) நிறத்தில் இருந்தது.

நாகரிகம் மாற்றம் பெறத் தொடங்கிய காலத்தில், மக்களிடையே இந்த நிற கருப்பட்டி, வெல்லத்துக்கு சரியான வரவேற்பு கிடைக்காமல் போனது. இதனால், பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக வெல்லத் தயாரிப்பிலும் பல வேதிபொருட்களைச் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

மேலும், தரமான வெல்லத்தைவிட, வேதிப்பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட வெல்லம் குறைந்த விலைக்குக் கிடைத்தது, கிடைக்கிறது. இதனால், தரமற்ற வேதிப்பொருள்களும் வெல்லத் தயாரிப்பில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

“வெல்லத்தின் முழுமையான பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், வெல்லப்பாகு நிலைதான் மிகச் சிறந்தது. செயற்கையான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படாத நிலையில் இருக்கும் வெல்லப்பாகில் கூடுதல் மருத்துவப் பயன்கள் கிடைக்கும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். இதில் என்னென்ன சத்துகள் உள்ளன, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விளக்குகிறார்.

கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இருப்புச்சத்து, பாஸ்பரஸ், குரோமியம், கோபால்ட் மற்றும் சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் உள்ளன.

மேலும், வைட்டமின் பி 3, நியாசின் (Niacin), வைட்டமின் பி 6, தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகியவையும் உள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும், குறைந்தளவு கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளன.

ரத்தச்சோகை நீங்கும்

கரும்பில் உள்ள தாமிரம், இரும்புச்சத்து ஆகியவை உடலில் ரத்த விருத்தியை அதிகரிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தச்சோகை நீங்கும். இது, ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது.

வளர்சிதை மாற்றம் சீராகும்

இதில் உள்ள தாமிரம் நம் உடலில் அதிக அளவில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதால், உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சீராக கிடைக்கும். இது, வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

செரிமானம் சீராகும்

உமிழ்நீரைப் பெருக்கி, சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவும். இது, உணவுக்குழாய், வயிறு என உடல் உறுப்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது.

மலச்சிக்கல் போக்கும்

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியவை. இதிலுள்ள சோடியம், பாஸ்பேட் போன்றவை மலச்சிக்கல் நீங்க உதவும்.

வெல்லப்பாகு – புற்றுநோய் தடுக்கும்

இதில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச்சர்க்கரையில் உள்ளதைவிட அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய்ச் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. மேலும், இதயம் தொடர்பான நோய்கள் வருவதையும் தடுக்கும்.

எலும்பை வலுவாக்கும்

இதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் எலும்புகளை வலுவாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.

உடல் சோர்வு நீக்கும்

உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், தலைவலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றைச் சரியாக்கும். உடல் சோர்வை நீக்கும்.

விந்தணுக்களை அதிகரிக்கும்

இதில் உள்ள மாங்கனீஸ் ஆண்களின் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கும். நரம்பு மண்டலங்கள் சீராகச் செயல்பட உதவும். விந்தணுக்களின் எண்ணிக்கைய அதிகரித்து, ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கும்.

பெண்களின் நலன் காக்கும்

இதில் கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைவாக உள்ளன. இது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பால் ஏற்படும் ரத்தசோகை, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலி போன்றவற்றுக்குச் சிறந்த தீர்வு தரும். கர்ப்பிணிகளின் உடல் எடையை அதிகரிக்காமல், அதேநேரத்தில் உடலுக்கு வலு சேர்க்க உதவும்.