Home ஜல்சா அவர்கள்தான் என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள்.

அவர்கள்தான் என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள்.

36

mathaviஅவர் வெளிநாட்டில் வேலைபார்த்து நிறைய சம்பாதிப்பவர். சொந்த ஊருக்கு வந்திருந்தார். நடுத்தர வயது.

ஊரின் அருகில் உள்ள நகரத்திற்கு தனியாக சென்றார். அங்குள்ள சில சேவை அமைப்புகளை தேடிச்சென்று பண உதவி செய்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் ஓய்வெடுத்தார். இரவில் அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அதிகாலையில் அருகில் உள்ள இன்னொரு ஊருக்கு சென்று நண்பரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். கையில் நிறைய பணம் இருந்தது.

அவருக்கு குடிப்பழக்கம் உண்டு. ஓரளவு குடித்ததும், அப்படியே சிறிது தூரம் காலாற நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. பணப்பையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு நடந்தார். அப்போது இரவு பத்து மணி.

பஸ் நிலையம் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஒன்றிரண்டு பஸ்கள் மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது. அங்கிருந்த கடையின் அருகில் அவர் பார்வையில் படும்படி ஒரு டீன்ஏஜ் பெண் நின்றிருந்தாள். பயம், பதற்றம் அவள் முகத்தில் தெரிந்தது. நகத்தை கடித்து துப்பிக்கொண்டிருந்தாள். அழுவதற்கு தயாராக கண்களையும் கசக்கிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் ஓரமாக நின்று அவர், அவளை பார்த்தார். அவள் தனிமையில் நின்று தவிப்பதுபோலிருந்தது. ‘ஏதோ ஆபத்தில் சிக்கியிருக்கிறாள்’ என்று நினைத்த அவர், அவள் அருகில் சென்றார்.

‘இங்கே எதுக்காக நிற்கிறே?’ என்று அவர் கேட்டதும், அவள் கண்ணீர்விட்டாள். ‘நான் ஏழை குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவி. காதலனை நம்பி வந்தேன். அவன் என்னை ஒரு செக்ஸ் வியாபார கும்பலிடம் விற்றுவிட்டான். அவர்கள் என்னை கொடுமைப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்தார்கள். என்னை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சென்றபோது எப்படியோ அவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பிவிட்டேன். என்னிடம் செல்போன் மட்டும்தான் இருக்கிறது. அதிலும் பேலன்ஸ் இல்லை. இன்கம்மிங் கால் மட்டுமே பேச முடியும்.,’ என்று அழுகையோடு சொன்னாள்.

அதைகேட்டு அவரும் கண்கலங்கி, ‘நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். அவள் தனது செல்போன் நம்பரை அவரிடம் கூறிவிட்டு, ‘எனக்கு பணம் கொடுங்கள். இங்கிருந்து நான் எப்படியாவது தப்பி, சொந்த ஊருக்கு போய் விடுவேன். மீண்டும் நான் கல்லூரிக்கு சென்று படிக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் கொடுத்த பணத்தை நிச்சயமாக திருப்பித் தந்து விடுவேன்’ என்றாள்.

லேசான போதை அவரிடம் கருணையை ரொம்பவே சுரக்கவைத்தது. ‘செக்ஸ் வியாபார கும்பலிடமிருந்து ஒரு பெண்ணை மீட்பது பெரிய காரியம்’ என்று நினைத்த அவர், பெருந்தொகை ஒன்றை அவளுக்கு கொடுத்தார்.

வாங்கிக்கொண்ட அவளிடம், எங்கே செல்ல போகிறாய்? எப்படி செல்ல போகிறாய்? என்று அவர் கேட்டுக்கொண்டிருக்க, சற்று தூரத்தில் இரண்டு முரடர்கள் ஓடி வருவது தெரிந்தது. ‘அதோ அவர்கள்தான் என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள். என்னை பார்த்து விட்டார்கள். நான் எப்படியாவது தப்பியாக வேண்டும்’ என்ற அவள், அவரது பதிலுக்குகூட காத்திராமல் அங்கிருந்து பணத்தோடு ஓடினாள். அவள் ஓடுவதை பார்த்து அந்த முரடர்கள் இருவரும் பின்தொடர்ந்தனர். ஒருசில நிமிடங்களில் இது நடந்து முடிந்து விட்டது.

கவலையோடு அவர் ஓட்டல் அறைக்கு திரும்பினார். போதை முழுமையாக இறங்கியது போலிருந்தது. அந்த முரடர்களிடம் அவள் சிக்கியிருப்பாளோ..! அவள் என்ன ஆனாளோ..! என்று கவலை கொண்டார். அவளது போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ என்ற தகவலையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது.

பயந்து போன அவர் நண்பர்கள், தெரிந்த போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் போன் போட்டு நடந்த விஷயத்தை எடுத்துக்கூறி, ‘அந்த பெண்ணை எப்படியாவது கண்டுபிடித்து காப்பாற்றும்படி’ மன்றாடினார். தெரிந்தவர்களை எல்லாம் தூங்க விடாமல் இரவு முழுக்க அவளை தேடவைத்தார்.

மறுநாள் காலையில் அவரை ஓட்டலுக்கு வந்து சந்தித்த போலீஸ் அதிகாரி, ‘நல்லா ஏமாந்திட்டீங்க சார்..! அவள் பாலியல் கும்பலிடம் இருந்து தப்பி வந்தவளில்லை. துரத்திட்டு வந்தது அவளுடைய நண்பர்கள்தான். மூன்று பேருக்கும் போதை பழக்கம் இருக்கிறது. அதற்கான பணத் தேவைக்காக இப்படி உங்களை நம்ப வைத்து ஒரு நாடகத்தை நடத்தியிருக்காங்க. அவர்களை கண்டுபிடிச்சி, ஸ்டேஷனில் உட்காரவைத்திருக்கிறோம்’ என்றார்.

இப்படி எல்லாம்கூட ஏமாத்துறாங்கன்னு சொல்றோம் அவ்வளவுதானுங்க..!