Home பாலியல் பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைய காரணங்கள்

பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைய காரணங்கள்

42

குறும்புத்தனம் மாறாத 9 வயதுக் குழந்தை பெரிய மனுஷியாகி குத்த வைக்கிறாள். அவளுக்கு இதையெல்லாம் எப்படிப் புரிய வைப்பது என்று திணறிப்போகின்றனர் அவளது பெற்றோர். வேலைக்குச் செல்லும் பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் 30 வயதுக்கும் மேல்தான் திருமணம் குறித்தே யோசிக்கின்றனர். பருவமெய்தும் வயது குறைவது போல் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நின்று போகும் வயதும் குறைந்து வருகிறது. இப்படியான கால மாற்றம் மருத்துவ ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெண் குழந்தைகள் சராசரியாக 14 வயதில்தான் பருவமெய்தினார்கள். இப்போதோ 9 வயதில் கூட பருவமெய்தி விடுகிறார்கள். மிகக் குறைந்த வயதில் பெண் குழந்தைகள் பருவமெய்தினால் தலைப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி எனும் சுரப்பி, சிறுநீரகத்துக்கு அருகே இருக்கும் அட்ரினல் எனும் சுரப்பி மற்றும் சினை முட்டை உருவாகும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் கட்டி இருக்கிறதா? என்று சோதிப்போம்.

முன்பு போல் தற்போது குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, உட்கார்ந்தபடியேதான் இருக்கிறார்கள். இன்றைய உணவுப் பழக்கமும் இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது. அவர்கள் உண்ணும் உணவில் தேவையான சத்துகள் இருப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்புச்சத்து, உப்பு, சர்க்கரை ஆகியவையே அதிகளவில் இருக்கின்றன. இதனால் ஊளைச்சதையாக உடல் வளர்ந்து விடுகிறது. குறிப்பிட்ட எடையை எட்டியதும் பருவமெய்துவதென உடலுக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

குறைந்த வயதில் பருவம் எய்திய பெண் குழந்தைகளுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி என்கிற pco இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். சினைப்பையில் நீர்க்கட்டி ஏற்படும்போது மாதவிடாய் பிரச்சனை, கரு உண்டாவதில் தாமதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படலாம்.

இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மாட்டின் பால்தான் சத்தைக் கொடுக்கும். ஹார்மோன் கலப்புக்கு ஆளான பாலைக் குடிக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொண்டு இறைச்சியை அளவாக உட்கொண்டாலே இது போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்.

குறைந்த வயதில் பருவமெய்துவதற்கு உளவியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பிக்கு மேலே இருக்கும் hypothalamus தான் உணர்வையும், உடலையும் இணைக்கிறது. அதில் சுரக்கும் ஹார்மோன்தான் உணர்வை பிரதிபலிக்கிறது.

பெரியவர்களாகி புரிய வேண்டியதெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே புரிந்து கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியடைகின்றனர். வளர்ச்சி இல்லாத முதிர்ச்சி அது. இதன் காரணமாக உணர்வுரீதியில் உடலும் தூண்டப்படுகிறது. அவர்கள் சிறு வயதிலேயே பருவமெய்துகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.