Home பாலியல் பெண்களின் மாதவிலக்கு முழு தகவல்

பெண்களின் மாதவிலக்கு முழு தகவல்

53

பெண்கள் தங்கள் உடலை மிகவும் அசிங்கமாக நினைப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம், ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிலக்கு.

இனப்பெருக்கத்துக்கான காலகட்டத்தில் ஒரு பெண் இருக்கும்போது, ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக உடலை விட்டு ரத்தம் வெளியேறும்.

மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இப்படி ஏற்படுவதற்கு மாதவிலக்கு என்று பெயர். உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம்தான் மாதவிலக்கு.

இதன் அடிப்படையில்தான், கருத்தரிப்பதற்கு உடல் தயாராகிறது.

மாதவிலக்குச் சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்படலாம். ரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாள்களுக்கு ஒருமுறை இந்த ரத்தப்போக்கு (மாதவிலக்கு) ஏற்படும்.

இதுவே சரியான மாதவிலக்குச் சுற்று என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், சில பெண்களுக்கு 20 நாள்களுக்கு ஒருமுறைகூட மாதவிலக்கு ஏற்படும்.

சில பெண்களுக்கோ, 45 நாள்களுக்கு ஒருமுறைதான் இது நிகழும்.

மாதவிலக்குச் சுற்றின்போது, சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும்.

மாதச் சுற்றின் முதல் பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக்கும். இதனால், கருப்பையின் உள்பக்கச் சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களால் ஆன மிருதுவான படலம் உருவாகிறது.

ஒருவேளை, பெண் கருத்தரித்து குழந்தை உருவானால், அது சுகமாக இருப்பதற்கான ஏற்பாடுதான் இந்த மிருதுவான படலம். மிருதுவான படலம் தயார் ஆனதும், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும்.

இந்த முட்டை ஃபெலோப்பியன் குழாய் வழியாகக் கருப்பையை அடையும்.

அப்போது, பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அந்தச் சமயத்தில் ஆணும் பெண்ணும் உடலுறவுகொண்டால், முட்டையோடு ஆணின் உயிரணு (விந்து) சேர வாய்ப்பு உண்டு.

இதுதான் கருத்தரித்தல். கர்ப்பக் காலத்தின் தொடக்கமும் அதுதான். மாதச் சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிலக்கு தொடங்கும்வரை, அவள் உடலில் புரோஜெஸ்டீரோன் ஹார்மோன் சுரக்கிறது.

இந்த ஹார்மோனும் கருத்தரிதலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உள்சுவரை உருவாக்குகிறது. பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது என்பதால் கருப்பையின் சுவர்ப் படலத்துக்குத் தேவை இருக்காது.

சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன்விளைவாக, சுவர்ப் படலமானது உடைந்து சிதைந்து, மாதவிலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேறும்.

இதோடு, முட்டையும் வெளியேறும். இது, புதிய மாதாந்திரச் சுற்றின் தொடக்கமாகும். மாதவிலக்கு நின்றவுடன், சினைப்பைகள் சுவர்ப் படலத்தை உருவாக்கும்.

பெண்களுக்கு வயதாகி, மாதவிலக்கு முற்றிலுமாக நிற்பதற்கு முன் ரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். ரத்தப்போக்கின் அளவும், இளமையாக இருந்தபோது ஏற்பட்டதைவிட அதிகமாக இருக்கலாம்.

மாதவிலக்கு நிற்கப்போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிலக்கு சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம்.

இதை, அசுத்த ரத்தமாக நினைத்து பெண்களே தங்களைத் தாழ்த்திக்கொள்வார்கள். இது, உடலின் இயல்பான ஒரு செயல்என்று ஏற்றுக்கொள்வதே பெண்களுக்கு உரிய கடமையாகும்.