Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

28

captureநீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? சரியாக சாப்பிடுகிறீர்களா? நீங்கள் அதிகப்படியான வேலைப்பளுவினால் எப்போதும் பிஸியாக இருக்கலாம். இருப்பினும் தாய்மை என்று வரும் போது, சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். இப்போது நீங்கள் சரியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை முறையாக சாப்பி வேண்டும்.
ஒருவேளை நீங்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், முதலில் பாதிக்கப்படப் போவது வயிற்றில் வளரும் குழந்தை தான். எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டாவது கர்ப்பிணிகள் நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
சரி, இப்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து காண்போம்.
நரம்பு மண்டல கோளாறுகள் கர்ப்பிணிகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைக்கு பல்வேறு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படும். இன்னும் சில சமயங்களில், ஊட்டச்சத்து குறைபாடு குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தை இறப்பு கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்தால், அதனால் கருவில் வளரும் சிசு இறக்கும் வாய்ப்புள்ளது. இது மிகவும் அரிது தான். இருப்பினும், இம்மாதிரியான நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறைவான எடையில் குழந்தை கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் போதிய ஊட்டச்சத்துக்களுடன் இல்லாவிட்டால், பிறக்கும் குழந்தை மிகவும் எடை குறைவில் பிறக்கும். குழந்தை பிறக்கும் போது சரியான உடல் எடையில் இல்லாமல், ஒரு வருடம் வரையிலும் அப்படியே இருந்தால், அக்குழந்தை விரைவில் இறக்கும் வாய்ப்புள்ளது.

பற்றாக்குறையான வளர்ச்சி கர்ப்பிணிகளின் உடலில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் குறைவாக இருந்தால், அது குழந்தையின் வளர்ச்சியையும் தாமதமாக்கும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய சத்துக்கள் இல்லாவிட்டால், குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்?

குறைப்பிரசவம் பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், போதிய சத்துக்கள் மற்றும் கலோரிகள் கிடைக்காமல், குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் 2200 கலோரிகளையும், 2 மற்றும் 3 ஆவது மூன்று மாத காலத்தில் 2300-2500 கலோரிகளையும் உட்கொள்ள வேண்டும்.

மூன்று வேளை உணவு அவசியம் தினமும் குறைந்தது மூன்று வேளையாவது தவறாமல் சாப்பிடுங்கள். இதனால் குழந்தைக்கு சீரான அளவில் சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.