Home பெண்கள் தாய்மை நலம் செயற்கை முறை (IVF ) கருத்தரிப்பும் அது சம்பந்தப்பட்ட அபாயங்களும்

செயற்கை முறை (IVF ) கருத்தரிப்பும் அது சம்பந்தப்பட்ட அபாயங்களும்

38

ஓர் ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கரு முட்டையையும் ஒன்றாகச் சேர்த்து ஆய்வகத்தில் கருத்தரிக்கச் செய்யும் முறையே IVF அல்லது செயற்கை முறைக் கருத்தரிப்பு எனப்படும்பின்னர் கருவுற்ற முட்டைகள் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படுகின்றன, பிறகு அவை கருப்பைச் சுவரில் பதியவும், வெற்றிகரமாக ஒரு கருவாக வளரவும் உதவி செய்யப்படுகிறது.

குழந்தையற்ற தம்பதியினர் பலருக்கு பெற்றோராகும் வாய்ப்பை அளிக்கும் இம்முறை ஒரு வரப்பிரசாதம் என்று கருதப்படுகிறது.

IVF முறை வெற்றிகரமாக நிறைவடைய பல முயற்சிகள் தேவைப்படும், பல முயற்சிகள் தோல்வியடையும். கர்ப்பமடையக் காத்திருப்பதும், முழு கால அளவிற்கும் கருவை வயிற்றில் சுமப்பது என்பதும் தம்பதிகள் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிய சிரமமாக இருக்கலாம்.

IVF தொடர்பான பிரச்சனைகள்

IVF சிகிச்சை பெறும் பெண்கள், வலி, பக்க விளைவுகள், மன அதிர்ச்சி போன்ற சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பக்கவிளைவுகள், வலி, மன அழுத்தம் ஆகியவை மட்டுமின்றி, IVF சிகிச்சை பெற எதிர்பார்க்கும் ஒரு பெண்ணுக்கு வேறு சில அபாயங்களும் உள்ளன.

 IVF சிகிச்சையின்போதும், கர்ப்பத்தின்போதும் மகப்பேறு சமயத்திலும் நேரக்கூடிய சில அபாயங்கள் உள்ளன, அவை:

IVF சிகிச்சை பெரும் தம்பதியரில் பெரும்பாலானோர், மிக அதிக மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் எதிர்கொள்கின்றனர். சிகிச்சையின்போது அல்லது சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை பலனின்றிப் போகும் சமயங்களில் அவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவதுண்டு.

IVF சிகிச்சை பெறும் ஒரு பெண்ணுக்கு, பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:

பல கரு வளர்ச்சி: IVF சிகிச்சை பெறும் பெண்களுக்கு இரட்டைக் கரு அல்லது பல கருக்கள் உருவாவது பொதுவான ஒரு நிகழ்வு. சிகிச்சையின்போது ஒன்றுக்கும் அதிகமான கருவுற்ற முட்டைகளை கருப்பையில் செலுத்துவதே இதற்குக் காரணம். ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் வளரத் தொடங்கினால், தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலம் சார்ந்த ஆபத்துகளும் அதிகமாக இருக்கலாம்.
சினைப்பை மிகைத் தூண்டல் நோய்த்தொகுப்பு (ஓவரியன் ஹைப்பர்ஸ்டிமுலேஷன் சின்ட்ரோம் – OHSS): IVF சிகிச்சையால் சினைப்பை அளவுக்கு மீறித் தூண்டப்படலாம், சினைப்பைகள் பெரிதாகி, வலி ஏற்படலாம், சில சமயம் வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக்கொள்வதும் உண்டு.
கீழ் இடுப்புப் பகுதியில் நோய்த்தொற்று: கருவை இடமாற்றும்போது அல்லது முட்டைகளைச் சேகரித்து எடுக்கும்போது கீழ் இடுப்புப் பகுதியில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பத்தின்போது- IVF கர்ப்பமும் அபாயமும்:

IVF சிகிச்சை வெற்றிபெற்றுவிட்டால் அதன்பின் ஆபத்து எதுவும் இல்லை என்று கூற முடியாது. IVF சிகிச்சை முறையில் வெற்றிகரமாக கருத்தரித்த பெண்களில் பெரும்பாலானோர் கர்ப்பத்தின்போது பின்வரும் சிக்கல்களில் சிலவற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது:

கருச்சிதைவு: இயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்களுக்கு இருக்கும் அதே அளவு கருச்சிதைவுக்கான ஆபத்து, செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்களுக்கும் உள்ளது. ஆனால், IVF சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்ணின் வயது அதிகமாக இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் ஆபத்தும் அதிகமாக இருக்கலாம். IVF முறையில், கர்ப்பத்தின் ஆரம்ப காலத்திலும் கருச்சிதைவு ஏற்படலாம், பிற்பகுதியிலும் ஏற்படலாம், இரண்டுமே சாத்தியம்.
கருக்குழாய் கருவளர்ச்சி: சில சமயம் IVF முறையில் கருத்தரித்த சிலருக்கு ஃபெல்லோப்பியன் குழாயிலோ, கருப்பைக்கு வெளியிலோ கரு பதிந்து வளரத் தொடங்கலாம். இதையே கருக்குழாய் கருவளர்ச்சி என்கிறோம். இந்தக் கருவைக் கலைப்பதே ஒரே தீர்வு. கருப்பைக்கு வெளியே ஒரு கருவால் வளர முடியாது, ஆகவே இதுபோன்ற கர்ப்பம் நிச்சயமாக நீடிக்காது.
குறைப்பிரசவம்: IVF சிகிச்சை பெறும் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டட குழந்தைகள் உருவாவது பொதுவான ஒன்று. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவானால், குறைப்பிரசவம் நடக்க வாய்ப்புள்ளது, குழந்தைகளின் எடையும் குறைவாக இருக்கலாம்.
கரு எண்ணிக்கையைக் குறைத்தல்: சில அறிய சூழ்நிலைகளில், தாய் அல்லது வளரும் கருவின் ஆரோக்கியத்துக்கு அபாயம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கருதினால், அவர்கள் கருக்களில் ஒன்றை அகற்ற முடிவெடுக்கலாம்.
கர்ப்பகால நீரிழிவுநோய்: இரட்டைக் கருவைச் சுமக்கும் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.கர்ப்பகால நீரிழிவுநோய் தாய் அல்லது வளரும் கருவிற்கு நல்லதல்ல.
உயர் இரத்த அழுத்தமும் பேறுகால வலிப்புக்கு முந்தைய நிலையும் (ப்ரீஎக்ளாம்ப்சியா):ஒன்றுக்கு மேற்பட்ட கருக்களைச் சுமக்கும் பெண்களுக்கு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பேறுகால வலிப்புக்கு முந்தைய நிலை (ப்ரீஎக்ளாம்ப்சியா) ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
பிரசவம் சம்பந்தப்பட்ட அபாயங்களும் அதன் பிறகான அபாயங்களும்:

இரட்டை கர்ப்பமாக இருந்தால், பிரசவம் மற்றும் குழந்தைப்பேறு சம்பந்தப்பட்ட சில அபாயங்கள் இருக்கலாம்.

சிசேரியன் பிரசவம்: வழக்கமாக, இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் அறுவை சிகிச்சை முறையில் (C-செக்ஷன்) பிரசவம் பார்க்கவே பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் சிக்கல்கள் உருவாகாமல் தடுப்பதற்காக, குழந்தை பிறக்க வேண்டிய தேதிக்கு முன்பே பிரசவம் பார்த்துவிடத் தேர்வு செய்வார்கள்.
இரத்தக்கசிவு: பல பெண்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கருக்களைச் சுமப்பதால் இரத்தக்கசிவுப் பிரச்சனை இருக்கலாம்.இரும்புச் சத்து குறைந்து, இரத்தசோகை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பிறவிக் குறைபாடுகள்: IVF முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் கோளாறுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தக் கருத்தை ஆதரிக்கும் சில கோட்பாடுகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெற்றோர்களின் வயது மற்றும் மரபியல் பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்டது.
IVF சிகிச்சை எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்வதற்கு உங்களுக்கு திடமான மன உறுதியும், உங்கள் துணைவர், குடும்பம் மற்றும் மருத்துவர்களின் ஆதரவும் அவசியம்.

இதிலுள்ள அபாயங்கள் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசவும், அவை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.