Home உறவு-காதல் குடும்பத்தில் கலகம்: பெண்களா காரணம்?

குடும்பத்தில் கலகம்: பெண்களா காரணம்?

37

201609200917554705_family-problem-reason-girls_secvpfமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை அமைதியான குடும்பம். குடும்பம் அமைதியாக இருக்கவும், அமைதியை இழக்கவும் பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள். அதிர்ச்சியாக இருந்தாலும் அது உண்மையே.

மகனுக்கு திருமணமாக வேண்டும் என்று கோவில் கோவிலாக வேண்டிக் கொள்வது பெண்கள்தான். ஆனால் திருமணமான பின்பு, தான் செய்யும் காரியத்தால் மகனுடைய வாழ்க்கை எந்த அளவு பாதிக்கும் என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் குடும்பத்திற்குள் தீவிர அரசியல் செய்வதும் பெண்கள்தான்.

மாமியார், நாத்தனார், மருமகள் நடத்தும் குடும்ப அரசியலுக்கு முடிவே கிடையாது. இது போன்ற விஷயங்கள் மட்டும் எந்தக் குடும்பத்திலும் மாறுவதே இல்லை. கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து தனித்தனி குடும்பங்கள் உருவாகிவிட்ட நிலையிலும் குடும்ப கலகங்கள் தீரவில்லை.

பொதுவாக வீட்டிற்கு புதிதாக ஒரு உறவு வருவதென்பது மகிழ்ச்சியான தருணம். அதுவும் மருமகளாக ஒரு உறவு வரும்போது குடும்பம் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்குச் செல்லும் சந்தோஷமான சமயம். ஆனால் அன்றுமுதல்தான் குடும்ப அரசியல் தலைதூக்க ஆரம்பிப்பது துரதிர்ஷ்டம். தங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதைப்போல மாமியாரும், நாத்தனாரும் உணர்வதுதான் இந்த அரசியலின் பின்னணி.

குடும்ப உறவுகளை அனுசரித்து செல்வதுதான் நல்ல பண்பு, அந்த பண்பை வீட்டிற்கு வரும் மருமகளிடம் மட்டுமே எதிர்பார்ப்பது தவறு. வாழ்ந்து அனுபவம் பெற்ற மாமியாரால் அப்படி அனுசரித்து செல்ல முடியாதபோது, புதிய இடம், புதிய உறவு, புதிய அனுபவத்தில் இறங்கும் சிறியவரான மருமகள் மட்டும் முற்றிலும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கை.

பெண்களின் இதுபோன்ற மனநிலைக்கு பல காரணங்கள் உண்டு. மருமகளால் இனி தன் மரியாதை பறிபோய்விடும், தன்னுடைய அரவணைப்பில் வளர்ந்த மகன் அதையெல்லாம் மறந்து இன்று வேறு ஒருத்தியின் பிடியில் சிக்கிவிட்டானே, இனி என்னை ஒதுக்கிவிடுவானே என்ற கலக்கம் ஒவ்வொரு அம்மாவையும் தொற்றிக் கொள்கிறது. இதேபோல தாய்வீட்டின் ஆதரவில் இருக்கும் நாத்தனார், இனி தனக்கு கிடைத்த ஆதரவு பறிபோகுமோ? என்று பயம் கொள்கிறார்.

இவைதான் குடும்ப கலகத்திற்கு காரணம். அதற்கு ஏற்ப சில சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தால் அவர்கள் நினைத்தது உறுதியாகி விடுகிறது. உடனே மகனையும், மருமகளையும் பிரிக்க சூழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடுகிறது. மகனுடைய பார்வையிலிருந்து மருமகளின் தரத்தை குறைத்துக்காட்ட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சிகளில் கிடைக்கும் வெற்றி, தன் சொந்த மகனின் வாழ்க்கையை சூன்யமாக்கும் என்ற நினைப்பு சிறிதும் இல்லாமல் சில அம்மாக்கள் செயல்படுவார்கள். நாத்தனார்களும் அதற்கு உடந்தையாக துணை போவார்கள். இந்த சூழ்ச்சிகளால் உருவாகும் கலவரங்களை தீர்க்க முடியாமல் ஆண்கள் தவிக்க வேண்டியிருக்கிறது.

மருமகளால் தங்கள் உரிமை பறிபோகாது என்ற தைரியம் மாமியாருக்கு இருந்தால் இது போன்ற சூழ்ச்சிகள் நடைபெறாது. ஆண்கள் அதுபோன்ற அமைதியான சூழல் நிலவ கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சண்டை உருவாகும் வாய்ப்புகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சண்டையென்று வந்துவிட்டால் நேரடியாக அதில் ஆண்கள் தலையிடக்கூடாது. ஏனெனில் ஒருவரை சமாதானப்படுத்தினால், மற்றவருக்கு ஆதரவு தருவதாக எண்ணிக் கொண்டு பிரச்சினையை வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்கள் பெண்கள்.

அம்மாவை சமாதானப்படுத்தினால், திருமணத்திற்கு பின் மனைவி பக்கம் பேசுகிறான் என்று அம்மா சிந்திக்க ஆரம்பித்து விடுவார். மனைவியை சமாதானப்படுத்தினால், ‘ஆயிரம்தான் இருந்தாலும் அம்மாவை குத்தம் சொல்வீங்களா?’ என்று மனைவி கோபித்து கொள்வாள். எனவே மறைமுகமாக, தனித்தனியாக சந்தித்து மற்றவர் பக்கத்து நியாயத்தைச் சொல்லி, இருவருக்கும் இடையே மனக்கசப்பு வளர விடாமல் செய்யும் வேலையை செய்வதே குடும்ப உறவை பாதுகாக்க ஆண்களின் பொறுப்பாகும்.

இதுபற்றி ஆராய்ச்சி செய்யும் உளவியலாளர்கள் தரும் கருத்துக்கள் :

* ஒரு குடும்பத்தில் கலகம் ஏற்படும்போது அந்த பெண்ணின் எதிர்பார்ப்பு, அவளது ஆழ்மனதின் பதிவுகள், அனுபவங்கள் இதையெல்லாம் அடிப்படையாக கொண்டுதான் அந்த கலகத்திற்கு தீர்வுகாண முடியும். குடும்பத்தில் எல்லோரும் முக்கியமானவர்கள்தான். அவரவர் பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து, அவரவர் எல்லைக்குள் நின்றுகொண்டாலே பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

* சமீபமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமாக்கள் கூட குடும்ப உறவுகளை அடிப்படையாக கொண்டதே. அதில் மாமியார்-மருமகள் சூழ்ச்சிகளையும், சதிகளையும் வன்மம் கலந்து சொல்லும் தொடர்களே அதிகம் வெற்றி பெறுகின்றன. ஆனால் பிரச்சினைக்கு சரியான தீர்வுகள் தொடர்களில் சொல்லப்படுவதில்லை. நிஜ வாழ்க்கையில் தீர்வு அவசியம். இல்லாவிட்டால் பிரிவும், தனிமையும்தான் மிஞ்சும்.

* ஒரே குடும்பத்திலிருந்து கொண்டு ஒருவரை மற்றவர் தாழ்த்திப் பேசுவது, பலர் முன் அவமதிப்பது இதையெல்லாம் பெரிய சாதனை என்று நினைத்துக் கொள்பவர்கள் எதை பெறுகின்றனர், எதை இழக்கின்றனர் என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

* அம்மா-மகன் உறவில் விரிசல் இருந்தால், அது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. ஒருவரை ஒருவர் மன்னித்து விரைவாக சீர்செய்துகொள்ளும் வாய்ப்பும் உண்டு. ஆனால் கணவன்- மனைவி உறவில் விரிசல் விழுந்தால் விவாகரத்து, பிரிவு, குழந்தைகள் பரிதவிப்பு என்று தொல்லைகள் நீண்டு கொண்டே போகும். எனவே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைப்பவர்கள் பொறுமையாக இருந்துதான் ஆக வேண்டும். இது ஆண்கள்- பெண்கள் இருவருக்கும் பொருந்தும்!

.. இப்படி உளவியல் நிபுணர்கள் சொல்வதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்!