Home ஆரோக்கியம் காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டாதீர்!

காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டாதீர்!

27

நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் வேலையே காதுகளை பாதுகாப்பது தான். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளி யேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.

ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் ஓட்டை விழுந்து கேட்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்படலாம். காதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல் ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்தித் துணி மூலம் சுத்தப்படுத்தலாம்.

காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தால் குழந்தையின் காதில் பிரச்சினை இருக்கலாம். பள்ளியில் கவனக் குறைவாகவும், மந்தமாகவும் குழந்தைகள் இருந்தால் காதில் நீர் கோர்த்து இருக்கலாம்.

மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ பேச ஆரம்பிப்பதில் தாமதம் காட்டினாலோ உடனே காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். காது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக் கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவி யாகும். தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம். ஜலதோசம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப் பலமாக சிந்துவது கூடாது. இவ்வாறு செய் தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நெருங்கிய ரத்த உறவு களுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதி யர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த உடனேயே மஞ்சள் காமாலையாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும் குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் பரிசோதனை செய்வது அவசியம்.

பெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும் ஸ்பீக்கரில் அலறும் இசையைக் கேட்பதும் காதருகே அறைவதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள். தொடர்ந்து செல்போனில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் பாட்டுக்கேட்பதையும் தவிர்க்கவும். சிலருக்கு எந்த காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம்.
இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சினைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.