Home ஆரோக்கியம் மார்பகப் புற்றுநோயிலிருந்து உங்கள் மகளைக் காத்துக்கொள்ள சில வழிகள்

மார்பகப் புற்றுநோயிலிருந்து உங்கள் மகளைக் காத்துக்கொள்ள சில வழிகள்

28

முகப்பரு, பருக்கள், எண்ணெய்ப் பிசுக்குள்ள முகம், வறண்ட கூந்தல் போன்றவை இளம்பெண்களுக்கு பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. இளம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும், யாருக்கும் வந்ததில்லை என்று கூறுவதற்கில்லை. அது எந்த வயதிலும் வரலாம். ஆகவே, மார்பகப் புற்றுநோயை வரவழைக்கக்கூடிய ஆபத்துக் காரணிகளைப் பற்றியும், வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் உங்கள் மகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியம்.

மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணிகளும் காரணங்களும்
ஆபத்துக் காரணி என்பது, ஒரு நோய் உண்டாவதற்கான சாத்தியக்கூற்றை அதிகரிக்கும் அம்சமாகும். அதற்காக ஆபத்துக் காரணிகள் என்பவை அந்த நோய் ஒருவருக்குக் கண்டிப்பாக வரும் என்று கூறுவதற்கான அடையாளமல்ல. சில ஆபத்துக் காரணிகளைக் குறித்து நாம் எதுவும் செய்ய முடியாது. உதாரணமாக:
வயதும் உயரமும் – ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 12 வயதுக்குள் பூப்படைபவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது, இவை முற்றிலும் எதையும் சாராமல் வயதை மட்டுமே பொறுத்தக் காரணிகள். இதற்கு முக்கியக் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் பாதிக்கப்படுவதே ஆகும். பெண்கள் சராசரியை விட அதிக உயரமாக இருப்பதும் ஒரு ஆபத்துக் காரணியாகும். ஆனால் இதற்கான காரணம் இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

குடும்ப வரலாறு – ஒருவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ, நெருங்கிய உறவினருக்கோ மார்பகப் புற்றுநோய் அல்லது சினைப்பைப் புற்றுநோய் இருந்திருந்தால், அவருக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். மார்பகப் புற்றுநோய் பரம்பரை நோயாக வரும் என்று நிச்சயமாகக் கூற முடியாது, ஆனால் மார்பகப் புற்றுநோயுடன் சம்பந்தப்பட்ட BRAC1, BRAC2 அல்லது TP53 போன்ற மரபணுக்கள் ஒருவருக்கு இருந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
முன்னதாக புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருந்தால் – இதற்கு முன்பே உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருந்தால், அல்லது மார்பகத்தில், பரவாத புற்றுநோய் செல்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருந்தால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மார்பகத்தில் கெடுதல் விளைவிக்காத கட்டிகள் – மார்பகத்தில் கட்டி போன்று ஏதேனும் இருந்தால், அது புற்றுநோய் என்று அர்த்தமல்ல. ஆனால் சில வகைக் கட்டிகள் இருந்தால் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம் என்பதை மறுக்க முடியாது.

இப்போது, நமது கட்டுப்பாடில் உள்ள ஆபத்துக் காரணிகளைப் பற்றிப் பார்ப்போம். இவற்றைப் பற்றி இளம்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை அளிக்க வேண்டியது முக்கியம், அப்போது தான் புற்றுநோய் எப்படி வருகிறது என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை – நமக்கு வரக்கூடிய நோய்களுக்கும், நமது வாழ்க்கை முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. உடல் பருமன் என்பது புற்றுநோய்க்கு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கும் முக்கியமான ஓர் ஆபத்துக் காரணியாக உள்ளது. உடல் எடை அதிகமாக இருந்தால், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது, இது புற்றுநோய்க்கான ஓர் ஆபத்துக் காரணியாகும்.
ரசாயனச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களையும் தேவையற்ற நொறுக்குத்தீனி வகைகளையும் உண்ணும் பழக்கம் இளம் பெண்களிடையே இப்போது அதிகமாகக் காணப்படுகிறது. துரித உணவு, சிவப்பு இறைச்சி, கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவையும் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணிகளாகும். ஆரோக்கியமான பானங்களை அருந்தும் பழக்கத்தையும் ஆரோக்கியமான உணவுப்பொருள்களை உண்ணும் பழக்கத்தையும் அவர்களுக்குக் கொண்டுவர வேண்டும், அத்துடன் தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்யவும் வேண்டும், இவையெல்லாம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவும். தூங்காமல் இருப்பது உடல் தன்னைச் சரிசெய்துகொள்ளும் செயலைச் சீர்குலைக்கும், எனவே தினமும் போதுமான அளவு தூக்கமும் மிகவும் அவசியமாகும். இரவில் ஒளி படும்படி இருப்பதால், மார்பகப் புற்றுநோயிலிருந்து காப்பதாக அறியப்படும் மெலட்டனின் எனும் பொருளின் உற்பத்தி சீர்குலைகிறது.

தனிநபர் பராமரிப்புக்குப் பயன்படுத்தும் தயாரிப்புகள் – விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருள்களையும் பயன்படுத்திப் பார்ப்பதில் இளம் பெண்களுக்கு அதிக ஈடுபாடுள்ளது. அவற்றைப் பயன்படுத்தும் முன்பு அவர்கள் அதிகம் யோசிப்பதும் இல்லை.இதுபோன்ற சில தயாரிப்புகளில் ஈஸ்ட்ரோஜன் சார்ந்த பொருள்கள் உள்ளன. பெரும்பாலும் சோப்பு, ஷாம்பூ, டியோடரண்ட், கிரீம், பரு அல்லது முகப்பருக்கான கிரீம்கள், பெண்ணுறுப்பைக் கழுவுவதற்கான தயாரிப்புகள் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. ஈஸ்ட்ரோஜன் சேர்மங்கள் இல்லாத சரியான பொருள்களைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
மூலிகை வடிவிலான கூடுதல் சத்துப் பொருள்கள் – மாதவிடாய் சுழற்சியை சீர்ப்படுத்துவதற்காக மூலிகை வடிவிலான கூடுதல் சத்துப் பொருள்கள் அல்லது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீரற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் உள்ள இளைஞர்களிடையே மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. உங்கள் மகளின் மாதவிடாய் சுழற்சியின் விஷயத்தில் அக்கறையாக இருந்து கண்காணிக்க வேண்டும், கூடுதல் சத்துப்பொருள்கள் தேவைப்பட்டாலும் அவற்றை ஒரு குறிப்பிட்ட அளவே பயன்படுத்த வேண்டும்.

எடை குறைப்பதற்கான மருந்துகள் – இளைஞர்கள் தங்கள் எடையைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுவார்கள்.எடை குறைக்கிறேன் என்று அவர்கள் மோசமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள், எடை குறைப்புக்கான மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள் இவை அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கின்றன. முரட்டுத்தனமான (அதாவது உணவின் அளவை மிகவும் குறைப்பது அல்லது உணவைத் தவிர்ப்பது போன்ற) உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதால் எடை குறைந்து விடும் என்பது உண்மையல்ல, அதுமட்டுமின்றி மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறியதும் எடை மிகவும் அதிகமாகக் கூடிவிடும். அதோடு, இப்படியெல்லாம் செய்வதால் வளர்ச்சிக் காரணியும் ஈஸ்ட்ரோஜன் அளவும் குறைந்து, அதனால் பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். புரோட்டீன் பார்கள் அல்லது சோயா சார்ந்த புரோட்டீன் பவுடர்கள் போன்றவற்றில் அதிகம் ரசாயன செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஈஸ்ட்ரோஜன் சேர்மங்கள் இருக்கும். அதுபோன்ற கூடுதல் சத்துப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும், அதற்குப் பதிலாக சமச்சீரான உணவுத் திட்டத்தைப் பின்பற்றி தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை கூடுதல் சத்துப் பொருள்கள் தேவையென்றால் அவற்றை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மார்பக சுய பரிசோதனை – தங்கள் மார்பகங்களைப் பற்றி உங்கள் மகளுக்கு போதிய விழிப்புணர்வை உருவாக்குங்கள். அவர்களுக்கு தங்கள் மார்பகங்களைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும், மார்பகத்தை சுயமாகப் பரிசோதனை செய்துகொள்வது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, ஒவ்வொரு மாதமும் அதைச் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தவும். இந்த விழிப்புணர்வு அவர்களுக்கு இருந்தால், எதிர்காலத்தில் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதாக அல்லது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக அவர்களுக்குத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரிவிப்பார்கள்.
பல்வேறு புத்தகங்களையும் இணையதளங்களையும் படித்து மார்பகப் புற்றுநோயைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள அவர்களை ஊக்குவியுங்கள். மார்பகப் புற்றுநோய் பற்றி நீங்கள் உங்கள் மகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்யும்போது, நீங்கள் அதற்குப் பயன்படுத்தும் முறை சரியானதாக இருக்க வேண்டும், அது விழிப்புணர்வுக்குப் பதிலாக அவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தக் கூடாது. தினசரி பல் துலக்குவது, குளிப்பது போன்று மார்பகங்களை அக்கறையாகப் பார்த்துக்கொள்வதும் முக்கியம் என்று அவர்கள் உணரும்படி செய்யுங்கள்.
முன்னுதாரணமாக வாழுங்கள்!
உங்கள் மகள் உங்களைத் தான் முன் மாதிரியாக வைத்துப் பின்பற்றுவார், எனவே நீங்கள் உங்களை அக்கறையாகப் பார்த்துக்கொண்டால் அதே போல் அவரும் உங்களைப் பின்பற்றி தன்னை அக்கறையாகப் பார்த்துக்கொள்வார்.