Home பாலியல் வெள்ளைப்படுதல் நோயின் அறிகுறியும் – குணப்படுத்தும் மருந்தும்

வெள்ளைப்படுதல் நோயின் அறிகுறியும் – குணப்படுத்தும் மருந்தும்

22

Captureபெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப் படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

வெள்ளைப்படுதல் அறிகுறிகள் :

* பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

* வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

* வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

* சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

* வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

* இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல்.

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் :

* பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

* அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

* அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

வெள்ளை நோயைத் தவிர்க்க

* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

* நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து

இந்த வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்த இந்திய மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. மூலிகைகளைக் கொண்டே இதனை குணப்படுத்த இயலும்

மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி
பூண்டுப்பல் – 4
சின்ன வெங்காயம் – 4
நல்ல மிளகு – 5
சீரகம் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.