Home சமையல் குறிப்புகள் ருசியான சாமை சாம்பார் சாதம்

ருசியான சாமை சாம்பார் சாதம்

22

99d5cbe0-ea95-4128-a7c4-79da6f833c30_S_secvpfதேவையான பொருட்கள்:

சாமை அரிசி – ஒரு கப்

துவரம் பருப்பு – அரை கப்

வெங்காயம் – ஒன்று (அ) சாம்பார் வெங்காயம் – 10

தக்காளி – 3

கறிவேப்பிலை – சிறிது

கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், உருளை, வாழைக்காய் கலந்து – ஒரு பெரிய கப்

சாம்பார் பொடி (மிளகாய் + தனியா) – 3 தேக்கரண்டி

நெய் – 2 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் – சிறிது

தாளிக்க:

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு

மிளகாய் வற்றல் – 2

பெருங்காயம் – சிறிது

எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

*சாமை அரிசி மற்றும் துவரம் பருப்பைச் சுத்தம் செய்து ஊற வைக்கவும். காய்களை நறுக்கி வைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து சிவக்கவிட்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் நறுக்கிய காய் கலவையைச் சேர்த்து (வதங்க அதிக நேரம் எடுக்கும் காய்களை முதலில் சேர்த்து சிறிது வதக்கிய பிறகு மற்ற காய்களைச் சேர்த்து வதக்கலாம்), தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

*பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

*அதனுடன் தூள் வகைகளைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிட்டு, 4 முதல் 4 1/2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி சிம்மில் 15 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். கடைசியாக நெய் விட்டு கலந்து கொள்ளவும்.

*சுவையான சாமை சாம்பார் சாதம் தயார்.