Home பாலியல் மாதவிடாய் காலங்களில் பெண்கள் செய்யும் தவறுகள்

மாதவிடாய் காலங்களில் பெண்கள் செய்யும் தவறுகள்

20

மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின்போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.

* மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் தவறுகளுள் ஒன்று தான் உணவுகளைத் தவிர்ப்பது. நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உடலுக்கு தேவையான ஆற்றலை உணவுகள் தான் வழங்குகின்றன. அந்த உணவுகளைத் தவிர்த்தால், அதனாலேயே கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

* ஜங்க் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே மாதவிடாய் காலத்தில் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

* மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால், அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களால் கடுமையாக அவஸ்தைப்படக்கூடும். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

* பொதுவாக பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்கமாட்டார்கள். இப்படி தூங்காமல் இருந்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள்.

* மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம். இக்காலத்தில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

* யோகா, உடற்பயிற்சி போன்றவை உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியவை தான். ஆனால் அதை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்ப்பதே நல்லது.

* பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணி நோய்த்தொற்றுக்களையும், துர்நாற்றத்தையும் உண்டாக்கும். ஆகவே இக்காலத்தில் துணிகளுக்கு பதிலாக சுத்தமான சானிடரி பேடுகளைப் பயன்படுத்துவதே சிறந்தது