Home உறவு-காதல் பெண்களுக்கு எதிரான ஆண்களின் அடக்குமுறை

பெண்களுக்கு எதிரான ஆண்களின் அடக்குமுறை

23

images (1)உலகில் பெண்கள் சந்தித்துவரும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. உலகம் முழுவதுமே பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றன.

குழுவாகச் சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது உலகம் முழுவதுமே அதிகரித்துள்ளது என்பது ஆண்களின் வக்கிர மனதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு அத்துமீறலும், ஒவ்வொரு வன்முறையும் பெண்ணினத்தின் மீதான ஆண்களின் ஆணவப் போக்கையே காட்டுகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் ஒரு பெண்ணுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லையா? பெண்களின் உடையணியும் பாங்குதான் இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்பது கேட்டுக்கேட்டுப் புளித்துப் போன ஒரு வசனம்.

பள்ளிச் சிறுமிகளும், பச்சிளம் குழந்தைகளும்கூடச் சீரழிக்கப்படுகிறார்களே. இவர்கள் அணிந்திருக்கும் ஆடை, ஆண்களின் வக்கிரத்தைத் தூண்டும் அளவுக்கு ஆபாசமானதா? கல்லூரி வளாகத்துக்குள்ளேயும் பேருந்திலும் வைத்தே பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். மென்பொருள் நிறுவனமோ, ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் பெண்கள், உடல்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

நீதி சொல்லும் இடத்தில் இருக்கிறவர்களும், குற்றங்களைச் சுட்டிக்காட்டுகிற பணியில் இருக்கிறவர்களும் ஆண்களின் அடக்குமுறையில் இருந்தும் அத்துமீறலில் இருந்தும் தப்பிப்பது இல்லை. அடக்கமாக இருக்க வேண்டும், தலை முதல் கால்வரை உடையணிய வேண்டும், ஆறு மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது – இது போன்ற கட்டுப்பாடுகள்தான் பெண்களைக் காக்கும் கேடயமா? வெளியுலகம்தான் பெண்களை வதைக்கிறது என்று வீட்டுக்குள்ளேயே சிறைபட்டுக் கிடந்தாலும் குடும்ப அமைப்பு பாதுகாப்பானதாக இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.

வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடம் என்று எங்குப் பார்த்தாலும் பெண்களை உருக்குலைக்கும் ஆபத்துகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றன. ஆண்கள் மனதில் காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கமும், பெண்ணை ஒரு போகப் பொருளாக நினைப்பதும், ஆணுக்கு அடிமைத் தொழில் செய்வதற்கே பிறப்பெடுத்தவள் பெண் என்கிற கேவலமான எண்ணங்களுமே பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் தோற்றுவாய்.

முறைப்படுத்தப்படாத சட்டங்களும் இதுபோன்ற கொடுமைகள் அதிகரிக்கக் காரணம். கடுமையான சட்டங்கள் இருந்தும் அவற்றைச் செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதமே போதும், குற்றவாளிகள் அடுத்த தவறைச் செய்வதற்கு.