Home குழந்தை நலம் குழந்தை இப்போ வேண்டாமா..?

குழந்தை இப்போ வேண்டாமா..?

34

குழந்தை இப்போ வேண்டாமா..?

கர்ப்பத்தைத் தடை செய்வதாகச் சொல்லப்படுகிற மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோன் என இரண்டு விதமான பெண் ஹார்மோன்களை உள்ளடக்கியது. இவை இரண்டும் வேறு வேறு விகிதங்களில் கலக்கப்பட்டு, வெவ்வேறு பெயர்களில் கருத்தடை மாத்திரைகளாக விற்கப்படுகின்றன.

இந்த ஹார்மோன்கள் என்ன செய்யும்?

உங்கள் உடலில் மாதந்தோறும் உருவாகும் சினை முட்டையை சினைக்க விடாமல் தடுக்கும். அதன் விளைவாக உங்களின் கர்ப்பம் தடைப்படும். இந்த மாத்திரை கருத்தரிப்பதிலிருந்துதான் உங்களைக் காப்பாற்றுமே தவிர, பால் வினை நோய்களிலிருந்து ஒரு சதவிகிதம் கூடக் காப்பாற்றாது. இம்மாத்திரைகளை நாள் தவறாமல் எடுத்துக் கொள்பவர்களுக்குக் கட்டாயம் நூறு சதவிகிதம் பலன் நிச்சயம். ஆனால் நாள் தவறி எடுத்துக் கொண்டாலோ, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரத்தில் உட்கொண்டாலோ பலன் கிடைக்காமல் போகலாம். இன்று என்ன தேதி, என்ன கிழமை என்பதையே மறந்து போகிற அளவுக்கு மறதி மன்னியா நீங்கள்? கருத்தடை மாத்திரை சாப்பிட நீங்கள் தினசரி அலாரம் வைத்துக் கொண்டால்தான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.

பக்க விளைவுகளை உண்டாக்குமா கருத்தடை மாத்திரை?

நீண்ட நாட்களுக்குக் கர்ப்பத்தைத் தள்ளிப்போட நினைக்கிற பெண்களுக்கு இம்மாத்திரைகள் சரியான சாய்ஸ் என்பது மகப்பேறு மருத்துவர்களின் பரவலான அபிப்ராயம். ஆனாலும் இது உண்டாக்குகிற பக்க விளைவுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமே?

கருத்தடை மாத்திரை உட்கொள்கிற பெண்கள் தவறான ஆண்களின் தொடர்பில் சிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு விசித்திர ஆராய்ச்சி. கருத்தரிக்கப் போவதில்லை என்கிற தைரியத்தில் வாழ்க்கைத் துணை தேவை என்பதை மீறி, செக்ஸ் உறவுக்குத் துணை தேவை என்கிற எண்ணமே பிரதானமாக இருக்கும் என்பதால் மாத்திரை உட்கொள்கிற பெண்களுக்குத் தகாத உறவு உண்டாக வாய்ப்புகள் அதிகமாம். இது எப்படி இருக்கு?

ஏற்கனவே உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் ரோம வளர்ச்சி மேலும் அதிகரிக்கலாம். எனவே இப்படிப்பட்ட பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப வேறு மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் வைட்டமின் சி, பி 12 மற்றும் துத்தநாகச் சத்துக்கள் உடலிலிருந்து உறிஞ்சப்பட்டு விடுமாம். அவற்றை ஈடுகட்ட தினசரி உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி முடியாதவர்கள், வைட்டமின் மாத்திரைகளையாவது கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.

செக்ஸ் உறவு வேண்டும். ஆனால் கர்ப்பம் கூடாது என்பதற்காகத்தானே இந்த மாத்திரைகளே* ஆனால் பல பெண்களுக்கு இம்மாத்திரைகள் சாப்பிடுவதால் செக்ஸ் உறவில் நாட்டம் குறைகிறதாம். அப்படி உணர்கிற பெண்கள், ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள மாத்திரையாகப் பார்த்து சாப்பிடுவது நல்லது.
பைசா பெறாத விஷயத்துக்கெல்லாம் எரிச்சல், அர்த்தமில்லாமல் கோபம் போன்றவை கூட இம்மாத்திரைகளின் பக்க விளைவுகளாக இருக்கலாம். கண் பார்வையில் கோளாறு உண்டாவதும் கூட இம் மாத்திரை உட்கொள்கிற சிலர் சந்திக்கிற பிரச்சினையே*

மாத்திரையை எப்படித் தேர்ந்தெடுப்பது?

உங்கள் உடலில் உள்ள கோளாறுகளை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும். அவர் அவற்றுக்கேற்ப சரியான மாத்திரையை உங்களுக்குப் பரிந்துரைப்பார். மாத்திரை உட்கொள்ள ஆரம்பித்த முதல் சில மாதங்களில் சில பக்க விளைவுகள் இருப்பது சகஜம். பிறகு அது மறைய வேண்டும். அவை தொடர்கிற பட்சத்தில் குறைந்த டோஸ் கொண்ட மருந்துகளை உட்கொள்ளலாம்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுகிறவர்களுக்கு உடல் எடை பெருத்து விடும் என்பது தவறான நம்பிக்கை. இது பசியைத் தூண்டும் என்பதால் கொழுப்பு தவிர்த்து, சரி விகித உணவை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
கருத்தடை மாத்திரை உட்கொள்கிற பெண்களுக்கு இடுப்பெலும்பு தொடர்பான தொற்று நோய் வர வாய்ப்பில்லையாம்.

சினைப்பையில் புற்றுநோய் உண்டாவதற்கான அபாயத்தையும் இம்மாத்திரைகள் குறைக்கிறதாம். மாத்திரைகளை நிறுத்திய பிறகும் பல வருடங்கள் இந்தப் பாதுகாப்பு தொடருமாம்.