Home குழந்தை நலம் குழந்தை அழுவதற்கான காரணங்கள்

குழந்தை அழுவதற்கான காரணங்கள்

47

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அடிக்கடி அழும்போது, சரிசெய்வது என்பது கடினமான செயலாகும்.அது எதற்காக அழுகிறது என்று காரணம் கண்டறிவது என்பது ஒவ்வொரு தாயிக்கும் கடினமான ஒன்று.

குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை முதலில் நாம் உறுதி செய்ய வேண்டும். முதலில் குழந்தையின் அம்மா தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்தியபின், குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பினால் அது பசிக்கு அழுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

பால்குடித்த பின் பொதுவாக, குழந்தை 2 மணி நேரத்துக்குள் அழுதால், அது உறுதியாக பசிக்காக இல்லை. வேறு காரணமாக இருக்கலாம்.

பசியில்லை என்றால் அடுத்து, தாகம் எடுத்தாலும் குழந்தை அழுத்தொடங்கும். குறிப்பாக திட உணவு சாப்பிடும் குழந்தைக்கு ஒரு சில அம்மாக்கள் சாப்பாட்டை கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவதால் உணவு விக்கிக் கொண்டுவிடும்.

இதன் காரணமாக சாப்பிட்ட பிறகு குழந்தை அழ ஆரம்பிக்கும். அந்த நேரம் கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தை அழுகையை நிறுத்தும்.

பால் குடித்த பின் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற காரணங்களாலும், உள்ளாடை, படுக்கை விரிப்புகள் ஈரமாகி விட்டாலும். அதை நாம் அறிந்து கொள்ளவும், குழந்தை அழும். ஈரமான துணியை அகற்றிவிட்டால் அழுகையை நிறுத்திக் கொள்ளும்.

தனது உடலில் ஏதோ ஊர்வது போல் உணர்ந்தாலும் அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலும், தோலில் அரித்தாலோ குழந்தை அழும்.

குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சாதாரணமானது. குழந்தை அழும்போது தனது தொடைப்பகுதியை வயிற்றில் அழுத்தி வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி என்று நாம் தெரிந்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமான பால், அல்லது உணவைக் கொடுக்கும் போது, வயிறு உப்பி அழ தொடங்கும்.

சளி, மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழுவதுண்டு.