Home குழந்தை நலம் குழந்தைகள் மனசு புரியாத புதிரல்ல

குழந்தைகள் மனசு புரியாத புதிரல்ல

28

சார் என் பையனை என்ன செய்யணும்னு தெரியலை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். அடிக்கடி பொய் சொல்றான். மற்ற பசங்களை அடிக்கிறான்” என்று சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.

சிலருக்கு வேறு விதமான பிரச்சினை. “சார் ஒரு இடத்திலே இருக்க மாட்டேங்கிறான் சார். ஒரு வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக முடியலை. அங்க இருக்கிற சாமான்களையெல்லாம் எடுக்கிறான்.

உடைக்கிறான். ஓடுறான்” என்பார்கள். “விவரமாத்தான் இருக்கான். ஆனால் படிப்புல அதைக் காட்ட மாட்டேங்கிறான். மார்க் வாங்காம இருந்து என்ன புண்ணியம்?”. இது இன்னும் சில பெற்றோரின் புலம்பல்.

இன்று, கல்வி மற்றும் அதற்கான பணச் சுமை ஆகியவற்றால் குழந்தைகள், பெற்றோர்கள் இருவருக்குமே மன அழுத்தமும் நெருக்கடியும் உண்டாகின்றன. ஆனால் அறிவியல் யுகத்தில் இந்தப் பிரச்னையைச் சரியாகக் கையாண்டால் எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் என்பதை உறுதிசெய்ய முடியும்.

படிப்பு சாராக் கல்வி

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு, நினைவுத்திறன், பாலியல் உணர்வுகள், பாலியல் துன்புறுத்தல்கள், தேர்வு தொடர்பான பயம் என எல்லாவற்றையும் விலாவாரியாக குறிப்பாக, அடிப்பதாலோ வேறு தண்டனைகளைக் கொடுப்பதாலோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

இத்தகைய குழந்தைகளுக்கு விளையாட்டு, பரதநாட்டியம் போன்ற பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களிடமிருக்கும் திறன்களை வெளிப்படுத்த முடியும். தொடக்கக் கல்வி நிலையில் இருந்தே அவர்களுக்குப் படிப்பு சாராக் கல்வியும் (எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி) தகுந்த அளவில் கலந்து அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது பிரச்சினை உள்ள சிறுவர்கள் ஒரு குறிப்பிட்டத் துறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டும் நிலையில் சமுதாயத்தில் மிளிர்வார்கள்.

தரம் பிரிக்கும் தேர்வு

தேர்வு என்பது பத்துப் பன்னிரண்டு லட்சம் பள்ளி மாணவர்களை அவர்களின் கற்கும் திறன் அடிப்படையில், நினைவாற்றலின் அடிப்படையில் தரம் பிரிக்கும் ஒரு செயல்.

பொதுவாக ஒரு மாணவனின் ஆர்வம், வேட்கை எந்தத் துறையில் உள்ளது அவனால் அதைப் படிக்க இயலுமா என்பதை அறிந்து ஆலோசனை கூற வேண்டும். கணிதம் சுத்தமாக வராத மாணவனை பொறியியல் துறையில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இன்று பல்வேறு பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. படித்த மாணவன் மாநிலப் படத்திட்டத்தில் படித்தவனைவிடப் புத்திசாலி என்கிறார்கள். ஆனால் நம்முடைய பாடத்திட்டம் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே அனைத்துப் பாடத்திட்டங்களும் அடிப்படைக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் மனப்பாடம் செய்யவைத்து அவற்றை ஒப்பித்தலையோ அல்லது வாந்தி எடுத்தாற்போல எழுதுவதையோ மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. அளவில் வேண்டுமானால் மாறுபடலாம். அடிப்படை ஒன்றுதான்.

பிரத்யேகப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ தங்கள் குழந்தைகளிடமிருக்கும் பிரச்னைகளின் தன்மைகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும்.