Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்

32

Captureமாதவிலக்கு வருவது தவறி இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். கருவானது கர்ப்பப்பையில் தங்கும்போது, ரத்தக் கசிவு ஏற்படலாம். வயிற்றில் ஒருவித அழுத்தம் உணரப்படும். அதற்காகப் பயப்படத் தேவை இல்லை. மார்பகம் சற்று மென்மையானது போலவும், பெரிதானது போலவும் தோன்றும். சோர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி வரலாம்.

செய்ய வேண்டியவை :

முதலில், கர்ப்பம்தானா என்பதை வீட்டிலேயே எளிய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். இதற்கான ‘டெஸ்ட் கிட்’ மருந்துக்கடைகளில் கிடைக்கும். கர்ப்பத்தை உறுதிசெய்யும் சோதனை முறையும் அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். கர்ப்பம் உறுதியானதும் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறவேண்டும்.

ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, தைராய்டு, ஆர்.எச். ஃபேக்டர், ரத்த வகை, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ருபெல்லா கிருமித் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கண்டறியப்படும்.

சிறுநீரகப் பரிசோதனை மூலம் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இதய நோய், தைராய்டு பிரச்சனை போன்று வேறு உடல்நலக் குறைபாடு காரணமாக மாத்திரை மருந்துகள் ஏதேனும் எடுப்பவராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவற்றைத் தொடரலாம்.

தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற எந்தப் பிரச்சனைகளுக்கும் சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.

மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, ஃபோலிக் அமிலம், மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சத்தான உணவுகளை நன்றாகச் சாப்பிட வேண்டும். இது, வயிற்றில் வளரும் கருவுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகளை இயற்கையான முறையில் அளிக்கும்.

கருத்தரித்த சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரை குமட்டல் நீடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்சனை மூன்றாவது மாதத்திலேயே நின்றுவிடும். சிலருக்கு கர்ப்பக்காலம் முழுவதுமே லேசான குமட்டல் இருக்கலாம்.

வெறும் வயிற்றில் இருப்பதும் குமட்டலை அதிகரிக்கச் செய்யும். காலையில் ஏதேனும் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.

குறிப்பிட்ட நேர இடைவெளியில் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.